Thursday, July 26, 2012

செம்மொழிக் கவியின்பம் - புத்தாண்டு நன்னாள்

செம்மொழிக் கவியின்பம் - புத்தாண்டு நன்னாள்
 
புத்தாண்டுத் தமிழருக்குத் தைமுதல் நாள்
.. பூரிப்பாய்க் கதிரவன்முன் பொங்கல் வைப்போம்!
புத்தரிசி பானையிலே பொங்கும் போது
.. பொங்கலோ பொங்கல் என்றே நன்றி பொங்க
சத்தான விளைபொருளை வயல்கொழிக்கச்
.. சார்பான ஒளிவெப்பக் கதிரோன் தன்னை
முத்துப்போல் மழைத்துளிகள் ஈந்த வானை
.. மொத்தமுமாய் இயற்கையினைப் போற்றுகின்றோம்!
 
மாந்தருடன் வயல்வெளியில் சேர்ந்து ழைத்த
.. மாடுகளை நன்றியுடன் மறுநாள் போற்றி,
மாந்ததற்கு மகிழ்ச்சியினை மனத்துள் பொங்கும்
.. மாட்டுப்பொங் கல்நாளில் கொண்டாட் டத்தில்
நீந்துகின்ற மக்களுடன் உறவும் சேர
.. நெடுஞ்சாலை தனில் வண்டி மாடும் ஓடும்!
பூந்துளிர்போல் வளர்ந்துள்ள கன்னிப் பெண்ணும்
.. பொங்கிடும்நாள் மறுநாளாம் கன்னிப் பொங்கல்!
 
கன்னிபொங் கல்காணும் பொங்கல் என்று
.. காரணங்கள் பலவாக மூன்றாம் பொங்கல்
இன்பமுடன் கொண்டாடும் தமிழர் பண்பில்
.. இல்லத்தில் காணவரும் உறவை நட்பை
அன்போடு வரவேற்று விருந்த ளிப்போம்
.. அகம்மகிழக் காணுதற்கும் வெளியே செல்வோம்!
தன்னுள்ளம் கவர்ந்தவரை ஓரக் கண்ணால்
.. தாக்குதற்கும் பருவத்தேர் ஓடும் நன்னாள்!

No comments:

Post a Comment