Friday, July 27, 2012

செம்மொழிக் கவியின்பம் - தை பிறந்தால்...

செம்மொழிக் கவியின்பம் - தை பிறந்தால்...
 
சிற்றூரில் பேரூரில் தமிழினத்தார்
.. சிறப்பாகக் கொண்டாடும் தைப்பொங் கல்நாள்
உற்றதமிழ்ப் புத்தாண்டாய் உவக்கின் றோம்நாம்
.. உழுதுலகுக் குயிர்தருவார் நல்லு ழைப்பால்
பெற்றதனா லாம்விளைவைக் கண்டுவந்து
.. பெருமகிழ்வாய் பொங்கலெனும் விழாவெடுப்போம்!
கற்றோரும் மற்றோரும் கதிரோன் முன்னே
.. களிப்போடு படைத்திடுவார் பால்வெண் பொங்கல்!
 
கரும்புடனே இஞ்சிமஞ்சள் வெல்லம் எல்லாம்
.. கலயத்துப் பொங்கலுடன் இனிய காட்சி
தரும்விதத்தில் இல்லத்தில் பெறும் மகிழ்ச்சி
.. தாலியேற்றுச் சென்றமகள் துணைவனோடு
பெரும்மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளம் நீந்த
.. பெற்றோரின் விழிக்குளத்து வெள்ளம் காண்போம்!
வரும்மகிழ்ச்சி வதுவைக்குக் காத்திருப்போர்
.. வயதங்கே தைதைதை எனக் குதிக்கும்!
 
வழிபிறக்கும் தையிலென்று வரவேற்போடும்
.. வந்ததே தை சீர்செய்யச் செலவுக் கென்று
விழிபிதுங்கி நிற்போரும் வீணே காலம்
.. விரைகிறதே ஆண்டுகளாய் வயதும் என்றே
அழுகின்ற மௌனத்துக் காட்பட் டோரும்
.. அவதியுறும் நிலையில் துன்பத்தை மீறிக்
குழந்தைபெற மகள்வருகைக் குதூகலிப்பில்
.. குறைமறந்து குதிப்போரும் கொண்ட தையே!

No comments:

Post a Comment