Friday, August 31, 2012

நீயாக...

நீயாக...
 
நீயாக எனைத்தேடி வரவேண்டும் - என்றன்
நெஞ்சத்தில் முழுநிலவாய்ப் பால் ஒளியைத் தரவேண்டும்
ஓயாமல் உன் உறவைப் பெறத் தூண்டும் - என்றன்
உள்மனத்தில் உன்மனமும் ஐக்கியமுறவே வேண்டும்
- நீயாக எனைத்தேடி வரவேண்டும்!
 
கடலாம் எனக்கூட கருணை நதியாகி - தடைல்
கடந்திங்கே தனியாய் நீ வரவேண்டும்
உடலென்ன உயிரென்ன எவைபோனால் என்ன
ஒன்றுக்குள் ஒன்றாக இணைவோம் மீண்டும்
- நீயாக எனைத்தேடி வரவேண்டும்!
 
பிரித்தறிய முடியாத அணுவாய் வாழ்வோம் - பெரும்
பேதமுள்ள உலகமிது நாம் ஏன் தாழ்வோம்
சரித்திரமாய் மாறிடுவோம் சேர்ந்தே சாய்வோம் - காதல்
சங்கமத்தை உண்மை அன்பு ஒன்றே தூண்டும்
- நீயாக எனைத்தேடி வரவேண்டும்!

Thursday, August 30, 2012

ஊமை நாடகம்

ஊமை நாடகம்
 
கதிரவன் முகம் நோக்கிக் காத்திருந்தாய் - சூரிய
காந்தி மலரே நீ பூத்திருந்தாய்!
 
உன் ஊமை நாடகத்தை
என் என்று அவன் கண்டான்
சொல்லாமல் ஏன் பேதை பார்த்திருந்தாய்?
 
தெப்பக் குளத்தில் அவன்
வெப்பம் தணிந்திடவே
தாமரை மேல் கரம் நீட்டக்
களித்திருந்தான் - நீ
எப்படி எல்லாம் பாவம்
இதயம் திறந்து வைத்தாய்
ஏனவனோ நீர்மகளோடு
இனித்திருந்தான் - அவன் இனி திருந்தான்!
 
உன் மடமை நாடகத்தை
என் என்று அவன் கண்டான்?
சொல்லாமல் என் பேதை காத்திருந்தாய்?
 
தனக்குத்தான் அவன் என்று
தரைமீது தவம் செய்யும்
தாங்காத ஏமாற்றம் துக்கமடைந்தாய் - ஆசை
மனத்துக்குள்ளே நீயிட்ட
மாலையே சுருக்காச்சு
மகிழ்வாக நீரிலவன் பக்கமிருந்தான்!
 
உன் மடமை நாடகத்தை
என் என்று அவன் கண்டான்?
சொல்லாமல் என் பேதை காத்திருந்தாய்?

Wednesday, August 29, 2012

நேசித்த நெஞ்சம்

நேசித்த நெஞ்சம்
 
நேசித்த நெஞ்சம் மறக்காது - மனம்
நேர்மையை யிழந்திடில் சிறக்காது
பூசைக்கு மென்மலர் ரோஜாவும் - முள்
பொருந்திடும் காவலைத் துறக்காது
- நேசித்த நெஞ்சம்...
 
வாசித்த பாடந்தான் மறக்காது - மனம்
வருந்திடும் போதிலும் மறுக்காது
யாசித்துப் பெறுவதோ உயிர்க்காதல் - அது
என்றைக்கும் என்றைக்கும் இறக்காது
- நேசித்த நெஞ்சம்...
 
அழுகையிலும் எனக்கு ஒரு சுகமே - அதை
அளித்தவன் நினைவினில் கனக்கும் அகமே
தொழுதிடுவேன் இன்பச் சுமையினையும் - ஒரு
துணையென வைத்ததை வெறுக்காது
- நேசித்த நெஞ்சம்...

Tuesday, August 28, 2012

இறவாப் புகழ்

இறவாப் புகழ்
 
உரம்நிறை உள்ளமே உயர்ந்ததை எண்ணும்
அரிதென மலைக்கும் அச்சம் விலக்கும்
பெரிதோ சிறிதோ பிறர்நலம் பேண
உரிதாய் இருத்தல் உயர்செயல் ஆகும்
சரி எனும் முடிவில் சலனமே இலையெனில்
முறையுடன் முயன்றால் முடிதரும் முடிவு!
 
நற்பணி ஆற்றிட முற்படும் உறுதியில்
பற்பல தடைகளும் பயந்தடி பணியும்
செயற்படு முன்னே சிந்தனை தெளிவுறின்
வயப்படும் வெற்றி! வாய்த்திடும் வாழ்த்து!
நம்செயல் நல்கிடும் நன்மையால் மற்றவர்
தம்மனம் மகிழ்வது நம்மன நிறைவாம்!
 
செல்வமும் பதவியும் சேர்த்திடும் சிறப்பினும்
நல்லவர் நெஞ்சில் இடம்பெறல் உயர்வாம்
பிறந்தவர் இறவாப் புகழ்பெறத் தேவைகள்
சிறந்த எண்ணமும் செயலில் நேர்மையும்!
விதியின் பயனாய்ச் சதியைச் சகிப்பது
மதியின் மயக்க கதியினால் தானே!
எதையும் ஆய்ந்தபின் ஏற்பதோ தவிர்ப்பதோ
விதிஎனக் கொள்ளலே இதய வீறாம்!

Monday, August 27, 2012

கவிக்கனல்

கவிக்கனல்
 
உலகத்தை பாதிக்கும் அவலம் எல்லாம்
.. உண்மையுள்ள நற்கவிஞன் மனம்கிழிக்கும்
நலம்நாடும் அறிவாற்றல் கொண்டோர் ஆக்கும்
.. நான்குவரிக்கவியெனினும் கனல்பறக்கும்
மலரதுவும் கனல்மணக்கும் என்றே சொன்னான்
.. மாக்கவிஞன் பாரதிதான் மரபின் மன்னன்
சிலர்பலவாய் மொழிக்கலப்பைச் செருகி வைத்துச்
.. செப்புகவி காகிதப்பூ செயற்கை வாசம்!
 
வல்லெழுத்துச் சொற்களினால் வார்த்தெடுத்து
.. வரும்சினத்தில் கொட்டுகவி கனலை வீசும்!
சொல்லுக்குச் சூடேற்றும் பொருள்பொதிந்த
.. சூழலிலே சுழல்மனத்தால் இயக்கப் பெற்ற
கல்லாரின் பேச்சுமொழிக் கவிதை கூட
.. கனல்பறக்கும் கருத்துகளைக் கொட்டும் வெட்டும்
பொல்லாத கண்ணேறு கொடிதென்கின்றார்
.. பொன்மனத்தார் சினக்கவியும் பொசுக்கும் தீயாம்!
 
நெஞ்சினிலே கவிக்கனலாய்ப் பொங்கும் போது
.. நேரடியாய்ப் பேரிடியாய்த் தாக்கம் உண்டாம்
வஞ்சிக்கப் பட்டதனால் வாழ்விழந்தோர்
.. வழிகாணாச் சுழித்தோடும் காட்டாறாக
விஞ்சிவரும் வேகமுடன் விடிவுக் காக
.. வினையாற்றத் தூண்டுகவி சமைக்கும் தீயாம்!
கொஞ்சிநிற்கும் எளியவரைக் கேலி செய்யும்
.. கெடுமதியைச் சுடும்கவிகள் தேவை யாம்தீ!
 
வழக்குரைத்த காதையிலே இளங்கோ கொட்டும்
.. வார்த்தைகளே கண்ணகிவாய்க் கனலைக் கக்கும்
முழக்கமென நெருப்பாறு பாயக் கண்டோம்
.. முடிசரிந்து மன்னவனும் வீழக் கண்டோம்!
வழக்கியவன் செங்கோலை இழித்துப் பேசும்
.. வகையில்தீ வழிந்ததனால் மதுரை சாம்பல்!
கொழுப்பேறிக் கொழுந்தனவன் துகிலுரித்தான்
.. கொதித்தமனப் பாஞ்சாலி சபதம் தீப்பா!
 
சீவகனின் எழுச்சியைச்சுந்தரனார் பாடல்
.. செருமுகத்தில் வீரமெனும் கனலைக் கொள்ள
மேவிடவே படைவீரர் புடைத்து நின்றார்!
.. மேலவர்கள் சினம்படைக்கும் கவிதைச் செந்தீ!
கூவியழைத்துப் பகையை எதிர்க்கும் தீரர்
.. குரல்வலிமை வஞ்சினமாய்க் கவிகொதிக்கும்!
நாவுக்கு விருந்தாகும் சொல்லால் சுட்டு
.. நல்லவற்றை ஒழிக்கும்தீக் கவிவேண்டாமே!
 
திருட்டுவகை பலவாகித் தீய்க்கும் நாட்டை
.. தீட்டும்பாவூட்டுமுணர்வோட்டும் கேட்டை!
மிரட்டுகிற மதம்சாதி பேதம் நீங்க
.. மேலான மருந்தாக கவிதை ஓங்க
புரட்டுப்பொய் சூதுவஞ்சம் ஏய்ப்பு நோய்கள்
.. புன்மையெலாம் பொசுக்கிவிட புதுமை பூக்க
வரட்டுவேதாந்தமெனும் மயக்கம் தீர
.. வருங்கால நலம்சமைப்போம் கவித்தீயாலே!

Sunday, August 26, 2012

உள்ளும் புறமும்

உள்ளும் புறமும்
 
குடியரசு நாட்டினிலே சாலை யோரம்
.. குடிசையின்றி நெடுவானக் கூரையின் கீழ்
மடிபவர்க்கும் வாக்குரிமை கொடுத்தோம் என்பார்
.. மகாத்துமாவைப் படமாக்கி வைத்துக் கொண்டு!
நடிக்கின்றோம் நாமிந்த நாட்டு மக்கள்
.. நாதியற்றோர் வேதனைக்கு விடிவாய்க் கண்ணீர்
வடிக்கின்றோம் எழுதுகின்றோம் பேசு கின்றோம்
.. வாய்ப்பந்தல் யாருக்கு நிழல் கொடுக்கும்?
 
ஏட்டுக்குத் தகுந்தபடி கேட்டை நன்றே
.. என்றெழுதி பணம்பண்ணல் ஈனம் தானே!
பாட்டுக்குத் தக்கபடி அமைதல் பண்ணா?
.. பண்ணியல்பால் பாவத்தை மாற்றல் பாட்டா?
வீட்டுக்குள் குப்பைகளே குவிந்திருக்க
.. வெளிச்சுவரில் சுண்ணவண்ண வெளிச்சம் ஏய்ப்பு!
நாட்டுக்குப் பெயர்நீட்ட விளம்பரங்கள்
.. நாற்றிசையும் தன்மான வேட்டு வைப்பா?
 
தகுதியுள்ள தன் இனத்தான் உயர்வைப் பெற்றால்
.. தாங்காது மனங்கொதிப்போன் தமிழன் தானா?
பகுதிஎது விகுதிஎது அறியான் தன்னை
.. பைந்தமிழ்க்குக் காவலனாய்ப் பறையடித்தால்
மிகுதியுமாய் அகந்தையென்னும் சேற்றில் ஆழ்வான்
.. முற்றிவிட்டால் முருங்கையதும் குப்பை தானே?
வெகுமதியைப் பெறுவதற்கு வீசும் சொற்கள்
.. வெற்றோலிகள் எனக்கற்றோர் அறிவார் அன்றோ?

Saturday, August 25, 2012

விடியல்

விடியல்
 
நல்லவர்க்கும் அல்லவர்க்கும் விடியும் போழ்து
நாள்கணக்கில் திங்களென ஆண்டாய் ஓடும்
செயல்முறையில் செயல்திறனின் மாந்தருக்குச்
சிறப்பென்றும் இழிவென்றும் பெயர் கொடுக்கும்!
வல்லவர்கள் வாழ்முறையால் வரலாறாகி
வருவோர்க்குச் சான்றாக நிற்பார் என்றும்
பொல்லாங்கில் புகழ்பூக்க அன்றன்றைக்குப்
புதுவிடியல் எழிற்பொழிலில் திகழும் பூமி!
சென்ற இருள் குவியவரும் முன்னே நேரச்
செலவழிப்பில் இயன்றவரை நலங்கள் செய்யின்
நின்றுவளர் பயன்பாட்டில் நிரம்பும் நெஞ்சம்
நிமிடங்கள் அத்துணையும் வைரம் பொன்னாம்
தின்றுவளர்ந்திருப்பதற்கா உயிர்சுமப்போம்?
திட்டமிடத் தானுடலில் திடமாய் நெஞ்சம்!
நன்றியினை எதிர்பார்த்தா வானம் பூமி
நலம் கொழிக்க உலவிடுமே புவியும் காற்றும்!
கதிர் இருளைக் கொன்றவெற்றிப் படையலாகக்
காண்கின்றோம் விடியலெனும் வெளிச்சப் பாய்ச்சல்
புதிர் எங்கோ போய் ஒளிய இருளும் அந்திப்
போதினிலே மீண்டிங்கே பொருள் மறைக்கும்
நிதம் இந்தப் போராட்டம் இயற்கை காட்டும்
நெஞ்சிருளை அகற்றிடவே ஒளியைக் கூட்டும்!
விதம்பலவாய் இருந்தாலும் நீதி நேர்மை
விதிமுறைகள் மீறுமெனில் விபத்து தானே!

Friday, August 24, 2012

விரும்பினால்

விரும்பினால்
 
விருப்பத்தை அளந்துரைக்கக் கருவி இல்லை
.. வெறுப்புணர்வை உறுப்பியக்கம் வெளிப்படுத்தும்!
இருப்புவைத்துச் செலவழிக்கப் பணமா அன்பு?
.. இல்லையென்ப தியலாமை காட்டும் போக்கு!
பொறுப்புள்ளோர் எவ்வுயிர்க்கும் அளவில் அன்பு
.. பொங்கிடவே விருப்பமுற்றால் எங்கும் நன்மை!
குறிப்புணரும் நல்லவர்கள் துலாக்கோல் போலக்
.. குறைநிறையை மதிப்பிடவே விரும்புவார்கள்!
 
விருப்பம்போல் பதவித்தேர் ஓட்டம் எங்கும்
.. விருப்பம்போல் வலுத்தவரின் ஆட்டம் நன்றா?
தரித்திரர்கள் விருப்பமெல்லாம் பசிக்குத் தீனி!
.. தன்மானம் விரும்பிடுவோர் தரத்தில் தாழார்!
விரும்பியது வெற்றியென்றால் போதை ஏறும்!
.. விரைகின்ற காலத்தை விரய மாக்கும்!
விருப்பம் போல் சாய்வதற்கு நேர்மை நெஞ்சம்
.. விரும்பாது நடுநிலையே நல்லோர் நாட்டம்!
 
கோடாமை எனும்கொள்கை கொண்டோர் வாழ்வில்
.. கொடுமைகளே சூழ்ந்திடினும் காற்றின் போக்கில்
ஆடாது கற்றூணாய் நிலைத்தே நிற்பார்
.. அப்பாவி என்றவரை இகழ்வார் பொல்லார்!
கூடாத ஆசைகளைக் குவித்துக் கொண்டு
.. கூன்மனத்தார் உடல்நிமிர்த்தி நிற்கும் போதும்
வாடாத புகழவர்க்கு வாய்த்திடாது!
.. வரலாற்றுப் பொன்னேடும் விரும்பிடாதே!
 
இருக்கின்ற குடும்பத்தில் அவரவர்க்கும்
.. எழுகின்ற விருப்பம் வெவ்வேறே என்றால்
சுரக்கின்ற பாசந்தான் பொறுப்பாய் எந்த
.. சூழ்நிலைக்கும் உறவுகளை இறுக்கி வைக்கும்
பெருத்துள்ளோர் வசதியெல்லாம் இல்லார் தம்மைப்
.. பேணுதற்கே எனவிரும்பி வாழ்தல் பேறே!
விருப்பம்போல் நடந்துபிறர் நலத்தைத் தீய்த்து
.. வேரறுக்க விரும்புவது கொடுமை தானே!

Thursday, August 23, 2012

தீர்வு

தீர்வு
 
உணர்விருந்தால் தானதனை உடலம் என்போம்
.. உயிரிருந்தும் உணர்வின்றேல் சடலம் தானே!
மணமில்லை என்றாலும் மலர் வனப்பு
.. மகிழ்வூட்டும் மனம்பெற்ற மனிதனுக்குப்
பணத்துக்குத்தான் இயக்கம் எனும்நிலையில்
.. பழக்கத்தைக் கொண்டுவிட்டால் அவனை மாந்தர்
குணக்கேடன் எனக்கூறி ஒதுக்க வேண்டும்
.. குப்பையவன் செல்வமுடன் அவனுந் தானே!
 
கண்ணென்றால் இரக்கத்தைக் காட்ட வேண்டும்
.. கருதுமுளம் நலம்தீது கணிக்க வேண்டும்
திண்மையெனில் செயலாற்றல் துலங்க வேண்டும்
.. திருவாக்கும் அறிவாற்றல் திறமை வேண்டும்
வன்மையது விளம்பரத்தில் வனப்பிழக்கும்
.. வாழ்க்கைவழி வரலாற்றை வரைய வேண்டும்
உண்மையெனில் உலகொப்ப விளங்க வேண்டும்
.. உளஊற்றின் கனிவைத்தான் உலகம் ஒப்பும்!
 
இளைத்தவரை வன்முறையால் சாகடிக்கும்
.. இழிந்தவர்மேல் சினங்கொள்ளா இதயம் கல்லே!
முளைத்துவளர் பகைமுள்ளின் முனைமுறிக்கும்
.. முனைப்பின்றி இனப்பெருமை பேசி இங்கே
திளைக்கின்றார் தன்மானம் உடையோர் என்றே
.. திருடனுக்கும் முகம் அழகாய் இருப்பதுண்டு!
களைவளர்ந்து பயிரைவிட பசுமைத் தோற்றம்
.. காட்டுவதைக் கண்டுழவர் மகிழ்வதுண்டோ?
 
பாதரசப் பளபளப்பில் பதுங்கும் நஞ்சு
.. பார்த்தவுடன் புரிவதில்லை; பண்பட்டோர்நூல்
ஓதிவைத்த உண்மைகளை உளறல் என்போர்
.. ஊர்கொடுக்க உளம்மறைப்பார்! உணரும் நெஞ்சம்
சூதுதமைச் சுட்டெரிக்கு முன்பே நீங்கிச்
.. சொந்தமதித் தெளிவில்சூழ் நிலையை வெல்வார்!
தீதிழைப்போர் விதியனுப்பும் தூதர் என்றே
.. திடமாக நம்புவோர்க்குத் தீர்வே இல்லை!

Wednesday, August 22, 2012

வெற்றி எல்லை!

வெற்றி எல்லை!
 
பிறப்பிடத்தை வைத்துப்பேர் வருவதில்லை!
.. பெரும்பண்பே உயரிடத்தில் சேர்த்து வைக்கும்!
சிறப்பொருவர் விலைகொடுத்துப் பெறுவ தொன்றாய்ச்
.. சேர்த்திருக்கும் செல்வம்பேர் சீரழிக்கும்!
பறக்கின்ற பழங்கந்தல் கலச உச்சிப்
.. பற்றிக்கொண் டுயரத்தில் படபடக்கும்!
துறவிக்குத் துயில்கொள்ளத் துணையைத் தேடும்
.. துணிவென்றால் அவர்மடந்தான் தூய்மையாமோ?
 
தோகைமயில் ஆடுவதில் அழகு தோன்றும்
.. தோல்சுருக்கக் கிழவிநடம் துன்பம் சேர்க்கும்
வாகையினைச் சூடிவந்தோர் பணிவு நன்றாம்!
.. வாலிபத்தில் முடிநரைத்தல் வனப்பாகாதே!
ஈகையினால் வறியவனாய் ஈதல் துன்பம்
.. இணைந்தவரின் குணமறிந்தோர் இயக்கும் இன்பம்
போகுமிடம் தெரியாத புறப்பா டென்றால்
.. போயழுதால் வீணாண பொழுதா மீளும்?
 
எச்சரிக்கை விழிப்பிருந்தும் ஏமாற்றம்தான்
.. எப்படியோ வந்தணைத்தோர் இழப்பில் தள்ள
அச்சத்தில் அதன்விதியை நம்பிக் கொள்வான்
.. ஆனைக்கும் அடிசறுக்கும் எனத்தெ ளிந்தால்
உச்சியிலே இடிவிழுமென் றெண்ணிக் கைகள்
.. உயர்த்தியவாறொருநாளும் வெளியே செல்லான்!
துச்சமெனத் துன்பத்தைத் துப்பிச் செல்ல
.. துணித்தவரே துயர்கொள்வார் தொடுவார் வெற்றி!

Tuesday, August 21, 2012

வழிகள்

வழிகள்
 
பொய்யில் வாழ்வோர் புரட்டே விதிவழி
கையில் காசுளோர் களிக்கச் சதிவழி
மெய்ப்பா டென்பது உணர்வின் துணைவழி
மென்மையும் வன்மையும் எண்ணம் பெறும்வழி
நன்மையோ தீமையோ நடத்தை தரும்வழி
அன்பும் அறமுமே அமைதியாம் நல்வழி!
 
தையில் படைப்போம் தனிவழி என்கிறார்
தனிவழி எனினும் இனிப்பதே தகுவழி
இனிபின் தொடர்வோர் இன்புறப் புகும்வழி
மாற்றம் தூயதாய் மாறிடும் வழியிலே
ஏற்றம் இருப்பின் போற்றுவர் அனைவரும்!
ஆற்றும் செயல்களோ தூற்றும் நிலைபெறின்
மாற்றம் (ஏ)மாற்றமே எனப்புவி சாற்றுமே!
 
தனிவழி இரகசிய வழியெனில் இழிவது
தகுந்தவர் தொடர்ந்திட வரும்பயன் நேர்வழி
புதுவழி எதுவெனின் பொதுநலம் மிகும்வழி
புவிவிழி மகிழ்வுடன் போற்றிப் பாடிடும் வழி!
 
நல்வழி நாடிடும் நாள்களே சிறந்தவை
விதிப்பயன் வழியிலே வெல்லலாம் எனல்புகல்
விதிமுறைப் படிச்செயின் வெற்றியாவதை மொழி!
செல்வழி சிறந்திடச் சிந்தையில் இழிவொழி!
அல்வழி உந்திடும் ஆவலை நீகழி!
 
எவ்வழி நல்வழி அவ்வழி நம்வழி
செவ்விதின் உரைத்தவை செயல்திறன் நுழைவழி
ஊக்கம் பெருக்கலே ஆக்கம் பெறும்வழி
பூக்களின் வாழ்நாள் பொழுது சிறிதே!
ஆக்கும் மணமும் அழகும் பெரிதே!
நோக்க மிலாத வாழ்க்கை வெறிதே
ஏக்கமும் தாக்கமும் நீக்குதல் மதியே!

Monday, August 20, 2012

சமத்துவம் செழிக்க...

சமத்துவம் செழிக்க...
 
ஒதுங்காமல் ஒதுக்காமல் ஒன்று சேரும்
.. உணர்வாலே உருவாகும் சமத்து வந்தான்!
பதுங்கலின்றிப் பாய்தலின்றிப் பயன்கொடுக்கும்
.. பணிசெய்தால் வரும்பலன்கள் மக்கட் கானால்
பொதுவான் நண்மைசமத் துவமாய்ப் பூக்கும்!
.. புவிஉயிர்கள் ஒன்றையொன்று சார்ந்தே வாழும்
எதுவும்தான் பெரிதென்றும் என்னால் ஆகும்
.. எல்லாமும் எனும் அகந்தை இழிவில் வீழ்த்தும்!
 
திறமையெனல் அவரவர்க்கு வெவ்வேறாகும்!
.. தெரிந்துகொள்ளும் பெரியமனம் போற்றும் வாழ்த்து!
பெருங்குணத்தால் பிறக்குதவப் பெருமை சேரும்
.. பெறுகிறவர் துயர்நீங்கப் பார்த்தல் இன்பம்!
வறுமைஎன்ப துள்ளத்தில் நினைப்பில் வேண்டாம்!
.. வாழவைத்து வாழ்பவரே வள்ளம் என்போர்
உரமுடலில் உள்ளத்தில் உயர்ந்திருந்தால்
.. ஓருயிர்க்கும் கேடுசெய்யார் மனித தெய்வம்!
 
தாழ்வுமனம் பொறாமையுடன் எரிச்சல் கொள்ளும்!
.. தன்னைப்போல் பிறர்வாழ நினைப்பான் மேலோன்
சூழ்ந்துவரும் இன்பதுன்பம் எதுவென்றாலும்
.. சொல்செயலில் தூய்மையுள்ளோன் எதிலும் எங்கும்
பாழ்நிலையைக் கண்டவுடன் பதைத்தொழிப்பான்
.. பண்பாட்டால் சமத்துவமாம் பயிர்செழிக்கும்!
ஊழ்வினையென் றேசாமல் உதவி வாழ்ந்தால்
.. உறவாகும் சமத்துவத்தேர் ஓடும் நன்றே!

Sunday, August 19, 2012

பருவம்

பருவம்
 
இயல்பாகப் பழுக்காத ஒன்றை நாமும்
.. எழுமாசை மிகுதியினால் முன்ன தாகச்
செயற்கைவழி பலவந்தப் படுத்தும் போது
.. சேராது சாறோடு சத்தும் ஒத்து!
சுயமாக அறிகின்ற சொந்த புத்தி
.. சொலக் கேட்டுத் தெரிந்துகொள் வதினும் மேலாம்
முயலாமல் வெற்றியை நாம் எட்டல் இல்லை
.. முன்னேற்றம் இயல்பென்றால் மகிழ்ச்சி எல்லாம்!
 
முதிர்காலப் பக்குவத்தில் கதிர றுப்பார்
.. முற்றிவிடின் விழுந்துவிடும் உழைப்பே வீணாம்
எதிர்நோக்கும் காலத்தில் தெளிவு தேவை
.. என்றாலும் புதிர் இயறகை விதியும் மாறும்!
நதிநீர்போல் திரும்பாமல் ஓடும் காலம்
.. நழுவவிட்டால் அதுநம்மை நலிவில் தள்ளும்!
விதிமுறைகள் மீறாது விரையும் காலம்
.. வீண்செய்து பின் ஓலம் இட்டென் செய்ய?
 
காலம்பொன் போன்றதென்று மதிப்பாய்ச் சொல்வோம்
.. கையிலதைத் தக்கவைத்துக் கொள்ளல் ஆமா?
காலத்தைக் கருத்தாகக் கடைபிடித்துக்
.. கடனாற்றல் வாழ்க்கைக்கு வெற்றிச்  சேர்க்கும்
வேலாயு தம்கூர்மை சிதைந்திருக்க
.. விளங்காதவன் அதனை வீசல் வீணே
ஞாலத்தின் ஓட்டத்தில் பருவம் காணும்
.. நியதிக்கு மீறுவதும் நியாயம்தானா?

Saturday, August 18, 2012

சட்டமும் சத்தமும்

சட்டமும் சத்தமும்
 
சத்த மின்றியும் சட்டம் செயல்படும்
சத்தமாய்க் கத்துதல் சாதிக்கும் யுக்தியோ?
சட்டம் உடைந்த சுவர்படமாகச்
சத்தம் போடுவோர் சரியவும் கூடும்!
மௌனமும் உண்மையின் வலிமையை வாய்வழி
அமைதியாய் அழுத்தமாய் அம்பல மாக்குமே!
சிந்தனையின் திறன் செயலில் தெளிவாம்!
சத்த மிடுங்கால் சிந்தனை வருமோ?
ஓங்கிக் குத்தி ஒலியை எழுப்பினால்
தூங்குவோர் எழலாம்! துணிந்துபொய் சொல்லத்
துணைபலம் உள்ளோர் வழக்கு மன்றில்
நாணாப் பொய்யராய் நற்பெயர் பெறுவரோ?
சட்ட உண்மையைச் சாதிக்கவும் ஒலி
சத்தமாய் எழுப்பலாம் சிற்சில நேரம்!
சம்பா தனைக்காய்ச் சத்தம் போட்டு
நம்பவே நடிப்பது நாகரிகமா?
சக்தி யினாலும் சத்தம் போடுவான்!
சட்டம் மீறுதல் தண்டனைக் காட்படும்!
சத்தம் சீறலாய்ச் சரிவில் சாய்க்கும்
சட்டம் மதித்தல் சத்திய சாதனை
சத்தம் எழுப்பும் சந்தேகத்தையே!
சந்தேகம் நம் தேகத் தீமையே!
சத்தம் அறிவின் சத்துரு வாகும்!
சட்டம் அறிவு சார்ந்த ஆயுதம்!
சட்டம் பொதுவாய்ச் சமத்துவம் காக்கும்!
சத்தம் வேகமாய் அமைதியைப் போக்கும்!
சத்தம் எழுப்புதல் பலவீனம் தான்!
சத்தம் தடுத்திடச் சட்டமே உண்டு!

Friday, August 17, 2012

ஊருக்கு நல்லது

ஊருக்கு நல்லது
 
ஊருக்கு நல்லது சொல்வோன் - மன
உறுதியாய்ச் செயல்படும் உழைப்பினால் வெல்வான்!
பேருக்கும் புகழுக்கும் ஓடும் - இழி
பிறவியின் நெஞ்சமா பொதுநலம் நாடும்?
 
உழைப்பினால் பிழைப்பதே ஆண்மை - எனும்
உணர்வுகொண்டியங்குவோன் வாழ்க்கையே மேன்மை
விழைவுகள் ஒழுங்குறல் அடக்கம் - விதை
வீறுதான்! பாறையில் விழ எது முளைக்கும்?
 
யாருக்கும் பகை என நில்லான் - எனில்
யாவுமே சொந்தமாய் வளைப்பதில் வல்லான்!
வேருக்கு நீர்விடச் சொல்வான் - செடி
விடும் இலை காய்கனி தனக்காகக் கொள்வான்
 
உறவென நடிப்பது வஞ்சம் - பிறர்
உடைமையைக் கவர்வதில் துடித்திடும் நெஞ்சம்
மறந்திட நினைப்பது நன்றி - திரை
மறைவினில் வாழ்க்கையில் ஒழுக்கமே யின்றி
 
படிப்புநற் பண்புக்குத் தூரம் - எனப்
பார்க்கின்றோம் நடத்தையில் இது என்ன கோரம்?
நடிப்புக்குத் தானிங்கே ஆரம் - பொல்லா
நாநடை நளினம் நடத்திடும் சோரம்!
 
பகுத்தறிவு காட்டுவதே உண்மை - அந்தப்
பலத்தினால் பாதையை மாற்றலோ நுண்மை?
மிகுந்ததைப் பகுத்தீதல் இரக்கம் - வஞ்சம்
மெலிந்தோர யிகழவோ நெஞ்சினில் சுரக்கும்?
 

Thursday, August 16, 2012

உலக அமைதி

உலக அமைதி
 
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே
கலகம் அமைதியைக் கலைக்கும் குலைக்கும்
நிலவிடும் அன்பால் நீதியும் நியாயமும்
நிலைபெறும் என்பது நிச்சய உண்மை!
ஆக்குதல் அறிவின் ஆண்மைஎன் றானால்
போக்குதல் என்னும் புன்மையே போய்விடும்!
நல்லவர் வாழ்க்கையை வல்லவர் மாய்த்திடும்
தீத்திறம் ஒழிந்திடில் வாய்ப்பது நன்மையே!
செல்வமும் சிறப்பும் எல்லோர்க் கும்பொது
வல்லமை என்றால் வளர்ச்சியில் வேண்டும்
கூட்டிடும் செயல்களைக் காட்டலே ஆற்றல்
வையமோர் உடலெனில் வாழ்பல நாடுகள்
நாடி நரம்புகள் தசை எலும்பாகும்!
குருதியின் ஓட்டமே உறுப்புகள் இயக்கம்
ஒருநாட் டுதவியைப் பலநாடும் பெற
ஒருவன் ஆட்சியில் திகழுமே அமைதி
அதனதன் உயர்வை அனைவரும் மதித்தே
உதவவும் பெறவுமாய்ப் பொதுமை வளர்ப்போம்!
நிறமினம் என்னும் நிலைமைகள் தாண்டிப்
பரவிட வேண்டும் பண்புயர் பரப்பு!
சுட்டு விரலில் சுளுக்கென் றாலும்
சுகக்கே டென்றே அகம்துயர் உறுமே!
வையம் வாழும் மானிட சாதியில்
வாழ்வும் தாழ்வும் பொதுவென்றானால்
ஐயம் இன்றி அமைதியின் ஆட்சியில்
புவனம் தழுவப் பொங்குமே இன்பம்!
எம்மதம் சாரினும் நன்மதி விழைவெனில்
நிம்மதி வாழ்வினில் நிலவிடும் அமைதியே!
அழிக்கும் அலைகளை ஆக்கும் ஆற்றலாய்ச்
செழிப்புறச் செய்திடில் தழைக்கும் அமைதியே
வாழ்க மானுடம்! வாழ்க மானுடம்!

Wednesday, August 15, 2012

ஆசையும் அவசரமும்

ஆசையும் அவசரமும்
 
அவள்:
கதிரை அறுத்துச் சேர்த்துக்கட்டி
களத்துமேடு கோன்டு போயி
காவலுக்குப் போற மச்சான் காளிமுத்து - சூடா
கறியுஞ்சோறும் தின்னுட்டுப் போ மனசு ஒத்து
 
அவன்:
அப்பன் ஆத்தா அறியாமே
அக்கம் பக்கம் தெரியாமே
அவசரமா தூக்கி வந்த செல்லக்கண்ணு - தின்ன
ஆசையிருக்கு நேரமில்லே போடி பொண்ணு
 
அவள்:
தாலி கட்டப் போற ஆளு
தவிக்கணுமா இத்தனை நாளு
வேலி ஓரம் கொஞ்சம் குந்த லாகாதா - மனசு
வைச்சிப்புட்ட என் கவலை போகாதா?
 
அவன்:
கொஞ்சம் பேச நின்னுப் புட்டா
கொஞ்சிக் கெஞ்ச வருவே கிட்டே
கஞ்சிக் கில்லா பய வருவான் செல்லக்கண்ணு - இருட்டுக்
காலம் நெல்லைக் கசக்கிப் போவான் சொன்னேன் பொண்ணு
 
அவள்:
குளத்திலே நீ குளிச்சிருந்தே
குந்தியிருந்து நானும் பார்த்தேன்
கிளுகிளுப்பு கூடிப் போச்சு மச்சானே - எவன்
கிறுக்கு இந்தச் சிறுக்கிக்கின்னே வச்சானோ?
 
அவன்:
அத்தைமகன் தனக்குத் தான்னு
பித்தா ஒருத்தி காத்திருக்கா
சத்தியமா நீ தாண்டி எனக்குப் பத்தினி - எந்தச்
சந்தேகமும் வேணாம் இப்போ ஒத்து நீ
 
அவள்:
ஒத்திக்கத்தான் ஒளிஞ்சு வந்தேன்
எத்தனை நாள் காத்திருப்பேன்
செத்துப் போயிடுவேண்டா நானும் மச்சானே - வந்து
கொத்திப்போடா மொத்தம் உனக்கு நான் தானே
 
அவன்:
நெஞ்சா நினைவா நீ இருக்கே
நேரம் வரும்காத்திருக்கேன்
கொஞ்சம் கிளி அஞ்சிடாமே இருந்துக்கோ - நெல்லைக்
கொண்டு சேர்த்துக் காசு சேர்ப்பேன் பொறுத்துக்கோ
 
அவள்:
எந்த நிலமை எனக்குமிப்போ
வந்திருக்கு தெரிஞ்சுக்கோடா
சொந்த மாமன் புள்ளை அங்கே நிற்கிறான் - வந்துநீ
பந்தக்காலே சுருக்கா நட்டு வைக்கிறே

Tuesday, August 14, 2012

பொடியன் நானே!

பொடியன் நானே!
 
மாற்றாரை மதிக்கின்ற மாந்த நேயம்
.. மறுப்பினையும் நாகரிக மாக்கும் பேச்சு
வீற்றிருந்த பதவிக்கு மாண்பைச் சேர்க்கும்
.. வினைவலிமை மனம்காட்டும் தூய்மை வாய்மை
நேற்றிருந்த பெருமைகளை வெளிப்ப டுத்தும்
.. நினவாற்றலுடன் கவரும் கருத்து வீச்சு
தூற்றிடுவோ ருந்தொடர்ந்து கேட்கும் பேச்சின்
.. துணையிருந்த அண்ணாகைப் பொடியன் நானே!
 
எளியவரின் மனமேற்கப் புரியும் சொற்கள்
.. எள்ளிநகை யாடலிலும் துள்ளும் யின்பம்
புளியேப்பக் காரர்களின் புரட்டும் போக்கும்
.. புரியவைத்துத் தெளிவூட்டும் விரிந்த நோக்கு
துளியளவும் அகந்தைதனைக் கொள்ளா உள்ளம்
.. தொண்டரெலாம் அண்ணாவென் றழைக்கும் பாசம்
ஒளியேற்ற விரலிடுக்கில் அளவாய் நின்று
.. உறிஞ்சியபின் பொருள்பெருக்கும் பொடியன் நானே!
 
எழுத்தாலும் பேச்சாலும் எழுச்சி மூட்ட
.. எடுத்தபொடி அடுத்தபடி வேகம் கூட்டும்
அழுத்தமுடன் பெரியாரின் கொள்கைக் கொத்தே
.. ஆட்சியினை நடத்தியவர் மூக்குச் சொத்தாய்
நுழைந்தபெரும் பெருமைக்கே இருப்பானேன்நான்!
.. நுண்மதியின் சுறுசுறுப்பின் பொறுப்பும் ஆனேன்!
அழுக்கேற்றுவேன் எனினும் உடன்பிறப்பின்
.. அகந்தூய்மை செய்த அண்ணா பொடியன் நானே!

Monday, August 13, 2012

குளத்து நீரில்...

குளத்து நீரில்...
 
தண்ணீரை எடுக்கப் பெண் ஒருத்தி வந்தாள்
.. தரைவளர்ந்த தென்னைமரம் குளத்து நீராம்
கண்ணாடி தன்னில்தன் குலையைக் காட்டக்
.. கண்டதும் தன்முந்தானை போர்த்திக் கொண்டாள்
எண்ணத்தில் சிலிர்ப்பேற நிமிர்ந்தாள் பின்னே
.. இளங்காளை சிரிப்போடு நின்றி ருந்தான்
கண்மூடிக் குடந்தன்னைக் கவிழ்த்தாள் நீரில்
.. கலங்கிய நீரிலவன் அசைந்தான் ஆடி!
 
இடுப்பணிந்த ஆடையினை மடித்துக் கட்டி
.. இருந்ததனால் மறையாத கால்ந டுங்கத்
திடுக்கிட்டாள் பின்னவனின் துடுக்குப் பேச்சு!
.. தேங்காய் நான்பறிக்க வந்தேன் என்றான்!
வெடுக்கென்று சிரிப்புவர அடக்கப் பார்த்தாள்
.. விழுந்துவிடும் முத்துமெனக் கேதான் என்றான்
அடுத்தகணம் பூத்தமுகம் உயர்த்தி நோக்க
.. அம்புவிழி அவனிதயம் துளைத்த தம்மா!
 
நீர்நிறைந்த குடந்தன்னை இடையில் வைத்து
.. நீந்திசெலும் அன்னமவள் பின்னே சென்றான்
கார்குழலில் தாமரையைச் செருகி விட்டான்
.. கனமான குடமிடைக்கு வலிக்கும் என்றான்
பார்வையவள் திருப்பாமல் தலையில் வைத்த
.. பாரம்பூ தானென்று தொட்டால் பின்னே
போராடும் நெஞ்சுக்குப் பொறுமை ஏற்றிப்
.. "போய்வாநீ! ஊர்பார பொழுதில்" என்றான்
 
நெஞ்செடுத்து போனவள்பின் நின்றான் மூச்சும்
.. நின்றுவிட்ட தோவென்று தொட்டான் மார்பை
கொஞ்சிடவா கொஞ்சிடவா வந்தான் அங்கே
.. குறிப்பறிந்து நடப்பதற்கு நேரம் நேரும்
வஞ்சியவள் வஞ்சனையே இல்லா நெஞ்சாள்
.. வாடியபூ முகம்சுருக்கித் திரும்பிப் பார்த்தாள்
துஞ்சிவிடும் ஊர்நேரம் வாய்க்கும் என்று
.. தூக்கியகை அசைத்தபின்னே நடந்தாள் முன்னே!
 
மாலையிருள் புணரவரும் போதை நோக்கி
.. மனம்விரைய அத்தினமோ மெதுவாய்ச் செல்ல
சோலையென்று சொலக்கூடா தோப்பின் பக்கம்
.. சுற்றுமுற்றும் பார்த்தபடி தனியே சென்று
மூலையிலோர் பெருமூங்கிற் புதரின் பக்கம்
.. மூளையினக் குழப்பியவா றிருந்த நேரம்
சீலையொலி எழுப்பாத படி நடந்து
.. சேர்ந்தாளைச் சேர்த்தணைத்தான்! இல்லை பேச்சு!

Sunday, August 12, 2012

நிரம்பிய ஏரி நிரப்பிய மகிழ்ச்சி

நிரம்பிய ஏரி நிரப்பிய மகிழ்ச்சி
 
சிக்கராய புரத்துமலை மேலே ஏறிச்
.. செம்பரம்பாக் கத்தேரிக் கலங்கல் கண்டு
மிக்கமகிழ் வுற்றநாளை நினைத்தா லின்பம்!
.. மேற்கினிலே சூரியன்செங் கருமை மேகம்
பக்கத்தே யிருந்தொளியைப் பாய்ச்சி ஏரிப்
.. பரப்பின்மேல் பொன்வண்ணம் பூசிக் கொண்டு
தக்க இடம் எனநினைத்தே தண்ணீர்க் குள்ளே
.. தாவாமல் மிகமெதுவாய் அமிழ்ந்த காட்சி!
 
குன்றடுத்துத் தெரிகின்ற பெரிய ஊராம்
.. குன்றத்தூர் சேக்கிழாரின் பிறந்த ஊராம்
சென்றவ்வூர்த் தெருக்களிலே நடந்து நானும்
.. சிந்தமகிழ் வுற்றநாளை நினைக்கும் நெஞ்சு!
பின்புறத்தில் கீழ்த்திசையில் தெரியும் சிற்றூர்
.. பெருமைமிகு கோவூரின் பசுமைத் தோற்றம்
தென்புறத்தில் மலைமேலே கோயில் நன்று
.. தெரிகிறதே அதைத்திருநீர் மலை என்பார்கள்!
 
சுற்றிலும் என்கண்களுக்கு வயல்கள் தோப்பு
.. சூளைகளின் புகையிடையே மலையம்பாக்கம்
பற்றோடு மொழிவளர்த்தோர் தம்மூர்ப் பேரைப்
.. பைந்தமிழில் வழங்கியதை மகிழ்வேன் எண்ணி
சற்றேதான் தொலைவில்பூ விருந்த வல்லி
.. சார்ந்துள்ள ஊரேசெங் கழுநீர்க் குப்பம்
கற்றவரும் சான்றோரும் வாழ்ந்த ஊர்கள்
.. காற்றுவந்தென் உடல்தழுவும் மகிழ்ச்சி என்றும்!

Saturday, August 11, 2012

போலிகள்

போலிகள்
 
வரலாற்றைப் படைப்பவர்கள் வேண்டி யோரின்
.. வாழ்வை மட்டும் பதியாது மேன்மைப் பண்புக்(கு)
உரியவர்கள் அனைவரது சிறப்பும் கூறும்
.. உண்மையுள்ள உணர்வுடனே எழுத வேண்டும்
தரமான உருவாக்கம் என்றால் மாற்றார்
.. தகுதியையும் மறைக்காமல் குறிக்க வேண்டும்
நிரம்பியுள்ள பொருள்போலி எனத்தெரிந்தால்
.. நிறைமதியோர் குறைகளைய முன்னே நிற்க!
 
தன்னலத்துப் பேராசைப் பெருக்கம் ஓர்நாள்
.. தடம்மாறி தடுக்கிவிழத் தானே செய்யும்!
பொன்பொருளைத் தவறான வழியை நாடிப்
.. பொதிபொதியாய்ச் சேமித்து வைக்கத் தானே
பண்பாட்டுக் காரராக ஒழுக்கம் தன்னைப்
.. பேணாது தம்குடிக்கே இழிவைச் சேர்ப்பர்
முன்னிலையில் நல்லோர்கள் நகைத்தும் நாணா
.. முறைதவறிப் பெருங்குழியில் வீழ்ந்தே சாவார்!
 
போலிகளைப் போற்றிடுவோர் புனித வேடப்
.. பொருத்தத்தில் பொல்லாங்கை மறைக்கப் பார்ப்பர்
கோலெடுத்துக் கூத்தாட வைக்கக் காண்போம்
.. குறுமதியோர் செயலுக்குப் பேச்சுத் தாளம்
வாலசைந்தால் தலைக்குந்தான் அசைவுண் டாக்கும்
.. வழிதவறும் வளர்ச்சிக்குத் தான் தப் பாட்டம்
காலத்தின் ஓட்டத்தில் கயவர் நெஞ்சம்
.. காட்டுகிற கடும்வளர்ச்சிக் கொடுமை என்னே!

Friday, August 10, 2012

அவலக் கூத்து

அவலக் கூத்து
 
புதுக்கவிதை எனச்சொல்லி யாப்பைத் தள்ளும்
.. புன்செயலில் நமையெல்லாம் விருத்தம் என்னும்
மதுவினிலே மனமொன்றி மயங்க வைத்த
.. மாக்கவிஞன் கம்பனுக்கா பெருமை சேர்ப்பார்?
எதுவொன்றும் அளவுடனே அமைந்தால் தானே
.. இனிதாகும்; ஒலிஒளிக்கும் அளவுண் டன்றோ?
முதுமைதனில் இளவயதில் வளர்ச்சிக் கோலம்
.. முறைதவறல் முன்னேற்றம் எனச்சொல் வோமா?
 
உண்பதிலும் உடுப்பதிலும் ஒழுங்கை நாடும்
.. உணர்வுடையோர் உள ஒழுங்கைச் சிதைக்க லாமா?
கண்பதிவில் கவர்ச்சியெனல் அறிவின் மாட்சி
.. காட்டுதலில் நேர்மையுடன் கணித்த லாமே!
நண்பகலில் கோடையிலே நடக்கும் போழ்தில்
.. நடுங்குடுடல் பிணியிணைப்பைப் பேசும் தானே!
புண்படவே ஏசிடுவோர் நாவும் நாளும்
.. புன்மையுற நேர்ந்திடுதல் விந்தை யாமோ?
 
பகற்கனவை நனவென்பார் பலித்தல் கூடும்
.. பாடுபடா துண்ணுமுடல் ஏய்க்க ஓடும்
நகமழுக்கில் தோயாமல் நலங்கள் நாடும்
.. நஞ்சனையார் வஞ்சனையை யிகழும் ஏடும்!
சுகதுக்கம் பொதுவென்றால் உழைப்போர் மட்டும்
.. சோர்வினிலே கிடந்தழிதல் யாரின் சூச்சி?
தகவுடையார் மிகவுடைய தமிழ்நா டென்பார்
.. தக்கவழி காட்டியென யாரைச் சொல்ல?

Thursday, August 9, 2012

பயிற்சியும் பாராட்டும்

பயிற்சியும் பாராட்டும்
 
தடுக்கிவிழும் இடமெல்லாம் கவிஞர் கூட்டம்
.. தழைத்திருக்கும் எல்லாம் மூலிகைகள் தாமோ?
அடுக்கிவைத்தச் சொற்களெலாம் தேடிச் சேர்க்கும்
.. அரும்முயற்சி ஆரம்பம் வளர்ந்தால் நன்று
தொடுத்தகவி சிறப்பென்றே சொல்ல வைக்கத்
.. தொடர்பயிற்சி இயல்பாகித் தொடுமே வெற்றி!
மிடுக்குநடை வாய்க்கவரும் மொழியின் தேர்ச்சி
.. மெருகூட்டும் என்பதைத்தான் மறக்க லாமா?
 
நிலம்சேரும் மழைநீரால் பயிர்கள் வாழும்
.. நெடுவானைத் தொடுமரங்கள் பெயர்ந்தும் வீழும்
பலவானும் பால்குடித்துப் புரையால் சாவான்
.. படிக்கின்ற கருத்துள்ளப் பதிவாய் வாழச்
சிலவேனும் சொந்தமதி செடியின் பூவாய்ச்
.. சுகம்தரவே மணம்பரப்பும் விதமாய் வேண்டும்!
கலப்புமொழிக் கவிதையது புதிய போக்காய்க்
.. காட்டுதலில் முனைப்புறுவான் கற்றுக் குட்டி!
 
கலயத்தைக் காலியாக வைத்தி டாமல்
.. கருத்துகளால் நிரப்பிக்கற் பனையைச் சேர்த்து
நலமாகச் சமைப்பதுவே கலையாம் பாட்டாம்!
.. நாட்டவரும் கேட்டுப்பா ராட்டு வார்கள்!
குலம்பார்த்துப் பாராட்டிக் கொடுப்போர் கொண்ட
.. குணங்கேட்டைக் கொள்கைஎனல் கொடுங்கூற் றாகும்!
வலம்வருங்கால் ஒருகூட்டம் பின்னே செல்லும்
.. வரலாற்றை வற்புறுத்திப் படைத்தல் தீதே!

Wednesday, August 8, 2012

வாசிப்பு

வாசிப்பு
 
செலவழித்துத் தேடுபொருள் தாரா இன்பம்
.. சேர்க்கின்ற அறிவமுதின் திரட்டாய் உன்னுள்
பல அழியாப் பொருள்களுடன் பண்பை யூட்டிப்
.. பக்கத்தில் துணையிருந்து தக்க நேரம்
நலம்விளைக்கும் வளநிதியே! உளம்விரும்பும்
.. நன்மைதரும் அறிவுநூலே! மனமே மாறிச்
சிலபோதே உனைத்தீண்டா திருந்தாலும் நீ
.. சினவாமல் என்சிந்தை உறவா வாயே!
 
தாள்மீது விழிபாய்ச்சித் தகவல் சேர்த்துத்
.. தரமாக எழுதிடவும் மேடை யேறி
நாளெல்லாம் பேசிடவும் நற்கருத்தால்
.. நாடுபுகழ் நல்லறிஞனாக என்னைத்
தோள்சுமக்கப் பொன்னாடை பூவா ரத்தால்
.. துவளாமல் வாழ்த்தொலிகள் முழங்கக் கேட்கும்
ஆளாக்கி வைத்துமகிழ் வூட்டும் நூலே!
.. அறிவாழி, அறவாழி, என்வாழ்வேநீ!
 
கன்னிமரா நூலகத்தில் அறிஞர் அண்ணா
.. கைப்படாத நூலொன்றும் இல்லை என்பார்!
சொன்னயமும் பொருள்நயமும் சொட்டும் வண்ணம்
.. சொக்கவைக்கும் உவமைகளை எழுத்தில் பேச்சில்
பன்மணிசேர் மாலையாக அள்ளி வீசிப்
.. பாசநேரம் பரிமளிக்க அறிவோ டாற்றல்
மின்னலதன் கீற்றாய்ப்பொன் ஒளியைப் பாய்ச்சும்
.. மேனிலையுண் டாக்குபவை நூல்கள் தாமே!
 
பிணியுற்றுப் படுக்கையிலே இருந்த போதும்
.. பெருமிதமாய் தம்கையில் படித்த நூலைப்
பணிவோடு மருத்துவர்முன் நீட்டிக் காட்டிப்
.. படித்திடுவேன் இருநாளில் முற்றும் பின்னர்
துணிந்திடுவேன் அறுவைக்கே என்றார் அண்ணா!
.. தூயவர்க்கு நூற்படிப்பில் ஆர்வம் என்னே!
அணிமணிகள் அலங்காரம் சிறப்பே அல்ல!
.. அறிவுடையோர்க் கழகென்றும் நூல்வா சிப்பே!

Tuesday, August 7, 2012

நூல்கள்

நூல்கள்
 
கைப்பிடித்து நடக்கின்ற உறவைப் போலக்
.. கட்டிலிலே திறந்தபடி பக்கம் காணப்
பைக்குள்ளே பத்திரமாய் இருக்கும் சொத்தாய்ப்
.. பலவின்பப் பொருளடக்கி அமைதி யாக
வைப்புநிதி எனமதிக்கும் மாண்பை ஒத்து
.. வைத்திருக்கப் பிறர்போற்றும் பெருமை யோடு
தைத்திடவே அறிவுறுத்தும் சான்றோர் ஞானத்
.. தடங்களைநாம் தொடர்ந்திடவே துணையாம் நூலகள்!
 
படித்தறிந்து பண்புகளை வளர்த்துக் கொள்ளும்
.. பயிற்சியினால் பார்போற்றும் பாங்கில் வாழ
முடியுமென்னும் சான்றுகளாய் முன்னோர் சென்ற
.. முறைமைகளின் தடம்பற்றிச் செல்ல வெல்ல
அடிப்படையாம் பொதுஅறிவை வளர்த்துக் கொள்ள
.. ஆர்வமுடன் பொருள்விளங்கப் படிக்கும் நூல்கள்
படிப்படியாய் எண்ணம்சொல் செயல்கள் யாவும்
.. பக்குவமாய்ப் பண்படுத்திச் சிறப்பைச் சேர்க்கும்!
 
பன்னாட்டு நல்லறிஞர் கருத்து வாழ்வு
.. பலதுறையில் வல்லுநர்கள் புலமை மேன்மை
பொன்மொழிகள் குறிக்கோள்கள் ஆய்வு நோக்கு
.. புதிர்களுக்குப் பொருத்தமுற விடைகள் வாழ்வின்
இன்பங்கள் இன்னல்கள் தாக்கம் நீக்கம்
.. என்றெங்கே என்னென்ன மாற்றம் சீற்றம்
வென்றபினும் நொந்தழியும் சிந்தை விந்தை
.. விதம்பலவாம் நிதம்படிக்க உதவும் நூல்கள்!

Monday, August 6, 2012

மாறா மதிப்பீடு

மாறா மதிப்பீடு
 
படைப்பவன் தினமும் படிப்பவனானால்
.. பதிந்திடும் பண்புகள் பலவும்!
.. பலர்க்கிது தெரிந்தும் பதித்திட மனத்தில்
.. பற்றிட மறுப்பது நலமோ?
 
உடைபடும் கிளையும் உடனடி துளிர்த்தே
.. உதவிடும் கருத்தினில் நிலவும்!
.. உயர்த்திடும் உண்மை உறுதியில் நன்மை
.. உண்டெனக் கொண்டிடல் பலமே!
 
கொடுத்திடும் குணத்தைக் கெடுப்பவன் அடையும்
.. குதூகலம் வஞ்சகம் மடமை!
.. குறும்பினை விரும்பிக் குதர்க்கமாய் உரையில்
.. குறுக்கிடல் இழிவெனப் படுமே!
 
விடுத்தவர் மறைய அடுத்தவன் சதியில்
.. விபத்தெனச் சிக்குதல் கொடுமை!
.. விலைகொடுத் துயர்வை விரும்பியே பெற்று
.. வீரனாய் நடிப்பதும் கெடுமே!
 
விதிமுறை மீறிடும் சதிசெயல் யாவையும்
.. விளம்பர வெளிச்சமா மறைக்கும்?
.. வேற்றுமை வளர்ப்பவர் நாட்டிலே உயர்ந்திடும்
.. விந்தையா தீமைகள் குறைக்கும்?
 
நதியினில் பெருகிடும் நீரினைப் பதுக்கிடும்
.. நஞ்சினர் நெஞ்சிலா மேன்மை?
.. நலிந்தவர் உழைப்பினை நரியாய் உறிஞ்சிடும்
.. நயவஞ் சகர்க்கா ஆண்மை?
 
நிதிகொடுத் துயர்வை நேர்மை யிலாவழி
.. நேயமாய்ப் பெறுவது கொடுமை!
.. நீதி பொதுவென நினையா மனத்தினர்
.. நெருக்கமாய் நிற்பவர் அடிமை!
 
சதிசெயல் ஊழலில் சேர்த்திடும் பெரும்பணம்
.. சத்தமற் றிருக்க வோ நாடு?
.. சந்ததி வாழ்ந்திடச் சொந்தநா டேய்த்திடும்
.. சழக்கரால் நேர்ந்திடும் கேடு!

Sunday, August 5, 2012

காலக் கணிப்பு

காலக் கணிப்பு
 
நில்லாமல் செல்லும் காலம் - நொடி
நிகழ்வுகளில் ஒன்றல் சீலம்
கல்லாமல் கடத்தும் காலம் - அது
கருத்துணர்வில் அழிக்கும் கோலம்
சொல்லாமல் விரையும் காலம் - அது
சுணக்கமிலாச் செயலின் மூலம்
வல்லாண்மை என்னும் காலம் - அதில்
வழுவாமை வெற்றி ஆளும்!
 
காலத்தின் நேர்மை கண்டு - நாம்
கடனாற்றின் நன்மை உண்டு
சீலத்தில் சிறந்தோர் என்போர்ச் - செயும்
சீர்பணி காலம் வெல்லும்
வேல்நுனிக் கூர்மை என்றால் - அதை
வீசுவோன் குறியே நன்றாம்
ஞாலத்தின் வரலாறெல்லாம் - பின்
நடப்போர்க்குப் பாடம் சொல்லும்
 
வளங்களை வகுக்கும் காலம் - ஒரு
வரையறை ஒழுங்கில் நீளும்
களங்களில் பொலிவை ஏற்றும் - அதன்
கதியிலே வளரும் மாற்றம்
காலத்தைச் சோதிடத்தால் - சிலர்
கணிப்பதுகண்கட்டு வித்தை
ஞாலத்தை வென்ற கவிஞன் - ச்சீ
சோதிடந் தனையிகழ் என்றான்!

Saturday, August 4, 2012

உண்மை வளர்க்கும் தண்மை

உண்மை வளர்க்கும் தண்மை

காணுதற்குக் கண்ணிருத்தல் போலே - இல்லறம்
பேணுதற்குப் பெண்ணிருப்ப தாலே
பூணுதற்கு நல்லொழுக்கம் அணியாம் - என்றும்
பொதுநலத்துக் குதவிடுவோன் மணியாம்
மனிதநேயம் தனைவளர்த்தல் சிறப்பு - அறத்தின்
மாண்புணர்ந்து பெருக்குதல் நல் பொறுப்பு
ஏந்துபுகழ் நிலைத்தலே நம் இருப்பு! - பிறரை
இழிவு செய்யும் மடமைக்கு நம் மறுப்பு!
கவிதை செய நல்லுணர்வே தூண்டும்! - புதுமை
கருத்துணர்த்தும் முறைமையிலே வேண்டும்!
செவிக்கு விருந் தளிப்பதிலே உண்மை - கூடச்
சிறப்பிருந்தால் சிந்தை சேரும் தண்மை.

Friday, August 3, 2012

கார்மேகக் காட்சி

கார்மேகக் காட்சி
 
உயர்வானில் கருமேகத் திரட்சி நெஞ்சில்
.. உருவாக்கும் சிந்தனைகள் வெவ்வேறாகும்
செயலேதோ நடக்கின்ற தோற்றம் காட்டும்
.. சிறுகுன்றின் மேல்மாட்டுமந்தை யென்பார்
புயலடித்ததால் பிய்ந்த குடிசைத் தோற்றம்
.. பூஞ்சோலைக் கிருள்மாலை போர்த்த காட்சி
துயர்தோய்ந்த குடும்பத்தார் உழைத்தலுத்துத்
.. துணியின்றித் துயில்காட்சி அவலம் என்பார்!
 
மார்பினிலே வேல்பாயப் போர்களத்தில்
.. மாண்டுகிடக்கும் மறவர் மனைவி மக்கள்
போர்வையெனக் கவிழ்ந்தபடி உடல்கள் மீது
.. பொங்கிவரும் கண்ணீரைச் சொரிந்தெழுந்தே
பாரந்தப் பகைவரது தலைகள் கொய்யப்
.. பாய்ந்துசெல என்மகனும் உள்ளான் என்றே
ஆர்த்தெழுந்து துடிக்கின்ற காட்சி என்றும்
.. அருங்கவிஞர் பாப்புனைய வைக்கத் தோன்றும்!
 
இரண்டுருளும் கருமேகம் பூமி நோக்கி
.. எப்போது பெருமழையாய்க் கொட்டும் என்று
மருண்டபடி மந்தைகளைக் கொட்டில் சேர்க்க
.. மனம்விரைய அதட்டியவா றோட்டிச் செல்லும்
சிறுவர்கள் பரபரப்பாய் இயங்குதற்குச்
.. சேர்ந்ததுவோ வான் திரைஅக் காட்சி என்றே
புருவத்தின் குடையாகக் கைவிரல்கள்
.. பொருந்திடவே வான்நோக்கி நின்றேன் நானே!

Thursday, August 2, 2012

அழகு

அழகு
 
விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போனதாய்ப்
பட்டுணர்ந் தோர்கள் பகரவே மாட்டார்
வீம்பென் றாலது விடமுடை பாம்பு!
விவேகம் சீறும் காளைக்குத் தாம்பு!
கண் அவனாகக் கருதிடும் மனைவியைப்
பெண் ஒளி விளக்காய்ப் பேணலே சிறப்பு!
மனநலம் மிக்க மனைவியைத் தக்க
மணம்கொளும் முன்னே மனமொன் றியவரின்
வினைகளே இன்ப துன்பத்தின் வித்தாம்!
கட்டிக் கொண்டவர் கட்டப் பட்டவர்
காதல் முன்னோ கடிமணம் பின்னோ
மோதல் இன்றேல் சாதனை தானே!
வேதனை யிருவர் விவேகமும் தடுக்கலாம்!
எதிர்ப் பார்ப்பென்பது இல்லறம் நல்லறம்
எனிலதில் ஏற்றத் தாழ்வுக் கிடமிலை!
வண்டியை யிழுப்பதில் சண்டித் தனமிலா
மாடுகள் தாமே வீடுபோய்ச் சேரும்!
மதித்தல் என்பது மனநலச் செயலே!
துதித்தல் என்பது பரிவின் விழைவே!
எதையும் சமமென ஏற்றிடும் பக்குவம்
சதையும் நகமுமாய்க் கதையை வளர்க்கும்
அதிகம் என்பது ஆபத்துக் கருகில்
அளவுடன் அமைவதே அழகாய் விளங்கும்
வண்ணப் பூச்சை வாரி யிரைத்த
சித்திரம் சிறப்பெனில் ஒத்துக் கொள்வோமா?
பெண்ணின் பெண்மையும் ஆணின் திண்மையும்
வண்ணம் அளவாய் வரைந்த நல்லோவியம்!
கண்ணில் வலம் இடம் காரணம் வைத்துப்
பார்வையின் சிறப்பைப் பகுத்தறி வாரோ?
வரம்பில் நிற்பதே வழங்கும் சிறப்பை!
இரும்போ துரும்போ எதற்கும் எல்லை
உண்டெனக் கொண்டிடில் உளநிறை வாமே!

Wednesday, August 1, 2012

சிறுமையும் பெருமையும்

சிறுமையும் பெருமையும்
 
முத்திரையால் மதிப்புயர்ந்த ஐந்து ரூபாய்
.. முழுரூபாய் அரைரூபாய் பெரிதானாலும்
அத்தனையும் தனக்கடக்கம் எனச் சிரிக்கும்!
.. அழகான உடலமைப்புக் குள்ளே மூளை
சொத்தாக விளங்குவது தோற்றம் கொண்டா?
.. சுன்னத்தை அழகாகச் சுழித்திருந்தும்
பத்தென்ப(து) ஒன்றுமுழு எண்ணால் தானே!
.. பதவிக்குப் பெருமைமதி வெளிச்சம் தானே?
 
கத்துவதை உச்சயிசைப் பாட்டென் போரைக்
.. கலைஞானம் உள்ளவராய்க் கணித்தல் குற்றம்!
மெத்தசுகம் வேண்டுமெனில் உழைப்பை நாட
.. மேனிக்குச் சுளுகென்போன் மேன்மை யோனா?
சுத்தியலைச் செய் இரும்பு வலிமை தந்தால்
.. தூக்கியதைப் பயன்படுத்த மரம்தான் காம்பு!
சத்தமின்றி ஓடுகின்ற காலம் காட்டும்
.. சாதனைத்தில் மணிமுள்ளே குட்டை தானே!
 
உருவுகண்டே எள்ளாமை வேண்டும் என்பார்
.. உண்மைக்கு விசுவரூபம் தேவை யில்லை!
இரும்பென்றால் துருப்பிடிக்கும் என்று தானே
.. எடுத்துக்கூர் தீட்டிடுவார் பயன்படுத்த!
அரும்சுவையாம் உணவுவகை என்றாலும் நம்
.. அளவுக்கு மீறினது வழி திரும்பும்!
பெருமைக்குத் தோற்றந்தான் ஏதென் பாரின்
.. பெருமூளை அடக்கத்தைக் கருதல் நன்றே!