Friday, August 17, 2012

ஊருக்கு நல்லது

ஊருக்கு நல்லது
 
ஊருக்கு நல்லது சொல்வோன் - மன
உறுதியாய்ச் செயல்படும் உழைப்பினால் வெல்வான்!
பேருக்கும் புகழுக்கும் ஓடும் - இழி
பிறவியின் நெஞ்சமா பொதுநலம் நாடும்?
 
உழைப்பினால் பிழைப்பதே ஆண்மை - எனும்
உணர்வுகொண்டியங்குவோன் வாழ்க்கையே மேன்மை
விழைவுகள் ஒழுங்குறல் அடக்கம் - விதை
வீறுதான்! பாறையில் விழ எது முளைக்கும்?
 
யாருக்கும் பகை என நில்லான் - எனில்
யாவுமே சொந்தமாய் வளைப்பதில் வல்லான்!
வேருக்கு நீர்விடச் சொல்வான் - செடி
விடும் இலை காய்கனி தனக்காகக் கொள்வான்
 
உறவென நடிப்பது வஞ்சம் - பிறர்
உடைமையைக் கவர்வதில் துடித்திடும் நெஞ்சம்
மறந்திட நினைப்பது நன்றி - திரை
மறைவினில் வாழ்க்கையில் ஒழுக்கமே யின்றி
 
படிப்புநற் பண்புக்குத் தூரம் - எனப்
பார்க்கின்றோம் நடத்தையில் இது என்ன கோரம்?
நடிப்புக்குத் தானிங்கே ஆரம் - பொல்லா
நாநடை நளினம் நடத்திடும் சோரம்!
 
பகுத்தறிவு காட்டுவதே உண்மை - அந்தப்
பலத்தினால் பாதையை மாற்றலோ நுண்மை?
மிகுந்ததைப் பகுத்தீதல் இரக்கம் - வஞ்சம்
மெலிந்தோர யிகழவோ நெஞ்சினில் சுரக்கும்?
 

No comments:

Post a Comment