Tuesday, August 28, 2012

இறவாப் புகழ்

இறவாப் புகழ்
 
உரம்நிறை உள்ளமே உயர்ந்ததை எண்ணும்
அரிதென மலைக்கும் அச்சம் விலக்கும்
பெரிதோ சிறிதோ பிறர்நலம் பேண
உரிதாய் இருத்தல் உயர்செயல் ஆகும்
சரி எனும் முடிவில் சலனமே இலையெனில்
முறையுடன் முயன்றால் முடிதரும் முடிவு!
 
நற்பணி ஆற்றிட முற்படும் உறுதியில்
பற்பல தடைகளும் பயந்தடி பணியும்
செயற்படு முன்னே சிந்தனை தெளிவுறின்
வயப்படும் வெற்றி! வாய்த்திடும் வாழ்த்து!
நம்செயல் நல்கிடும் நன்மையால் மற்றவர்
தம்மனம் மகிழ்வது நம்மன நிறைவாம்!
 
செல்வமும் பதவியும் சேர்த்திடும் சிறப்பினும்
நல்லவர் நெஞ்சில் இடம்பெறல் உயர்வாம்
பிறந்தவர் இறவாப் புகழ்பெறத் தேவைகள்
சிறந்த எண்ணமும் செயலில் நேர்மையும்!
விதியின் பயனாய்ச் சதியைச் சகிப்பது
மதியின் மயக்க கதியினால் தானே!
எதையும் ஆய்ந்தபின் ஏற்பதோ தவிர்ப்பதோ
விதிஎனக் கொள்ளலே இதய வீறாம்!

No comments:

Post a Comment