Monday, August 27, 2012

கவிக்கனல்

கவிக்கனல்
 
உலகத்தை பாதிக்கும் அவலம் எல்லாம்
.. உண்மையுள்ள நற்கவிஞன் மனம்கிழிக்கும்
நலம்நாடும் அறிவாற்றல் கொண்டோர் ஆக்கும்
.. நான்குவரிக்கவியெனினும் கனல்பறக்கும்
மலரதுவும் கனல்மணக்கும் என்றே சொன்னான்
.. மாக்கவிஞன் பாரதிதான் மரபின் மன்னன்
சிலர்பலவாய் மொழிக்கலப்பைச் செருகி வைத்துச்
.. செப்புகவி காகிதப்பூ செயற்கை வாசம்!
 
வல்லெழுத்துச் சொற்களினால் வார்த்தெடுத்து
.. வரும்சினத்தில் கொட்டுகவி கனலை வீசும்!
சொல்லுக்குச் சூடேற்றும் பொருள்பொதிந்த
.. சூழலிலே சுழல்மனத்தால் இயக்கப் பெற்ற
கல்லாரின் பேச்சுமொழிக் கவிதை கூட
.. கனல்பறக்கும் கருத்துகளைக் கொட்டும் வெட்டும்
பொல்லாத கண்ணேறு கொடிதென்கின்றார்
.. பொன்மனத்தார் சினக்கவியும் பொசுக்கும் தீயாம்!
 
நெஞ்சினிலே கவிக்கனலாய்ப் பொங்கும் போது
.. நேரடியாய்ப் பேரிடியாய்த் தாக்கம் உண்டாம்
வஞ்சிக்கப் பட்டதனால் வாழ்விழந்தோர்
.. வழிகாணாச் சுழித்தோடும் காட்டாறாக
விஞ்சிவரும் வேகமுடன் விடிவுக் காக
.. வினையாற்றத் தூண்டுகவி சமைக்கும் தீயாம்!
கொஞ்சிநிற்கும் எளியவரைக் கேலி செய்யும்
.. கெடுமதியைச் சுடும்கவிகள் தேவை யாம்தீ!
 
வழக்குரைத்த காதையிலே இளங்கோ கொட்டும்
.. வார்த்தைகளே கண்ணகிவாய்க் கனலைக் கக்கும்
முழக்கமென நெருப்பாறு பாயக் கண்டோம்
.. முடிசரிந்து மன்னவனும் வீழக் கண்டோம்!
வழக்கியவன் செங்கோலை இழித்துப் பேசும்
.. வகையில்தீ வழிந்ததனால் மதுரை சாம்பல்!
கொழுப்பேறிக் கொழுந்தனவன் துகிலுரித்தான்
.. கொதித்தமனப் பாஞ்சாலி சபதம் தீப்பா!
 
சீவகனின் எழுச்சியைச்சுந்தரனார் பாடல்
.. செருமுகத்தில் வீரமெனும் கனலைக் கொள்ள
மேவிடவே படைவீரர் புடைத்து நின்றார்!
.. மேலவர்கள் சினம்படைக்கும் கவிதைச் செந்தீ!
கூவியழைத்துப் பகையை எதிர்க்கும் தீரர்
.. குரல்வலிமை வஞ்சினமாய்க் கவிகொதிக்கும்!
நாவுக்கு விருந்தாகும் சொல்லால் சுட்டு
.. நல்லவற்றை ஒழிக்கும்தீக் கவிவேண்டாமே!
 
திருட்டுவகை பலவாகித் தீய்க்கும் நாட்டை
.. தீட்டும்பாவூட்டுமுணர்வோட்டும் கேட்டை!
மிரட்டுகிற மதம்சாதி பேதம் நீங்க
.. மேலான மருந்தாக கவிதை ஓங்க
புரட்டுப்பொய் சூதுவஞ்சம் ஏய்ப்பு நோய்கள்
.. புன்மையெலாம் பொசுக்கிவிட புதுமை பூக்க
வரட்டுவேதாந்தமெனும் மயக்கம் தீர
.. வருங்கால நலம்சமைப்போம் கவித்தீயாலே!

No comments:

Post a Comment