Wednesday, December 5, 2012

முடிவில்லா மூடம்

முடிவில்லா மூடம்
 
நீரோட்டம் இல்லாமல் நிலத்தை நம்பி
.. நீள்துயரில் உழுதொழிலார் நலியும் போதில்
தேரோட்டம் தேவனுக்குத் தேவை என்று
.. தேதியிலே திருவாரூர்த் தெருக்கள் தோறும்
போராட்டம் நடத்துவதாய் காலம் நேரம்
.. பொசுக்குவதில் அரசியலில் கட்சி மோதல்!
வேரோட்டச் சிந்தனைகள் ஆழம் சென்றால்
.. விளைவுஆலின் விழுதுகளாய் மனிதம் தங்கும்!
 
பூனைஒன்று தன்னெதிரே குறுக்கே ஓட
.. புறப்பட்ட மனிதனவன் புத்தி கெட்டு
போனாலும் காரியங்கள் நடவாதென்று
.. பொசுக்கென்று தன்போக்கை மாற்றிக் கொள்வான்
ஆனைவரும் மணியோசை நல்லதென்பான்
.. அதுமதத்தால் ஓடிவந்தால் எதிர்செல்வானா?
பானையிலே தண்ணீர்க்கொண்டொருத்தி வந்தால்
.. பாழ்சகுனம் எனும்மனக்கூன் நாய்வால் தானா?
 
ஆண்டவனின் பேர்பாடி ஒற்றைப் பார்ப்பான்
.. அவன்போக்கில் எதிர்வந்தால் சகுனம் தீதாம்!
மூண்டவஞ்ச நெஞ்சோடு நாட்டை ஏய்க்கும்
.. முனைப்புள்ள தலைவன்முன் போகலாமா?
தீண்டாதோர் நோண்டிவைத்த கிணற்று நீரும்
.. தீர்க்குந்தான் தாகத்தை! தொட்டால் தீட்டா?
பூண்டிஏரி வாஸ்துவழை அமைந்ததாலா
.. பொதுமக்கள் குடிநீராய்ச் சேறும் இங்கே?

Tuesday, December 4, 2012

இழப்பில் எழுந்த எண்ணம்

இழப்பில் எழுந்த எண்ணம்
 
விரல்களுக்குக் கனமேற்றும் மோதிரங்கள்
.. விதவிதமாய்ச் செல்வந்தர் அணிவதுண்டு
குரலெடுத்துப் பேசுங்கால் கையை நீட்டி
.. குறிப்பாகப் பலர்கண்கள் மேய வைப்பார்
ஒருவிரலில் பலவாகா வாய்ச்சொற் கேற்ப
.. ஒயில்நடன அசைவுகளாய்க் கையோ டாடி
எரிகின்ற விளக்கொளியில் கற்கள் மின்ன
.. எழில்சேர மதிப்புறுவார் பொன்னால் அன்னார்!
 
பொன்னணிகள் ஏதுமின்றி இருந்தேன் ஏதும்
.. போடாமல் விரலியல்பாய் இருக்க விட்டேன்
என்றாலும் உணவள்ளும் விரலில் பொன்னின்
.. இலேசான உரசலினால் நன்மை என்றே
சொன்னவர்கள் சொற்கேட்டுச் சபலம் கொண்டேன்
.. சுத்ததங்க பஸ்பமுண்ண என்னால் ஆமா?
என்னயிது? இவ்வயதில் பொன்னாசையா?
.. எனையிடித்துத் துணைவியவள் மகிழ்ந்த துண்மை!
 
சென்றவாரம் மூன்றுதினம் காய்ச்சல் கண்டு
.. செயலொடுங்கி இருக்கவுடல் இளைத்த தாலே
என்விரலை விட்டுவிடு தலையாய்க் கீழே
.. எங்கேயோ தொலைந்(து)ஆழி வருத்தம் உண்மை!
அன்றாடம் காலைநடைப் பொழுதில் எங்கோ
.. அதுநழுவிப் போனதனால் இழப்பென்றாலும்
நன்றாமே ஓரேழைக் கண்டெடுத்தால்
.. நலிவுக்கும் மெலிவுக்கும் உதவும் தானே!

Monday, December 3, 2012

பாடுகவே பாவேந்தர் பாட்டு

பாடுகவே பாவேந்தர் பாட்டு
 
செஞ்சொல்லில் கவியின்பம் தரவே - புரட்சி
செய்தோரே பாவேந்தர் காப்பியங்கள் பெறவே
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - கவிதை
சாற்றுகிற தேனமுதே சத்துமிகு ஊறல்
நெஞ்சுணரப் புரட்சிக்கவி கூறல் - பெரும்
நெருப்பாகப் பகையழித்துத் தடுக்கும் எல்லை மீறல்
அஞ்சாத வீரத்தாய் காதை - அரசி
அழித்தனளே ஆய்ந்தறிந்தே அயலவரின் சூதை
 
மாந்தோப்பில் மணங்கூட்டும் காதல் - ஒத்த
மனம்முறிக்கத் துணிந்தோரின் குணம் பணிந்தா சாதல்?
தீந்தமிழர் வாழ்வியலில் பெருமை - பாவாய்த்
தீட்டியதோர் ஓட்டநடைத் தெளிவெண்ணல் அருமை
ஏந்திவரும் தமிழுணர்வின் சாறு - யாப்பில்
ஏறிவர ஊறிடும்நா இனிக்குமெனக் கூறு
மாந்திடவே அமுதமென ஆறாய் - வேந்தர்
மணிக்கவிதை இனநலத்தின் வெள்ளமெனப் பாராய்
 
பெண்ணுக்கு நீதி சொல்ல வாசி - பெண்மை
பேணுவதும் போற்றுவதும் பெருமை என்றோசி
கண்ணிருந்தும் கைம்மை வரவேற்போர் - அவர்தம்
கற்றறிவை உற்றறிந்தும் யாரவரை ஏற்பார்?
மண்ணகத்தைத் தாயென்றே உரைப்பார் - குலத்தின்
மரபுதனை வளர்ப்பவனை மதியாமல் மிதிப்பார்
எண்ணற்ற வகையிழிவைச் செய்வார் - தம்மை
ஏலாது விழிப்புறவே ஏற்றிடடா கவிப்போர்!

Sunday, December 2, 2012

நகைப்பாய் நெஞ்சே!


நகைப்பாய் நெஞ்சே!
 
வசதியுள்ளோன் வாய்திறந்து கொட்டுகின்ற
.. வார்த்தையெல்லாம் கவிதையென்பார் நாணமின்றி
பசப்புமொழி பகல்வேடப் போர்வை என்று
.. பகுத்துணரார் இன்சொல்லே என்றுரைப்பார்
கசப்புணர்வுக் காரணத்தால் கருத்தை எட்டிக்
.. காயிலிதில் என்னசுவை என்பார்; காய்ச்சல்
வசமானோர் நிசமுணர்ந்தும் நிழலே என்பார்
.. வாழிடமே பாழிடந்தான்! நகைப்பாய் நெஞ்சே!
 
கலைவல்லார் அரங்கத்தில் கீழிருக்கக்
.. கவர்ச்சியுடை யாளொருத்தி மேடை யேறி
அலைவிழியைச் சுழற்றியங்குக் காலை ஆட்டும்
.. அவலத்தை ரசிப்பானோ அறிவு ஜீவி
கலைவல்லார் குழுவுனிலே கலந்து கொள்ளக்
.. கடுகளவு பகுத்தறிவும் இல்லாம் கட்சித்
தலைவனுக்குத் தோல்கொடுப்பேன் என்று பேசும்
.. தமிழ்க் கொலைக்கும் தட்டும்கை! நகைப்பாய் நெஞ்சே!
 
படம்பிடித்தால் முகங்காட்ட பறந்து சென்று
.. பார்த்தாங்கே முதல்வரிசை அமர்ந்து கொள்ள
இடமில்லை எனத்தெரிந்தும் மேடை யுள்ள
.. எவருக்கோ தெரிந்தவர்போல் விரைந்து சென்றே
அடமாக அவரோடு பேசும் போக்கில்
.. அங்கேஒளிப் படத்தில்தான் விழுந்த பின்னே
குடத்தேனைக் குடித்த மகிழ்வோடு காணும்
.. குறுமதியோர் நடிப்புதனை நகைப்பாய் நெஞ்சே!

Friday, November 30, 2012

இல்லை

இல்லை
 
தொல்லையென நினைப்போர்க்குச் சொந்தம் இல்லை
.. தொலைவென்று தயங்குவோன்முன்னேறிச்செல்லான்!
இல்லையெனக் கிடப்போர்க் கெந்நாளும் தொல்லை
.. எதிர்பார்த்தே வாழ்வோர்க்கே மாற்றம் என்றும்
சொல்லளந்து பேசுவோர்க்குக் குழப்பம் இல்லை
.. சோர்ந்திருளில் அழுவோர்க்கு விடிவே இல்லை
வில்லுக்கு வளையாமல் வேகம் இல்லை
.. வீம்புக்கும் வெறுப்புக்கும் விவேகம் இல்லை!
 
தரைதொடுமுன் மழைத்துளிக்கு நிறமே இல்லை
.. தாங்குங்கோல் உளுத்துவிடின் பாழாம் பந்தல்
உரைப்பதிலே பொருளின்றேல் உளறல் ஆகும்
.. ஊமையென இருந்துவிடில் உண்மை பொய்யாம்
கரையிடுதல் காத்தலுக்கே அழகு மட்டும்
.. காட்டுவதானாலதுவும் ஓட்டைச் சட்டி
அரைகுறைகள் அடங்காமல் ஆர்பரித்தால்
.. அழகில்லை! அறிவீனம் ஆண்மை யாமோ?
 
முள்வேலி தனைத் தாண்டி ஓடும் ஆடு
.. முட்டியுடைபட்டதனை நினைத்தல் இல்லை
எள்ளில் நெய் நசுக்காமல் கிடைப்பதில்லை
.. எலும்பின்மேல் தசையின்றேல் உருவம் இல்லை
கள்ளுக்குப் போதையின்றேல் மதிப்பே இல்லை
.. கடமைக்குக் கையூட்டால் பெருமை இல்லை
தள்ளுபடி விலைப்பொருள்கள் தரத்தில் இல்லை
.. தகர்த்திடுதல் தீமையெனில் குற்றம் இல்லை!

Thursday, November 29, 2012

எண்ணத் துளிகள்

எண்ணத் துளிகள்
 
உறவைப் பெருக்கும் உணர்வில் சிறக்கும்
திறமே ஒழுங்கின் திடம்
 
திடத்தை உடல்கொண் டிருத்தலின் மேலாம்
நடத்தையில் சீர்மை நவில்
 
நவிலும் நலம்பல நாளும்மேற் சேர்ந்தும்
அவிக்கும் அழுக்கா(று) அறை
 
அறையில் ஒழுங்கின்மை அம்பலம் வந்தால்
இறைதடுத்தும் ஓங்கும் இழிவு
 
இழிவில் விழுந்தோரை இவ்வையம் தூற்றும்
ஒழியும் உளதும் உணர்
 
உணராதான் நூலறிவும் உண்மையில் வீணாம்
பிணத்துக்கும் உண்டோசொல் பீடு?
 
பீடில்லாப் பெற்றோர்க்கும் பிள்ளையால் பேறெனில்
நாடவரை வாழ்த்துதல் நன்று
 
நன்றெனினும் அன்றெனினும் நற்பண்பில் ஓங்கிடும்
அன்புடையார்க் கில்லை அவம்
 
அவமதிப்பை எண்ணி அகங்குன்றாப் பேதை
சவமென்றே சாற்றல் சரி
 
சரியாத் தடந்தான் சமநிலை காக்கும்
பரிவில் தவறிடின் பாழ்

Wednesday, November 28, 2012

ஒவ்வா நிலை

ஒவ்வா நிலை
 
வேர்களுக்கு நீரில்லாது
.. வெள்ளமெங்கே போச்சு?
வீணர்களும் கொள்ளையரும்
.. பகிர்ந்திடப் பாழாச்சு!
பார்பதவித் தேரினிலே
.. கொள்ளையிடும் வீச்சு!
படித்தவர்க்கும் பாமரர்க்கும்
.. பயம் நடுங்கும் மூச்சு!
 
வேண்டிநின்ற சுதந்திரத்தின்
.. விளைவு சிலர்க்கே உச்சம்!
விளம்பரத்தில் தான் வளர்ச்சி
.. ஏழைகண்ட மிச்சம்!
மீண்டுமொரு சுதந்திரப்போர்
.. வேண்டுமிந்த நாட்டை
மீட்டெடுத்துச் சமத்துவத்தேர்
.. ஓட்ட, வெற்றி நாட்ட!
 
சாதிமத பேதங்களும்
.. சதிச்செயலும் நாளும்
சகுனம் வாஸ்து சோதிடங்கள்
.. ஆருடங்கள் நீளும்!
ஓதுகின்ற அறிவியலுக்
.. கொவ்வா நிலை போலும்!
ஊழல்களே வேரழித்தால்
.. ஒழுக்கமென்று மீளும்?

Tuesday, November 27, 2012

மண்ணில் வாழ் தெய்வம்

மண்ணில் வாழ் தெய்வம்
 
கற்பனைகள் கவர்ச்சிநிறை கதைகள் ஆக்கும்
.. கற்பவர்கள் உள்ளங்கள் பதிவை ஏற்கும்
அற்புதங்கள் அறிவுக்குப் பொருந்தா தென்றால்
.. ஆய்ந்துணர்வோர் அதீதமென ஒதுங்கிப் போவார்
சொற்சுவையும் பொருட்சுவையும் செறிந்த பாட்டைச்
.. சுவைத்தடையும் இன்பசுகம் மதிமயக்கும்
உற்பத்தி நேர்மையதன் உள்ளடக்கம்
.. உண்மைக்குப் புறமென்றால் ஒதுக்க லாமே!
 
உழைக்காமல் உண்பதுமோர் ஈனத்தன்மை
.. உடலிலுரம் இருக்க அதை முடக்கல் கேடு!
தழைசருகாய் வீழ்ந்தாலும் மருந்துமாகும்
.. தக்கமதி யிருந்தாலும் தன்னலத்தால்
விழைவுகளைப் பெருக்கிநிதம் பிறர்தாள் வீழ்ந்து
.. வேண்டியதை வஞ்சகமாய்த் திரட்டிக் கொள்வோன்
பிழையாக மனிதனெனப் பிறந்து விட்டான்
.. பெருங்கேடு, அவனாலே அழியும் பூமி!
 
அன்பினையும் அறிவினையும் ஆண்டு நிற்கும்
.. அகந்தன்னை ஆண்டவன்வாழ் கோயில் என்பார்
என்பாலும் தசையாலும் நரம்பி ரத்தம்
.. இன்னபிற வற்றாலும் இணைத்தியங்கி
முன்னோட்டும் சாரதியாம் நெஞ்சுக் காணை
.. மூளையிட முறைதவறா வாழ்வாம் ஆட்சி
இன்னலையும் இன்பமுடன் ஏற்றுக் கொள்ளும்
.. எனில்மனிதர் மண்ணகத்தே தெய்வம் ஆவார்!

Monday, November 26, 2012

திடம் என்று...

திடம் என்று...
 
பகுத்தறிவால் மிருகக் குணப்
.. பற்றறுக்க வில்லை யென்றால்
செகத்தில் உலர்சருகெனவே
.. செத்தொழிதல் மேலல்லவா?
பின்பற்றிச் செல்வதற்கே
.. பிறந்துள்ளேன் என்பதுவே
என்பேறு என்றிருப்பேன்
.. இழிந்தவனே எனல் தவறா?
 
தடம்பற்றி நடவாமல்
.. தன்னலத்தின் அடியொற்றும்
மடம் கொண்டோர் மலிவாக
.. இடம் அடைத்துக் கொளல் நலமா?
கடனாற்றும் நல்லவர்கள்
.. கடனாளி யாய்க் கிடக்க
கொடியவர்கள் எல்லோரும்
.. கொடிப்பிடித்து நடந்திடவோ?
 
படிந்தவராய்ப் படித்தவரும்
.. அடியாட்கள் படையினிலா?
கடிவாளம் இலாக் குதிரை
.. கடும்வேகம் கொடுங்கேடே
விடிவெள்ளி எவரென்னும்
.. விழிப்புணர்வுத் தேடலிலே
முடிவான விடைகாணும்
.. திடம் என்று அடைவதுவோ?

Sunday, November 25, 2012

உணர்வு

உணர்வு
 
இருட்டைக் கிழிக்க எழுவாய் இளைஞா
திருட்டை ஒழிக்கும் அணியாய்ப் - புரட்டில்
கொழுப்பவர் ஆணவம் கொல்லத் துணிவாய்
ஒழுங்கே உனக்காம் உரம்
 
பேச்சினில் வீரம் பெரிதாய்க் காட்டுதல்
ஆச்சரியம் ஆகா(து) அறிவாயே - மூச்சாகத்
தாய்மொழி போற்றத் தவறுபவன் உள்ளந்தான்
நோய்க்கொண்ட(து) என்றே நுவல்
 
ஆடை தமிழனாய்க் காட்டினும் வீரமாய்
மேடை முழக்கும் இன உணர் - வோடுநீ
வாழ்வதாய்த் தோற்றிடினும் வஞ்சத்தால் வாடாத
ஆழ்மனச் சொத்தே அறிவு
 
உணர்வால் தமிழனாய் உள்ளவன் நோக்கும்
மணக்கும் தமிழாய்த்தான் மாண்பைப் - பணந்தான்
தந்திடும் என்றுதினம் தாய்மொழி விற்போர்க்குச்
சொந்தமதி சொத்தைஎனச் சொல்

Thursday, November 22, 2012

பண்பாட்டுப் பொங்கல்

பண்பாட்டுப் பொங்கல்
 
திருவிளையும் நாளெல்லாம் திருநாள் ஏரின்
.. திறத்தாலே நிலம்செழித்து வளம் பெருக்க
அருமுழைப்பைத் தருகின்ற மக்கள் மாக்கள்
.. அளித்தகொடை உயிர்வாழ்வு தன்னை வையம்
அறுவடையின் திருநாளாய்ப் போற்றல் மாண்பு
.. அகமகிழ்ச்சி முகப்பொலிவாய்த் தங்கிப் பொங்கி
விரிகதிரோன் தருவெப்பம் ஒளியும் தந்த
.. விளைவுகளைப் படைத்தின்பம் பொங்கும் பொங்கல்!
 
திருமணத்தைக் கொண்டோரும் எதிர்பார்ப்போரும்
.. தித்திக்கும் கனவுகள் சித்திக்கும் என்று
பெருமகிழ்ச்சி பொங்குகிற உள்ளத்தோடு
.. பேச்சினிலும் பார்வையிலும் புதிய மாற்றம்
உருவாதல் புதிராகப் புதுமையாக
.. உணர்வலையில் நனைந்தவராய் மகிழும் பொங்கல்
செருமுகத்து வீரனைப் போல் தோன்றும் காளை
.. சீற்றத்தை அடக்கிவெற்றி போற்றும் பொங்கல்
 
கொல் ஏற்றுக் கோட்டுக்கும் அஞ்சான் வெற்றிக்
.. கொடியோடு கொடியவளை நோக்கால் தாக்கச்
சில்லென்று குளிர்ந்தவளாய்ச் சிரித்து நாணும்
.. சித்திரத்தை வரையுங்கைத் திறந்தான் உண்டோ?
எல்லோரும் களித்துக் கொண்டாடும் பொங்கல்
.. இல்லார்க்கும் இயலுதவி செய்யும் பொங்கல்
நல்லதமிழ்ப் பண்பாட்டை நாட்டும் பொங்கல்
.. நலமோங்க வளமோங்கப் பொங்குவோமே!
 

Wednesday, November 21, 2012

மாந்தர் தாமா?

மாந்தர் தாமா?
 
நிலைவசதி கூடியதாய் நெடும்புகழைக் கொண்டாலும்
.. நீபேசும் தாய்மொழிதான் இனத்தின் பேராம்!
தலைநிமிர்ந்து நடந்தாலும் தாய்மொழியைப் பேசாதான்
.. தன்மானம் இலாதவனாய்த் தரத்தில் தாழ்வான்!
கலைவல்லான் பிறமொழியில் கானமழை பெய்தாலும்
.. கருத்துணர்ந்தோர் பாராட்டால் தானே இன்பம்?
விலைகொடுத்தா இனவுணர்வை வாங்கிவைத்துக் கொள்வார்?
.. விதைவீறு கொண்டதெனில் விளைவேன் வீழ்ச்சி?
 
அறிவுவளம் திறமைநலம் அனைத்திலுமே தேர்ந்தவராய்
.. அகிலமெலாம் பேர்நிறுத்தும் தமிழினத்தான்
சிறப்புமிகு தாய்மொழியைச் செம்மொழியாய்க் கண்டபினும்
.. செல்லபிள்ளை பிறமொழியில் படிக்க வைப்பான்!
உறவுபுதிதாக வந்தால் உயிர்கொடுத்த அன்னைதனை
.. ஒதுக்கிவிடும் இழிந்தகுணம் மகனுக்காமா?
இறந்தமொழி தனைத்தலையில் ஏற்றி வைத்துக் கூத்தாடும்
.. இழிநிலையில் எத்தனை நாள் இன்பம் காண்பாய்?
 
தகுதிகண்டு பாராட்டும் தன்மையினைத் தாரைவார்த்துத்
.. தாளத்தைப் போட்டபின் பாட்டுப் பாடி
மிகுதியுமாய்க் குழைவதுவே மேனிலையில் சேர்த்துவிடும்
.. மிடுக்குநடை தனக்குவரும் எனும்நினைப்பில்
நகும்நிலையில் தாம்வீழ்ந்து நாசமுறவா வாழ்க்கை?
.. நமையன்றி நம்மரபைக் காப்பார் யாரோ?
பகுத்தறிவைப் பெற்றிருந்தும் பாதந்தாங்கியே வாழ்ந்து
.. பழம்பெருமை அழிப்பவரும் மாந்தர் தாமோ?

Tuesday, November 20, 2012

விழி! எழு!

விழி! எழு!
 
சாதிமத பேதத்தைச் தகர்க்கும் யுக்தி
.. சமுதாயச் சமத்துவத்தைச் சமைக்கும் சக்தி
நீதிநெறி நேர்மையிவை எவர்க்கும் ஒன்றே
.. நியதிகளும் மரபுகளும் அரண்களாக
சோதனைகள் தொடர்ந்திடினும் மோதி வெல்ல
.. சுயமரியாதைச் சுடராய்ப் பகையைத் தீய்க்க
ஏதுமில்லை எனப்பிறர்முன் கைகள் ஏந்தா
.. இந்நாட்டின் பொற்காலம் இளைஞர் முன்னே!
 
பாரதத்தின் பழம்பெருமை பேசிக் கொண்டே
.. பணியாற்றச் சுணக்கமுறும் பிணிஏற் காமல்
நேரத்தைப் பொன்னாக்க நிமிர்த்து நெஞ்சே!
.. நீபிறந்த மண்ணுக்குன் பங்கை ஆற்று!
பேருக்கும் புகழுக்கும் பேராசைக்கும்
.. பெரும்பொழுதைக் கழிக்காது வீறு கொண்டே
யாருக்கும் இளைத்தவனாய் இருக்க மாட்டேன்
.. எனஎழுவாய்! பயனிலையே செயற்படாது!
 
வழிகாட்டி முன்நடக்கும் வலிவை நெஞ்சில்
.. வளர்காலைப் பொழுதிருந்தே வளர்த்துக் கொள்ள
செழுப்புக்குச் சிந்தனையை செம்மை ஆக்கு
.. செயல்சிறந்தோர் சென்ற வழி ஆய்ந்து செல்க!
அழிப்பதற்குத் துடிக்கின்ற கையடக்கு!
.. அறிவால் ஆம் பயனென்னும் அறுவடைசெய்!
இழிவுக்கும் எளியவரே அடங்கிப் போவார்
.. எனும்நிலையில் ஏய்ப்பவரை வீழ்த்து! வெல்க!

Monday, November 19, 2012

புதையல்

புதையல்
 
உருவின்றி உலவுகின்ற காற்றும் அச்சம்
.. உருவாக்கக் கிளம்புகின்ற இடியும் மின்னல்
தருஒளியின் நொடிநேர வீச்சும் நீரைத்
.. தரையோடச் செய்கின்ற முகிலும் நாளும்
நிறமாற்றம் அடைகின்ற பொழுதும் யாவும்
.. நீள்வானப் புதையலென எனக்குத் தோன்றும்!
சுரமாகச் செவிசேரும் ஒலியும் பாயும்
.. சூறைதென்றல் சூடுகுளிர் வானின் சொத்தே!
 
பூமிக்குள் கனிவளங்கள் புதையல் என்றால்
.. புலமையுள்ளோர் நெஞ்சறிவுப் புதையல் ஆகும்
நாமிங்கு கற்கின்ற பாடமெல்லாம்
.. நல்லாய்வாம் ஆழிவிளை பவளம் முத்து!
ஆம் இங்கே முன்னோர்தம் வரலாறெல்லாம்
.. அனுபவமாம் நவமணியின் புதையல் ஆகும்
கோமுட்டி கோபுரமே சாய்ந்த தென்னும்
.. குள்ளமனம் கொள்ளவஞ்சப் புதையல் அன்றோ?
 
இளவிதவைக் கண்ணீரில் இயைந்திருக்கும்
.. ஏக்கத்தைத் துயரத்தின் புதையல் என்றால்
வளவாழ்வுப் பேராசை வலையாய் நீசி
.. வளைக்கின்ற கண்காமப் புதையல் தானே
உளங்கொண்ட கருத்துகளை விளக்குங் காட்சி
.. ஒளிபரப்பும் விழிஉண்மைப் புதையல் என்போம்
களம் எதுவாய் இருந்தாலும் நடத்தை பேச்சால்
.. களைகட்டும் செயல்செம்மைப் புதையல் ஆமே!

Sunday, November 18, 2012

இன்னும் கொஞ்சம்

இன்னும் கொஞ்சம்
 
ஆசை காட்டி மாசைச் சேர்ப்பதும்
காசை விரும்பிக் கலகம் செய்வதும்
ஏசி மகிழ்வதும் வேசியின் தொடர்பும்
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
என்றே வளர்க்கும் நெஞ்சம் சிலர்க்கு!
 
வஞ்ச நெஞ்சமே கெஞ்சலில் கொஞ்சலில்
பஞ்சம் இன்றிப் பக்குவம் மிஞ்சும்
விஞ்சிப் போதலில் எஞ்சுதல் துன்பமே
தஞ்சம் அடைபவர் தாள்களில் வீழ்ந்தால்
தலைநிமிர் ஆணவம் தாவும் விண்ணில்!
 
குனியக் குனியக் குட்டும் பேர்க்கும்
இனியும் தொடரும் எனுமெதிர் பார்ப்பே
இன்னும் கொஞ்சம் முயன்றால் வெற்றி
இன்னும் உயரே போனால் அவலம்
ஏற்படும் எனும் எச்சரிக்கையும் தேவை!
 
இணக்கம் என்றால் இன்னும் கொஞ்சம்
பிணைப்புடன் இருப்பது பெரும்பிழை அன்று
பிணக்கும் நேரம் பெர்ம் தொடராயின்
இணங்கும் வாய்ப்பே இல்லையென் றாகும்
அணங்கலங்காரம் அளவுடன் இருப்பதும்
மணப்பொருள் பூச்சு மட்டுடன் ஏற்பதும்
புகழும் பேச்சின் போக்கும் நோக்கும்
தகும்நிலைக் களவு தரத்தினில் வேண்டுமே!

Friday, November 16, 2012

பூமிக்குள் இல்லை புதையல்!

பூமிக்குள் இல்லை புதையல்!
 
பூமிக்குள் மட்டுமில்லை புதையல் நெஞ்சம்
.. பொலிவாம்நல் எண்ணங்கள் செயற்புதையல்
சேமித்தால் செலவாகிப் போகாச்செல்வம்
.. செழுமையினும் சிறந்தமதிப் புதையல் சிந்தை
சாமிக்குப் பலிகொடுத்துப் பெறுதல் எல்லாம்
.. சத்தியமாய் வஞ்ச நெஞ்சச் சதிப்புதையல்!
நாமின்று பெற்றுள்ள இலக்கியங்கள்
.. நல்குநய நற்கருத்துப் புதையல்கள்தாம்!
 
பகல்வானின் நீலத்தில் வெள்ளை மேகம்
.. படகினைப்போல் செலுங்காட்சி எழிற்புதையல்
மிகக்கறுத்த மேகத்தூடோடும் மின்னல்
.. மேவுமிடி ஓசையுடன் நீரைக் கொட்டி
அகம்புதைய அச்சமகிழ் போலுணர்வை
.. அளிக்குமழை வனப்பது வான்நீரின் மாட்சி!
தகத்தகாயச் சுடரொளியால் பொன்வண்ணம்சேர்
.. தண்ணீரின் ஆழத்தில் புதையல் என்னே!
 
மண்ணுக்குள் முன்னாளில் புதைந்து போன
.. மாநகர்கள் பொன்வெள்ளி நகைகள் காசு
விண்ணவரின் உருவங்கள் சிலைகள் சிற்பம்
.. வெளிப்பட்டு வரலாற்றுப் புதையல் ஆகும்
கண்டவர்கள் பழங்கால நாகரீகக்
.. காலத்தைக் கணிக்கின்றார் பூமியின் மேல்
எண்ணற்ற வகையினிலே நமக்குத் தோன்றா(து)
.. இருப்பவையே ஏராளம் புதையல் அன்றோ?

Thursday, November 15, 2012

சமத்துவம்

சமத்துவம்
 
நாட்டுவளம் யாவர்க்கும் சமமே மக்கள்
.. நாடிநரம் புழைப்பெல்லாம் பொதுமுன்னேற்றங்
காட்டுவதாய் வஞ்சமின்றிக் கட்டுப்பாடாய்க்
.. கடமையுணர்வுடன்செயலில் சிறக்க வேண்டும்
மூட்டை தூக்குவோனுக்கும் உரிமை உண்டு
.. முன்னேற்றம் உழைப்புக்குச் சமமாய் வேண்டும்!
ஏட்டறிவைக் கற்போர்க்குள் பாகுபாடேன்?
.. எல்லார்க்கும் சமச்சீராய்க் கல்வி வேண்டும்!
 
பணிவாய்ப்பில் பிணித்தீர்வில் சமத்துவத்தைப்
.. பாழாக்கும் பணத்துக்கே இடமில்லாத
துணிவான மாற்றங்கள் நடைமுறையில்
.. தூய்மையுடன் நேர்மையுறத் தொடங்க வேண்டும்!
மணிமணியாய் வளரிளைஞர் நாளை நாட்டின்
.. மகத்தான குடிமக்கள் ஆகி ஆக்கப்
பணியினிலே அணிஅணியாய் முன்னேற்றத்தைப்
.. படைத்திடவும் பகிர்ந்திடவும் பழக்கி வைப்போம்!
 
உழவருடன் நெசவாளர் பாண்டம் செய்வோர்
.. உற்பத்தி செய்தொழிலில் உழைப்போர் நாளும்
நிழல்வெயிலென் றில்லாமல் கடமை ஆற்றல்
.. நிறுத்திவிடின் உலகத்தின் நிலை என்னாகும்?
ஒழுங்காக உழைப்போர் எத்தொழில் செய்தாலும்
.. உரிய மரியாதையுடன் உயரவேண்டும்
வழுவுதலும் நழுவுதலும் வழக்கமாகா
.. வழிமுறையே சம்த்துவத்தை வழங்கும் நன்றே!

Wednesday, November 14, 2012

வெளிச்சம் வெளியில் இல்லை

வெளிச்சம் வெளியில் இல்லை
 
இருள்மனத்தான் கண்களுக்கு வெளிச்சம் இல்லை
.. இரவுபகல் எப்போதும் இருட்டே எண்ணம்
அருள்நெஞ்சர் விழியற்றும் வெளிச்சம் காண்பர்
.. அன்பகத்துள் அகிலமே பேரொளிவெள்ளந்தானே?
மருட்டுவதும் மிரட்டுவதும் இருட்டு நெஞ்சே
.. மாண்புறுத்தும் ஒளி உண்மை உள்ளத் தூற்று!
திருடுதலில் தேர்ந்தவர்க்கு வெளியிருட்டே
.. தேவைப்படும் அவர் திறமை வெளிச்சம் காட்டும்
 
வெளிச்சத்தில் இருந்தாலும் உயிர்ச்சத்தென்றும்
.. விடமென்றும் வேறுபாடு சிலர்க்குத் தோன்றா!
ஒளியென்பதறிவுக்குள் உறையுமானால்
.. உண்மையினை அறிந்துணர விழிகள் வேண்டா
களிப்பூட்டும் வெளிச்சத்தை கறைப்படுத்தும்
.. கயவர்தம் காரியங்கள் இருட்டில் என் ஆம்?
ஒளிர்கின்ற கதிருக்குள் ஒளிந்து கொள்ளும்
.. உள்ளங்கள் காரிருளில் ஊரேய்க்காவா!
 
பழக்கமின்றேல் பாசங்கைப் பகலில் கூடப்
.. பார்த்தறிதல் கூர்த்தமதி யோர்க்கும் கட்டம்
அழுதே சாதிக்கும் மன அழுக்கின் சூழ்ச்சி
.. அயர்ந்துறங்கும் நேரத்துக் கனவும் ஏய்க்கும்
தொழத்தக்கோர் கண்மூடித் தூங்கும் போதும்
.. துலங்குமக ஒளிச்சுடரை முகமே காட்டும்
தழலாகத் தகிக்கின்ற நிலைமை சேர்த்தால்
.. தக்கவரின் மனக்கனலே சீற்றம் தானே!

Tuesday, November 13, 2012

பெருக்கம்

பெருக்கம்
 
பெருக்கத்தில் நல்லதற்கும் எல்லை வேண்டும்
.. பெய்தமழைப் பெருக்கத்தால் நாடே நாசம்
உருக்கத்தின் அளவுக்கும் வரம்பு தேவை
.. ஊன்கரையும் தன்மையுடன் உளம்சிரிக்கும்!
விருப்பத்தின் வெளிப்பாட்டைப் பேச்சில் மட்டும்
.. வெளிப்படுத்தி வெகுளியெனும் விருதை ஏற்பார்!
சுருக்கத்தின் அடக்கத்தில் சுரந்து வையச்
.. சொத்தாகும் புகழ்ப்பெருக்கம் குறளுக்குண்டு!
 
தசைப்பெருக்கம் விழிகளுக்கு வெறுப்பை நல்கும்
.. தனப்பெருக்கம் இயல்புக்கு மாறாய்ப் போகும்
விசைப்பெருக்கம் விபத்தினிலே வீழ்த்தி வைக்கும்
.. விளைவெதுவும் பெருகிவிட்டால் மலிவாய்ப் போகும்
இசைக்கருவி பெருக்குமொலி பாட்டின் மென்னி
.. இறுக்கிவிடும் ஒப்பனையும் மிகுதி யென்றால்
வசைபாட வாய்ப்பாகும் உச்சம் தாண்ட
.. வளர்விருப்பம் வரலாற்றில் வழுக்கிச் சாய்க்கும்!
 
பெருமிதத்தின் மறுபக்கம் அகந்தையாகப்
.. பின்னணியில் உந்துபடை முந்தும் அன்னார்
கருத்தினிலே கறையாயக் கறைதனக்காய்க்
.. கண்டறியா முறைதனிலே மறைந்திருக்கும்
குறுக்குதலும் எழிலென்று செடிவளர்ப்போர்
.. குள்ளமனம் கண்டுமனம் குமுறுவானேன்?
பொறுத்தலிலோ பொங்கலிலோ மானம் கெட்டுப்
.. போவதுண்டு! கொள்ளளவு மீறின் கொட்டும்!

Monday, November 12, 2012

தாய்ப்பால்

தாய்ப்பால்
 
தாய்மொழியில் ஆண்டவனை வணங்கச் சென்றால்
.. தடுப்பவனைத் தமிழாநீ மேலோன் என்பாய்
வாய்மொழியில் நல்லதமிழ் பேசக் கூட
.. வக்கற்ற நிலையில்நீ இருக்கின் றாயே!
தேய்வடைய விடுவாயா தன்மானத்தை
.. திருடுவஞ்சம் சூதுசெய்வோர் உன்னைச்சூழ
ஆய்ந்துணர்ந்து பாராமல் அடிமைப் புத்தி
.. அகலாமல் ஒருவாழ்வா அறிவெதற்கு?
 
பிறநாட்டு நல்லறிஞர் தமிழின் தொன்மைப்
.. பெருமையினைப் பலவாறாய் ஆய்ந்து சொல்ல
அறநெறிகள் மறமாட்சி முறையில் வல்ல
.. ஆன்றோர்கள் யாத்தவள இலக்கியங்கள்
மறப்பாயா மறுப்பாயா மடத்தில் ஆழ்ந்து
.. மதிமாற்றம் செய்பவரை மதிக்கின்றாயா?
துறவறத்தில் மெய்ப்பொருளை உணர்தல் விட்டுத்
.. தூய்மையிலார் தமைத்தோளில் சுமக்கின்றாயே!
 
தாய்மொழிச்சொல் பொருளுணர்ந்து சரியாய்ப் பேசத்
.. தவறுகின்ற நீதானா வந்தோர் சொல்லும்
வாய்மொழியைப் புரியாது மேல்மேல் என்பாய்
.. வளர்குழவி தாய்ப்பாலில் ஊட்ட மின்றேல்
நோயெதிர்க்கும் உரனின்றி நோஞ்சான் ஆகும்!
.. நுண்ணறிவைத் தாய்மொழியே வளர்க்கும் உண்மை
சேய்படிக்கப் பிறமொழியைத் திணிக்கும் நீதான்
.. செத்தமொழி சிறப்பென்றாய்! பித்தா போடா!
 
யாதும் ஊர் யாவருமே கேளிர் என்றே
.. யாவர்க்கும் சொல்லி நீயே மாறு கின்றாய்
மேதினியே வள்ளுவரைப் போற்றும் போது
.. மூடங்கள் அவர்சிலையை மூடிவைக்கும்
வேதனையே இயற்கைதரும் ஆற்று நீரை
.. விடமறுக்கும் கடையனுக்கேன் ஒருமைப்பாடு?
போதனைகள் ஏறவில்லை தனிநாட்டானா?
.. போகிறதே மின்சாரம் இங்கிருந்து?
 
வந்தாரை வாழ்வைப்பாய் சொந்த மண்ணில்
.. வாழ்விழந்த உன்னவனை அனாதை என்பாய்
நொந்தழியும் சேதிகளைக் கேட்கின்றாயே
.. நோகாதா உன்னிதயம் தசை ஆடாதா?
பந்தாடு கின்றாரே தமிழ்மானத்தை
.. பண்பாட்டுச் சீரழிவைப் பார்க்கின்றாயே
மந்தை ஆடா! ஏடா நீ உயிராய் மானம்
.. மதித்த இனம் துதி பாடும் கதியா இன்று?
 
அண்டையுள்ளோர் தன்னலத்தால் ஒன்றுகூடி
.. ஆனவழியாவிலுமே முன்செல்கின்றார்
சண்டையிட்டு மொழிவளர்ச்சிக்கான யாவும்
.. சாதிக்கின்றாரிங்கே நமக்குள் நாமே
முண்டிமோதி மண்டையுடைத்துக் கொள்கின்றோம்
.. முனைமழுங்கிப் போனவாளைக் கூர்செய் நன்றே
தொண்டருக்கு வழிகாட்டிச் செல்வோன் முன்னே
.. துடிப்போடு செல்லட்டும், தொடர்வோம் வெல்வோம்!

Sunday, November 11, 2012

பொதுமறையோன்!

பொதுமறையோன்!
 
ஒப்பில்லா உயர்மறையாய் விளங்கும்செந் தமிழில்
.. உலகத்து மாந்தரினம் உவந்தெற்கும் மறையாய்
செப்பிவைத்தான் திருக்குறளைச் சிறப்பாகத் தமிழன்
.. செந்தமிழே செம்மொழியாய் சிறக்கஒரு நூலே
இப்புவிக்குப் போதுமென ஏற்றவர்கள் உரைப்பார்
.. இம்மகிழ்ச்சி உலகத்தில் வேறுமொழிக் குண்டோ?
அப்பழுக்கே இலாவாழ்க்கை அமைந்திடவே அறங்கள்
.. அளிக்கின்ற திருக்குறள்நம் அருந்தமிழர் சொத்து!
 
அறமுரைக்கும் திருக்குறளைத் தம்மொழியில் பெயர்த்த
.. அகிலமொழி யினர்சமய வழிமுறைகள் கடந்து
சிறப்புறவே குறள் கூறும் கருத்துரைகள் உணர்ந்து
.. செய்கின்ற இல்வாழ்க்கை முறையொழுக்க நெறியாம்
திறன்வியந்து போற்றுகிறார் உலகப்பேர் அறிஞர்
.. திக்கெல்லாம் நம்பெருமை திகழவைக்கும் குறளே
மறத்தமிழர் மாநிதியாய்க் குறளினரும் பொருளை
.. மறவாமல் ஏற்றிடுவோம் மாண்புகளே பெருகும்!
 
ஒன்றேமுக் காலடியில் உணர்ந்துபொருள் மாந்தர்
.. உயிராகப் போற்றிஉயர் உணர்வோடு வாழ்ந்தால்
பொன்றுகிற பெருமையெலாம் புகழ்மணமே வீசும்
.. பூதலத்தில் உயர்நீதி புகலுமிந்த நூல்போல்
குன்றெனவே காலத்தை வென்றுலகில் நிலைக்கும்
.. கூரறிவுச் சீராக்கும் வேறுநூலெங் குண்டு?
என்றைக்கும் வாழுண்மை இவ்வுலகோர் அறிய
.. இயம்பிவைத்த வள்ளுவன்பேர் இசைப்பதுநம் கடனே!

Friday, November 9, 2012

நாடு

நாடு
 
நாடுமொழி மக்களின்மேல் பற்றுள்ளோரே
.. நாடாள்வார் எனும்நிலையில் வாழ்க்கைத் தேவை
ஈடேறும் என்பதிலோர் ஐயம் இல்லை
.. எள்ளளவும் வஞ்சமின்றி பொதுத்தொண்டாற்ற
கேடுகளில் கொழுப்பவராய் இழிந்து வாழக்
.. கிஞ்சிற்றும் நினையாத நெஞ்சம் கொண்டோர்
ஓடுகின்ற புதுப்புனலாய்ச் சுறுசுறுப்பாய்
.. உழைத்தாலே மானிலத்தில் செழுமை ஓங்கும்!
 
மனச்சான்றை மதிப்பவரே மாந்தர் ஆவார்
.. மாண்புறுதல் உரிமைபொது வென்பர் மேலோர்
தனதான்யம் பாக்கியங்கள் வாழ்வோர்க் கெல்லாம்
.. தகுதியினால் நேர்மைவழி வாய்க்க வேண்டும்
இனம்சாதி மொழிஎன்னும் பேதம் நோக்கி
.. எதனுயர்வும் கணிக்கின்ற இழிவில்லாத
குணமுள்ளோர் கூடிவரும் ஓடும் இன்னல்!
 
தனிமனித ஒழுக்கந்தான் சமூக நன்மை
.. தழைத்தோங்கச் சான்றாகும் வீடு வீதி
இனிமையிலே தோயுமெனில் எங்கும் என்பம்
.. இவ்வண்ணம் சிற்றூர்கள் தொடர்ந்து பேரூர்
வினைவல்லார் பொதுநோக்கால் விளையும் நன்மை
.. விரிவானால் அந்நாட்டில் நலங்கள் பொங்கும்
முனைப்பெல்லாம் முன்னேற்றம் தனையே நாட
.. முழுமையுமாய்த் தன்னிறைவு பெறுமே நாடு!

Thursday, November 8, 2012

இயல்பு

இயல்பு
 
என்னியல்பைப் பிறர்போற்றத் தேவை யில்லை
.. எதிர்பார்த்தால் அதுவே பாசாங்காய் மாறும்!
என்நெஞ்சின் முழுநிறைவைத் திருடிக் கொள்ள
.. எவராலும் ஆகாது தனிச் சொத்தாகும்!
என்செயலை நேர்மையெனும் உள்ளுணர்வே
.. என்றென்றும் நெறிப்படுத்தும் என்னை என்றால்
என்விழியில் அஞ்சாமைத் தெளிவைக் கூட்டும்!
.. எனைபோற்றல் தூற்றல் ஏதும் மாற்றல் இல்லை!
 
தெளிவடைந்து தேர்ந்தோரைத் திருப்பம் ஏதும்
.. திசைமாற்றி வசைசேர்க்க இசைதல் இல்லை
ஒளிவுமறை வெனல் உண்மை வழியில் நில்லா
.. உரையாடுங் குரலிலுரத் தேயொ லிக்கும்!
வெளிப்புனைவு வேண்டாம் வான் கதிரொளிக்கு!
.. விசையேறும் மணத்துக்கா, காற்றுத் தேர்க்கே!
விளிக்கின்ற குரல் மேவும் விழைவுணர்ந்து
.. விலங்கினமும் நிலையறியும் கலையில் நிற்கும்!
 
சிலபோது நினைவியக்கச் செயல்கள் வெற்றிச்
.. சிலிர்ப்பேற்றும் சிந்தைக்கு நேரும் வாய்ப்பு!
புலர்காலப் போதிசைப்பார் பூபாளத்தை
.. பூபாள இசைகேட்டா புலரும் போது?
நலம்தீது நடப்பெல்லாம் இயல்பாகத்தான்!
.. நடைமாற்றும் பழிப்புக்கா நாக்கு வன்மை!
கலமறிந்து வைக்கின்ற பொருள் மாறாது!
.. கலக்கத்தில் ஆய்வென்றால் கரை ஏறாதே!

Wednesday, November 7, 2012

வெல்லும் புகழ்

வெல்லும் புகழ்
 
விண்ணகத்தில் கண்சிமிட்டும் எண்ணிறந்த மீன்கள் - அவை
வெண்ணிலவின் தண்படையாம் விளக்காயிருள் விலக்கும்
மண்ணகத்தில் புகழுடையோர் விண்மீன்கள் போலே - அவர்
மணம்பரப்பி பெயர்நிலைக்க வாழ்கின்ற தாலே!
மண்ணுலக வாசிகட்கு நட்சத்திர ராசி - இதில்
மாந்தராக வாழ்பவர்கள் எத்தனை பேர் யோசி!
கண்ணெதிரே பிறர் துயரம் கண்டதும் கலங்கும் - மனம்
கொண்டவரே மாந்தரெனில் குவலயம் துலங்கும்!
 
இயலுதவி செய்யுமந்த ஈகைஎனும் தன்மை - கொண்டு
இருப்பவரே இருளிஒளி யேற்றிவைப்பார் நன்மை
செயல்முறையில் பொதுநலத்துச் சிந்தையர் சிறந்தோர் - எவர்
சேருமிடம் சிறந்திடுமோ அவரே தான் பிறந்தோர்
எளிமையெனும் நிலையினிலும் வாழ்க்கையில் நிறைவு - மனம்
இருந்துவிடில் அறிவுநிதி நிறைவிலிலை குறைவு
தெளிவுடைய பாடமென விளங்க ஒரு சான்றாய் - நடை
தேர்ந்தவனாய் நீயிருந்தால் தாழ்ந்தவனாய்த் தோன்றாய்!
 
புலமையினால் புரிசெயலில் புகழ்தழுவ நின்றால் - உனைப்
புவனமெலாம் போற்றுநிலை வந்தணைக்கும் நன்றாய்!
கலைஞனெனக் கவிஞனெனப் பரிசுகளை வென்றால் - புவி
கண்டபலன் உண்டதிலே மண்டுபுகழ் கொண்டாய்
தலைவரெனத் தொண்டரெனத் தன்னலமில் சேவை - செயும்
தகுதியிலே இசைத்திடுவார் புகழொளிரும் பாவை!
நிலைதவறும் நேரத்திலும் நேர்மைவழி செல்லும் - நன்
நெஞ்சுடையார் மின்னுபுகழ் மண்ணுலகை வெல்லும்!

Tuesday, November 6, 2012

பொய்யும் மெய்யும்

பொய்யும் மெய்யும்
 
மெய்யதன் உறுப்பில் வாயே
.. மெய்யுடன் பொய்யைச் சொல்லும்
ஐயமும் கேட்கும் கெஞ்சி!
.. ஐயமும் தெளிந்து கொள்ளும்!
செய்கையால் விளிக்கும் போது
.. சேதியும் மாறக் கூடும்
பொய்யினை மௌனம் கூடப்
.. புகன்றிடும் புன்மை என்னே!
 
செப்பிடும் உரைகள் யாவும்
.. செம்மையாய் விளங்க வேண்டின்
ஒப்பிடும் உண்மையாக
.. உயர்ந்ததாய் இருக்க வேண்டும்!
தப்பெனத் தெரிந்தால் நாவே
.. தயங்கிடும் உச்சரிக்க
அப்படிச் சொல்லி விட்டால்
.. அப்புறம் பொய்யே வாழ்க்கை!
 
மெய்சொலின் இழப்பு நேரும்
.. மென்னியில் கயிறும் சேரும்
செய்ததைக் கண்ணால் கண்டும்
.. செப்பிட உயிர்க்கா பத்து!
பொய்யிலே பிழைக்கும் கூட்டம்
.. பொறுத்துக் கொள்ளாது மெய்யை
அய்யகோ! மனத்தைக் குத்தி
.. அவலத் திலாழ்த்தும் பொய்யே!
 
பொய்ம்மையைப் புகலும் வாய்தான்
.. புழுத்துத்தான் போகும் என்றோ
மெய்ம்மையைக் கொன்றால் தீமை
.. மேன்மையை அழிக்கும் என்றோ
செய்கையில் போலி ஓங்கி
.. செயம்கொளல் அடுக்கா தென்றே
பொய்ம்மையை இகழென் றாரோ?
.. பொருள்புரிந்தேற்போமாநாம்?
 
கணத்தொறும் நெஞ்சைக் குத்தும்
.. கருவிபொய் உருவிலாமுள்!
குணத்திலே இழந்தோர் என்று
.. கூறுவர் பொய்யர் தம்மை!
பணத்திலே பற்று வைப்போர்
.. பதவியின் பெருமை சாய்த்துப்
பிணமென வீழ்த்தும் கேட்டின்
.. பிறப்பிடம் புல்லர் நாவே!
 
பொய்வழிச் சுருட்டும் காசால்
.. பொன்பொருள் திரட்டும் மாசைச்
செய்பவன் ஒருநாள் அந்தச்
.. சேற்றிலே அழுந்திச் சாவான்!
மெய்க்குரலுக்குச் சொந்தம்
.. மென்மைதான் மெதுவாய்த் தோன்றும்
பொய்யதே உரக்கக் கூவும்
.. போலிக்கே கவர்ச்சி தூக்கல்!
 
பொய்ம்மையைப் புகழச் சூழும்
.. போக்கினர் புரட்டுக் காரர்
மெய்க்குவீண் மெருகு வேண்டாம்
.. மிரட்டிடும் தொனியும் வேண்டாம்
செய்வினைச் சீர்மை சேர்க்கச்
.. சிந்தனைச் செப்பம் செய்வோம்!
நெய்திடத் தகுந்த நூலால்
.. நெசவெனில் சிறக்கும் சேலை!

Monday, November 5, 2012

கனவு

கனவு
 
காணுங்கள் கனவென்றால் படுத்துக் கொண்டு
.. கண்மூடி நித்திரையில் காண்பதன்று!
பூணுங்கள் உறுதிநெஞ்சில் பிறந்த மண்ணைப்
.. போற்றுகிற நிலைக்குயர்த்தும் செயல்கள் ஆற்ற!
நாணுகின்ற வினைபுரியும் நினைவை மாற்றி
.. நாட்டுநலம் கூட்டவினை யாற்றும் வன்மை
பேணுங்கள் எண்ணம்சொல் செயல்களாலே!
.. பெருமையெலாம் கூடிவரும் வீட்டில் நாட்டில்!
 
படுத்திருக்கும் குதிரையதைப் பந்தயத்தில்
.. பறக்கவிட எழுப்பமுயல் வதிலும் மேலாம்
அடுத்துநிற்கும் குதிரையினை உசுப்பல் என்போம்!
.. அறிவாற்றல் ஆயத்தம் வேகம் காட்டும்
தடுக்கவரும் எதிர்ப்புகளைத் தாண்டிப் பாயும்
.. தன்மையுறப் பயிற்சிகளில் தரமும் வேண்டும்!
விடும் அம்பின் கூர்வெற்றி கொடித்திடாது
.. வைத்தகுறி சரியாக இருக்க வேண்டும்!
 
படுத்தநிலை யிலோடும் பாதம் உண்டா?
.. பந்தயம் இல்லாதிருந்தும் மனம்தான் ஓடும்!
எடுத்துக்கொள் ளும்செயலில் ஏற்றம் காண
.. எழுச்சிக்கொள் லாதவனால் இயலா தென்றும்!
கொடுத்திருக்கும் வாய்ப்பறிந்தே இயங்கி வெற்றிக்
.. கொடிநாட்டும் வன்மைமனம் உடலுக் கேற்றும்!
மிடுக்கோடு தலைநிமிர்வில் வெற்றி சேர்ந்து
.. மேன்மையுற நம்பிக்கை உயர்த்து வோமே!

Sunday, November 4, 2012

ஊக்கம்

ஊக்கம்
 
ஊக்கம் என்பது உள்ளச் சொத்து - அது
உயர்வையும் புகழையும் விளைத்திடும் வித்து
ஏக்கம் கொள்ளா நிலையுண்டாக்கும் - பெரும்
இழப்பே நேரினும் மீட்டுச் சேர்க்கும்!
 
செல்வோம் என விலகும் தளர்வெல்லாம் - பெரும்
சிறப்பினை ஈந்திடும் உழைப்போர்க்கெல்லாம்
இல்லை எனும்நிலை இடரினுள் தள்ளும் - மன
எழுச்சியே வெற்றியின் ஏணியாக் கொள்ளும்
 
ஏனைய செல்வம் பெருகினும் குறையும் - உரம்
ஏற்குமூக்கத்தால் வளர்ச்சி எத்துறையும்
கூனிலாக்குணம்தரும் மிகநலம் பலவும் - சீர்க்
கொள்கையால் வலம்வரும் புகழ்மணம் நிலவும்
 
விழைவுகள் வளரிடம் நெஞ்செனும் நிலமே - பயிர்
விளைவதன் வெற்றியே ஊக்கமாம் பலமே
உழைப்பினால் பெரும்பயன் உவப்பினைச் சேர்க்கும் - பிறர்க்(கு)
உதவிடும் விரிமனப் பெருமையும் வாய்க்கும்!
 
தளர்ச்சியின் முற்றுகை தருமுடல் முதுமை - உளம்
தளரா நிலையதன் செயல்முறை புதுமை
உளத்திடம் துயர்மலை பிளந்திடும் உளியாம் - நம்
உடல்பெற வழங்கிடும் வலிவுடன் பொலிவாம்
 
ஊக்கம் என்பதோர் ஊன்றுகோல் திண்மை - அதை
உடையவர் வெற்றியை அடைவதும் உண்மை
ஆக்கம் அவர்வழி தேடியே சேருமே - சீர்
அளிக்கும் அவர்புகழ் ஏடுகள் கூறுமே!

Saturday, November 3, 2012

விடிவெள்ளி

விடிவெள்ளி
 
குவியிருளைக் கொன்றொழிக்கும் விடியலுக்கு முந்தோன்றி
புவியொளிக்குக் கட்டியத்தைப் புகல்கின்ற விண்மீனே
விடிவெள்ளி எனநாமும் விளம்புகின்றோம் விண்நோக்கி!
 
தவிக்கின்ற மக்கள்மனத் தாகத்தை நன்குணர்ந்து
அவலத்தை நீக்க அருந் துணையாவோர் விடிவெள்ளி!
மிகுதுயரை அளிக்கின்ற மேலான வாழ்வினரின்
அகந்தைஅழிந்தேழையரை அணைத்திடுவோன் விடிவெள்ளி!
 
அறியாமை இருளினிலே அழுந்திக் கிடப்பார்க்குச்
சரியான வழிகாட்டும் நெறியாளன் விடிவெள்ளி!
உலகத்தின் நன்மைக்கே உதவிடவே அறிவாற்றல்
பலவகையில் பயனாக்கும் பண்பாளன் விடிவெள்ளி!
 
மக்கள் நலம்நாடி மனம்வாக்கு காயத்தால்
பக்கம்துணையாய்நிற்கும் பற்றாளன் விடிவெள்ளி!
ஏனென்று வினாத்தொடுத்த எழுச்சிச்சிந்தனையாளன்
ஏதன்சு நகரத்துச் சாக்கரடீஸ் விடிவெள்ளி!
 
கோனாட்சிக் கெதிராகக் குரல்கொடுத்துத் தன்னுரிமைக்
கொள்கைவெற்றி கண்டகாந்தி பாரதத்தின் விடிவெள்ளி!
பொதுவுடைமைத் தத்துவத்தைப் புவியெங்கும் பரப்பியநல்
மதிவல்லார் காரல்மார்க்ஸ் மானிலத்தின் விடிவெள்ளி!
 
மூடப் பழக்கங்களின் கேடுகளை எடுத்துரைத்துப்
பீடுபெறப் பகுத்தறிவைப் பரப்பிவந்த ஈவேரா
மாடுகளாய் மந்தைகளாய் மதம்பிடித்தோர் வதைத்திடவே
கேடுகளில் கிடந்தோர்க்குக் கிழக்குத்திசை அம்பேத்கர்
 
புலமையெனில் வாழ்க்கையிலே வளம்சேர்க்க எனப்பாடும்
நிலைமையது நீங்ககவி திலகமெனும் பாரதியார்
என்றிங்கே வானுயர்ந்து எழுச்சிதரும் விடிவெள்ளி
பன்னூறாய் முன்னிருக்க பாதைமாறிப் பறப்பதுவா?

Friday, November 2, 2012

தேடல்

தேடல்
 
பகுத்தறிவால் மிருககுணம் பற்றறுக்க வில்லையென்றால்
செகத்தில் உலர்சருகெனவே செத்தொழிதல் மேலலவா?
பின்நின்று சொறிவதற்குப் பெரியவர்கள் தம் முதுகே
என்பேறு என்றிருப்போன் இழிந்தவனே எனல்தவறா?
 
தடம்பற்றி நடவாமல் தம்நலத்தின் அடியொற்றும்
மடம்கொண்டோர் மலிவாக இடம்பிடித்துக் கொள்வதுவோ?
அடம்பிடிக்கும் அறிவாற்றல் அழிவினிலே தொடர்ந்திங்கே
நடமாடும் அரவங்கள் நன்மையுறல் கொடிதன்றோ?
 
கடனாற்றும் நல்லவர்கள் கடனாளி யாய்க்கிடக்க
விடநெஞ்ச வல்லவர்கள் வீதிகளில் ஊர்வலமா?
திடம் உடலில் இருந்தாலும் செயலின்றி மடிவளர்த்தால்
தடையின்றி உள்ளவையும் நடைபோட்டுப் போகாவோ?
 
கொடியவர்கள் எல்லோரும் கொடிபிடித்து நடந்திடக்கீழ்ப்
படிந்தவராய்ப் படித்தவரும் அடியாட்கள் படையினிலா?
விடிவெள்ளி எவரென்னும் விழிப்புணர்வுத் தேடலிலே
முடிவாக விடைகண்டு முன்னேறல் எந்நாளோ?

Thursday, November 1, 2012

உயர் நெறி

உயர் நெறி
 
எழில்காட்டும் காகிதப்பூ ஏராளம்தான்
.. எண்ணற்ற வண்ணத்தில் வேலி யோரம்
பொழிலிடையே சிறுசெடியில் ரோசா ஒன்றும்
.. போவோரின் நாசிக்குள் மணத்தை ஏற்றும்
விழியிரண்டும் வெளிவனப்பை விருந்தாய்க் கொள்ளும்
.. விரும்புநறு மணத்துக்கோர் உருவம் இல்லை
வழிப்போக்கன் சிந்தனைக்கு வெளியும் உள்ளும்
.. வளர்பவையால் கிளர்ந்தெழும் கற்பனையாம் ஊற்றே!
 
ஊற்றுகள் சுரந்தோடி ஆற்று வெள்ளம்
.. உருவாக விரைந்தேகி வயற்புறத்தில்
நாற்றாக வளர்பயிர்கள் நல்விளைவை
.. நல்கிடவே வாய்க்காலின் வழியே சென்று
சேற்றுக்குப் பெருமையினைச் சேர்க்கும் நீர்தான்
.. செழுமையுறு பயிராகி உயிர்வளர்க்கும்!
மாற்றங்கள் அறிவியலால் விரிந்த போதும்
.. மண்வளர்க்கும் பயிர்நீக்கு மாற்றே யில்லை!
 
பொறிநுகர்ச்சிப் புலனுணர்வாய் விரியும் சிந்தை
.. பொதுப்படையாய் உயிர்வகைக்குப் பொருந்த வில்லை
தறிகெட்டுப் பாய்கின்ற வேகம் கொண்டால்
.. தரம்தப்பும் நிலையிலுயிர் திறமும் சாயும்!
குறிதப்பா(து) அம்பெய்து வீழ்த்த வல்லார்
.. கொடுங்காட்டில் குள்ளநரி வேட்டை ஏலார்;
நெறிமுறைகள் உயர்ந்தவையால் உயர்வாய் நின்றால்
.. நெடும்புவியில் கெடுதியிலா நிகழ்வே எங்கும்!

Wednesday, October 31, 2012

காலத் தேர்

காலத் தேர்
 
ஓராண்டு வாழ்ந்திடவே மலர்கின்ற காலப்பூ
.. உலகெங்கும் போற்றிடவே உதிக்கின்ற ஞாலப்பூ!
போராட்ட வாழ்வினர்க்கோ புதுவிடியல் எதிர்பார்ப்பு!
.. பொதுவாக எல்லோர்க்கும் ஒருவயதே அதிகரிப்பு!
தேரோட்டும் பதவியினைத் தேய்க்கின்ற வருடப்பூ!
.. தீயவர்கள் வெறியாட்டத் திளைப்புக்குத் தேடும்பூ!
ஏராளம் சேமித்தும் ஏய்த்திருப்போர்க் காசைப்பூ!
.. எப்போது பணிகிட்டும் என்றலைவோர்க்கோ வெறுப்பு!
 
காலத்தேர் ஓட்டத்தின் கணக்காகும் புத்தாண்டே!
கடனாற்ற நீயாரின் கட்டளைக்குக் காத்திருப்பாய்?
மடமையினால் உனைமாய்த்து விதிஎன்பார் மதிஎன்னே!
 
காலம்கண் பொன்னென்றே கழறிடுவார் என்றாலும்
.. களிப்புக்கே நேரத்தை வீணாக்கிக் கழிக்கின்றார்!
வேலையில்லை வறுமையெனும் வேதனையில் பலரிருக்க
.. வெறும்பேச்சே கலையாக வளர்ப்பவர்தான் சிறக்கின்றார்!
மேலைநாட்டு மேன்மைகளை மேல்மூச்சு வாங்கிடவே
.. மேடையிலே முழங்கிடுவார் மேனிக்குப் பொன்னாடை!
மாலையிருள் கவிந்தபின்பும் மண்வேலை செய்வோர்க்கு
.. மலராது மனமகிழ்ச்சி புலராது புதுவிடியல்!
 
காலத்தேர் ஓட்டத்தின் கணக்காகும் புத்தாண்டே!
கடனாற்ற உனக்குலகில் கட்டளையை யிடுவார்யார்?
உடனிருந்தே உனைஏவும் வினைசெய்ய நினைப்பவர்யார்?
 
இடுக்கண்கள் வெல்வதற்கு வேண்டுமென்றார் இதழ்ச்சிரிப்பு
.. இன்மையினால் காலூன்றி எழவேண்டும் பேருழைப்பு
கொடுப்பதற்குக் குணம்கொள்ள மனம்தூண்டும் பெரும்பிடிப்பு
.. குறைகளையே எப்போது கூறுவார்க்குள் கடும்வெறுப்பு
படுத்துறங்கப் பஞ்சணைகள் பலதேடும் பணக்கொழுப்பு
.. பசித்திருப்போர் கண்ணயரப் போதுமோலைப் பாய்விரிப்பு
மிடுக்குநடை யிலாதவனை வீரரெனல் அவமதிப்பு
.. மேன்மைஎங்கும் நிலவுமெனில் மேவிடுமே குதூகலிப்பு!
 
புத்தாண்டே நீநடந்து புதுமைகளை வளர்க்கின்றாய்!
புழுவுந்தன் வாழ்க்கைக்குப் புழுங்காமல் நகர்கிறதே!
பிழையின்றி உனக்கிணங்கி ஒழுகவரும் செழுமைகள்!

Tuesday, October 30, 2012

இயற்கை அன்னை


இயற்கை அன்னை
 
மண்வளத்தின் மாண்புகளை அறிந்து கொள்ள
.. மரம்செடிகள் கொடிவகையாய் இயற்கை அன்னை
எண்ணிறந்த வகைகளிலே எங்கும் காண
.. எழில்பொங்கக் குலுங்குகிறாள்! மாந்தர் தங்கள்
கண்களுக்கு விருந்தாகப் பசுமைக் கோலம்
.. காட்டுகிறாள் காய்கனிகள் தழைகிழங்கு
வண்ணத்தில் பலவகையாய் மலர்கள் என்று
.. வாழ்வோர்க்கு வழங்குகிறாள் வஞ்சமின்றி!
 
உண்பதற்கும் உணவாகி உற்ற நோய்க்கும்
.. உரிய அருமருந்தாகி உயிர்வளர்க்கும்
அன்னையவள் இன்னருளை ஏற்றுக்கொண்டே
.. அவள்படைப்பை அழித்திடவும் முனையும் மாந்தர்
கண்ணிருந்தும் தானிருட்டில் குருடராகக்
.. கயமையிலே பழுத்தவராய் அலைகின்றாரே!
பண்பாட்டில் தேர்ந்தபழம் தமிழர் என்போம்
.. பாதகராய் இயற்கைஎழில் சிதைக்கின்றோமே!
 
'தா, வரத்தை!' எனநோற்றுப் பக்தர் கேட்டால்
.. தயங்காமல் தந்திடுமா தெய்வம் ஐயம்!
தாவரமோ தம்மியல்பாய் வானினின்று
.. தரும்மழையைத் தயங்காது வேண்டும் முன்பே!
நாவினிக்கச் சுவையளிக்கும் விளைபொருள்கள்
.. நம்மியற்கைத் தாயளிக்கும் நல்வரங்கள்!
காவிலுள்ள மூலிகைகள் நோயைத் தீர்க்கும்
.. கண்டறிந்து கொண்டவர்க்கே மண்டும் இன்பம்!

Monday, October 29, 2012

அன்புப் பாலம்

அன்புப் பாலம்
 
அன்பெனும்சொல் நிலைக்கேற்ப அர்த்தம் கொள்ளும்
.. அது இரக்கம் நட்புபாசம் காதல் பக்தி
என்றுபல பேர்கொள்ளும் இடத்துக் கேற்ப
.. யாவுக்கும் அடிப்படையாய் அமையும் நெஞ்சம்
தன்கீழே பணிபுரிவோர் தவிப்பைக் கண்டு
.. தன்னருளால் சுரப்பதனை இரக்கம் என்பார்
என்மனைவி என்மக்கள் என்னும் பாசம்
.. என்மொழியே சிறந்ததென என்னும் பற்று!
 
ஒன்றுபடும் இருவுள்ளத் துணர்வே காதல்
.. உயர்ந்தவரை வணங்கும்பேரன்பே பக்தி
என்றுபல வாறாக அன்பில் பாய்ச்சல்
.. இணைக்கின்ற உறவுக்குப் பாலம் ஆகும்
நன்றுசெய்வோர் தமைச்சுற்றி ஓங்கும் நட்பு
.. நயமதுவும் அன்பினது விரிவே என்போம்
வென்றுவிடும் பகையினையும் அன்பின் ஆற்றல்
.. விரிவாக்கும் நேயத்தைத் தூய்மை யாக்கும்!
 
ஒற்றுமையை உண்டாக்கும் அன்பு நன்று
.. ஓரிழிவோ ஓரழிவோ அன்பில் இல்லை
பெற்றுக்கொள்வதில்காட்டும் அன்பு போலி
.. பேசாமல் வளர்கின்ற அன்புக்காழம்!
கற்றகல்வி என்றென்றும் மறவாமைபோல்
.. கருத்தொன்றும் அன்பு காலம் கடந்துவாழும்!
வெற்றுரையில் வெளிப்படுத்தும் அன்பு வேடம்!
.. விருந்துவைத்து விளம்பரிக்கும் அன்போ ஓடும்!
 
அன்பொன்றே பொதுமைநிலை அணைத்தி ணைக்கும்
.. அவதிதரும் அகப்பணிக்கு நன்மருந்து
அன்புள்ளோர் வறுமையிலும் பண்பில் செல்வர்
.. அடக்கமுடன் ஈந்துமகிழ்வின்பம் உச்சம்!
பன்னலமும் வாய்த்திருந்தும் அன்பில்லாரைப்
.. பகைமைத்தீ சுட்டெரிக்கும்; அன்பு வெள்ளம்
தன்னகத்தே தேக்கியுள்ளோர் அழிவில் சிக்கார்
.. தழைக்கட்டும் அன்பெங்கும் செழிக்கும் வையம்!
 
அன்புசெய்யப் பணமேதும் தேவையில்லை
.. அளவின்றி அகம்சுரக்கும் கொடுத்துவப்போம்
பண்பாக நாம்பழகிக் கொள்வோம் நாளும்
.. பகைபொறாமை வெறுப்பெரிச்சல் யாவும் மாளும்!
ஒன்றுபட மொழிநாடு தடையே இல்லை
.. உயர்வுதாழ்வோடினம் பதவி யாவும் தாண்டி
வென்றுநிற்க அன்புக்கு வீரம் உண்டு
.. விதிசதியை மதிவெல்லத் தூண்டும் அன்பே!

Sunday, October 28, 2012

குருவும் சீடரும்

குருவும் சீடரும்
 
சிந்தனையாளர் தம்முள் மூத்தாராகச்
.. செப்புகின்றோம் கிரேக்க ஞானி சாக்ரடீசை
எந்தஒன்றும் ஏனென்று வினா எழுப்பி
.. ஏற்றவிடை காணவேண்டும் என்று சொன்னார்!
சொந்தமதியால் ஆய்ந்து முடிவு கண்டால்
.. சூழ்ச்சிவலை பின்னிடுவோர் மின்னுவாரா?
அந்தவழி தொடர்ந்தவர்கள் அறிஞர் பல்லோர்
.. அகிலம்போற்றும் பிளேட்டோ அவரின் சீடர்!
 
குருவினது கொள்கைவழி குறிக்கோளோடு
.. கோணாது சீர்த்திருத்தப் பணியை ஏற்று
பெருந்தொண்டை ஆற்றிய சிந்தனையாளர்கள்
.. பிறந்ததந்த நாட்டுமக்கள் பேறேயாகும்!
வரும்போகும் செல்வத்தில் மூழ்கிப் போவோர்
.. வரலாற்றில் புகழுச்சி ஏறி நில்லார்
தெருவோரம் வதிகின்ற ஏதிலாரின்
.. திறமுணர்ந்து வழிகாட்டிச் சிறந்தோர் சான்றோர்!
 
ஆசிரியராய்ச் சிறந்தோர் திறமை போற்றி
.. ஆர்வமுடன் ஆற்றல்கள் வளர்த்துக் கொள்ளும்
மாசில்லா மாணாக்கர் சான்றாய் நிற்பர்
.. மதிஒளியில் நிதிஒலியின் மகிமை மங்கும்
வீசுகின்ற தென்றலிலே புகழை ஏற்றி
.. விடுவதற்குக் குருமாரே உருவானார்கள்
பேசுதலைக் குறைத்திங்கே கடமை பேணும்
.. பெருங்குணத்தைப் பெறக்குருவின் துணை கொள்வோமே!

Saturday, October 27, 2012

மான மனம்

மான மனம்
 
முக அழகைப் பார்த்ததுமே விழிகள் தாழ்ந்து
மூடியுள்ள மேடுபள்ளம் பாய்ந்து மொய்க்கும்
அகத்தினிலே கிளுகிளுப்போ கிளர்ச்சி தானோ
அதிகரிக்கும் இதில்வயது பேதம் இல்லை!
அகவைமுதிர்ந்தோர் நினைவில் பழங்கதைகள்
ஆசையிலாழ் நெஞ்சுக்குப் பலவீனந்தான்!
தகவுடையார் தனியாளாய்ச் சென்ற போதும்
தாங்கியுள்ள மான மனம் தவறா செய்யும்?
 
பேதையரைப் பிடித்துவிட்டால் மேதை என்பார்
பெரும்பான்மை ஆசைமனம் பேதலிக்கும்
தீதையெலாம் நலமென்று திரித்துரைப்போர்
திறமையினைச் சூதெனலே நீதி நேர்மை
போதைவர கிடைப்பதனைக் குடித்து வைப்போர்
போய்ச்சேரும் தூரம் காத தூரம் இல்லை
பாதையிலே அதிவேகம் உபாதை சேர்க்கும்
பண்புடைமை எனில் பகையும் போற்ற வேண்டும்!
 
அடக்கமென்றால் சொரணையற்றுக் கிடப்பதன்று
ஆர்வமொன்றால் அடைவதிலே வேகம் தானா?
நடத்தையில்காண் சுறுசுறுப்பா நன்னடத்தை?
நாகரிகம் பாசங்கின் பற்றுக்கோடா?
திடநெஞ்சு தடந்தோளின் வலிமை ஏற்றும்!
திசை அறியான் காற்றுக்குப் பேர் வைப்பானா?
மடம் உடலின் வனப்பாகும்; நெஞ்சில் கேடே!
மானம்கால் கொள்ளாத மனமே பாழாம்!

Friday, October 26, 2012

உன்னால் முடியும்!

உன்னால் முடியும்!
 
உன்னால் முடியும் உறுதி இது - எந்த
.. உழைப்பு மில்லாமல் வருவதெது?
தன்மனை மக்கள் தாய்தந்தை - அவர்
.. தகுநலம் காத்திடக்கொள் சிந்தை!
 
உழைப்பை ஏற்பவன் உயர்ந்தவனே! - ஊரை
.. உறிஞ்சிக் கொழுப்பவன் தாழ்ந்தவனே
பிழைக்கும் நாயும்தெரு பொறுக்கி - உழைத்து
.. பிறரையும் பேணுதல் உயர்விருப்பு!
 
கைகளே இல்லாதவர் கூட - நம்பிக்
.. கைகளால் உயர்ந்தே இருக்கின்றார்
பொய்களால் கொழுப்பதா? அது வீக்கம் - எந்தப்
.. பொறுமலும் வேண்டாம் அது ஏக்கம்!
 
இலவசத் துக்காய்ப் பறக்காதே - எந்த
.. இழிவிலும் துணிவினைத் துறக்காதே
பலப்பல வழியுண்டு மறக்காதே - எதற்கும்
.. பயந்திடும் வாழ்க்கையே சிறக்கதே!
 
உழைப்பின் பலனே தரும் பெருமை - இரவில்
.. உறக்கமும் நிம்மதியாய் வருமே!
தழைத்திடும் வெட்டிய மரக்கிளையும் - கிளைகளை
.. தாங்கியே வளர்ந்து தரும் விளைவும்!

Thursday, October 25, 2012

தன்னிரக்கம்

தன்னிரக்கம்
 
பார்வையா ளனாயமர்ந்து படிக்கட்டாகும்
.. பழக்கத்தால் பாழாகிப் போனேனாநான்?
ஆர்வத்தொடெனக்கேநான் விளம்பரத்தை
.. ஆக்கிக்கொள்ளாமையும் என் அறியாமையோ?
சோர்வின்றி எழுதுவது பதிப்போர் சொத்தாய்ச்
.. சுகம்பெருக்கும் வித்தாகக் கொள்ளத் தானா?
யார்வந்தென் இயல்புதனை மாற்றல் ஒல்லும்?
.. இப்படியா எழுபத்தெட் டாண்டை யுற்றேன்?
 
உள்ளத்தில் ஊறுகின்ற உணர்வைப் பேச்சில்
.. உரைப்பதிலே மழுப்புதலை என்று கற்றுக்
கொள்ளத்தான் போகின்றேன்? எனக்கிருக்கும்
.. கொள்கைகண்டு பிறர்முகங்கள் சுருங்கும் போது
வெள்ளைமனம் விரும்புதல்யார் நல்லதென்பார்?
.. வெளுத்தமுடித் தலைவழுக்கை யின்மை சொத்தா?
குள்ளனுக்கும் பெருமையுண்டு நெட்டையர்கள்
.. குனிந்தன்றோ அவனிடத்தில் பேசுகின்றார்?

Wednesday, October 24, 2012

கொடுப்பதும் கொள்வதும்

கொடுப்பதும் கொள்வதும்
 
சிலர்வாழ்க்கை பலருக்குச் சான்றாய் ஓங்கும்
.. சிறப்பான தொண்டுகளால் புகழைத் தாங்கும்
மலர்மணத்தால் மணம் மகிழும் மூக்கின் தொண்டால்!
.. மதிநலத்தால் உளம்குளிரும் உறவாம் நட்பால்
நலம்புரிதல் என்பதொன்றே நாட்டமானால்
.. நாள்களெலாம் பயனுள்ள வகையே செல்லும்
குலம்சாதி மதம்பேதம் கொள்ளா நெஞ்சால்
.. குற்றத்தைக் களைபவரால் மனிதம் வாழும்!
 
உண்மைக்குப் பலநேரம் சோதனைகள்
.. ஒன்றன்பின் ஒன்றாக நிலைகுலைக்கும்
திண்மையுள்ள கொள்கைக்கோட்பாட்டில் நிற்போர்
.. திகைத்தாலும் தடம்மாறிச் செல்லமாட்டார்
கண்ணெதிரே வஞ்சங்கள் கவர்ச்சிக் காட்டக்
.. காணாதோற் போலவே நேர்வழியில் செல்வார்!
எண்ணத்தால் தெளிவோடு நேர்மை உந்த
.. ஏறுநடை உடையோர்முன் வீழும் சூழ்ச்சி!
 
வெள்ளைஉடையால் நெஞ்சக் கறுப்பை மூடும்
.. வேடமிட்டே அலைந்திடுவோர் ஒருநாள் வீழ்வர்
துள்ளுநடை முதுமையிலும் தளராத் தன்மை
.. தோல்விவெற்றி எதனிலுமே நிலைமை மாறா
உள்ளத்தில் ஊற்றாக ஒழுக்கம் பொங்கும்
.. ஊர்நலத்தைக் கெடுப்போர்க்கே உவகை மங்கும்!
கொள்வதினும் கொடுப்பதுவே குணமாய்க் கொண்டோர்
.. குறள்கூறும் பெருமைகளுக் குரியோர் தாமே!

Tuesday, October 23, 2012

நன்றி பயவா வினைகள்

நன்றி பயவா வினைகள்
 
புன்மதியோன் என்றறிந்தும் பொன்மொழிகள் கூறிப்
.. புத்தியினைத் தெளிவாக்கும் முயற்சியெலாம் வீணே
தன்னறிவைப் பெரிதாகத் தான்வியந்து பேசும்
.. தன்னலத்தார் நெஞ்சுநடு நிலைக்காணல் கானல்!
கொன்றுண்ணல் உயிரழிக்கும் கொடுமையென்றே எண்ணாக்
.. குணக்கேடர் பாலிரக்கம் கல்லில்நார் காணல்!
மன்றத்தில் பணிவின்றி மாசுகளைச் சான்றோர்
.. மனஞ்சுளிக்கப் பேசுபவன் சாம்பலின்கீழ் தீயே!
 
என்றேனும் நலம்தன்னைத் தேடிவரும் என்றே
.. எண்ணத்தை வளர்த்திருக்கும் மடியுடையான் ஆற்றல்
புன்மதியால் வன்முறையால் பொதுச்சொத்தை நாசம்
.. புரிசெயலோன் தோள்வலியும் முகப்பொலிவும் மற்றும்
முன்னோர்கள் மொழிந்தவற்றைப் பிறர்க்கெடுத்துச் சொல்வோன்
.. முன்நடக்கும் வழிகாட்டி ஆகாமை போன்று
நன்றிபயவா வினைகள் நாடோறும் செய்வோர்
.. நல்லவர்போல் நடிப்பதனால் நாட்டுக்கென் நன்மை?
 
சென்றுவிட்ட மாண்புகளைச் செப்பியேநாள் ஓட்டும்
.. செயலினிலே ஆக்கத்துக்(கு) ஊக்காமை மேலோ?
வென்றிடுதல் ஒன்றேதான் வீரமென்றே நாடி
.. வெட்கமின்றி விதிமீறி விரைந்திடுதல் கீழ்மை!
குன்றினைப்போல் செல்வத்தைக் குவித்தின்னும் சேர்க்கக்
.. கூடாரை நாடுவோனைக் கேடுவந்து தாக்கும்!
என்றுமெனக் கழிவில்லை என்னுமாண வத்தில்
.. இன்புறுவோர் இருள்வினைகள் நன்றிபயவாவே!

Monday, October 22, 2012

இருள் மனம்

இருள் மனம்
 
உலகத்தில் ஆண்பெண் என்றிருபாற் கூறாய்
.. உள்ள உயிர் வகையிரண்டை ஆய்ந்து நோக்கின்
பலவிதத்தும் வன்மையுடன் மென்மை சேர்ந்து
.. பருவத்தேர் ஓட்டத்தில் இயைந்து கூடிக்
குலவுதலில் இனம்பெருகி வாழ்க்கை என்னும்
.. கூட்டுறவுத் தொடர்ச்சியது நீண்டு வையம்
நிலவுநிலையாதல் உண்மை! ஆண்பெண் வாழ்க்கை
.. நீள்பயணம் செய்ய இருசக்கரங்கள்!
 
பெண்ணீனத்தின் மேன்மையினைப் பேணிக் காக்கப்
.. பிறந்தவர்கள் பெயர்விளங்கக் கண்டும் ஏனோ
பெண்சிசுவைக் கள்ளிப்பால் இட்டுக் கொல்வார்
.. பேதையர்வாய் நெல்லிட்டும் ஊரழித்து
மண்ணுக்குள் மறைக்கின்றார் குப்பைத்தொட்டி
.. மறைவினிலே வீசுகின்றார் அந்தோ அந்தக்
கண்மணிகள் வாழ்ந்திருந்தால் தியாக வீரக்
.. காவியத்து நாயகியராகக் கூடும்!
 
தீரர்களாய்த் தியாகிகளாய்த் தேசம் எங்கும்
.. திகழ்பெருமை நாட்டுதற்குத் தேர்ச்சி செய்யும்
ஈரமனம் வீரமனம் தாய்க்குத் தானே!
.. ஏனிந்த தாய்க்குலத்தை நசுக்குகின்றார்?
தாரமாகத் தாயாகப் பாட்டியாகத்
.. தக்கமதி யுணர்த்திவழி காட்டுவோரைப்
பாரமெனல் பகுத்தறிவோ? குலவிளக்கைப்
.. பாதகத்தால் அழிக்குமுளம் கும்மிருட்டே!

Sunday, October 21, 2012

குணக்கோணல்

குணக்கோணல்
 
உன்முடிவை நானேற்க வேண்டுமென்றால்
.. உந்துதலைப் பலமாக்க முயலும் நண்பா
என்னிடமும் சிந்திக்கும் மனமிருக்க
.. ஏனிதனை அடியோடு மறந்து போனாய்?
நன்மையெனில் பொதுவாக அனைவர்க்கும் தான்
.. நாசமெனில் இழந்தவர்க்குத் துன்பம் தானே?
தன்வலிவால் இன்னலினை இழப்போன் வாழ்க்கைத்
.. தரத்தினிலே உயர்வதுதான் மானக்கேடு
 
கிளைஒடிந்தும் துளிர்க்கின்ற மரங்கள் உண்டு
.. கீழ்ப்படுத்தி வைத்திருந்தும் எழுச்சி காணும்
உளமுள்ள சிலருயர்வைக் கண்டபின்னும்
.. உரம்பெற்றும் முயலாதோர் தலையெழுத்தின்
விளைவின்றி வீறின்றிக் கிடந்துதானே
.. வெகுகாலமாய் அடிமைநிலையில் உள்ளார்
களைசிலவும் விளைபயிரில் ஓங்கி நிற்கும்
.. காண்பதற்கு அதன்சாயல் மயங்க வைக்கும்
 
காணாத நிலையினிலும் மணம் நுகர்ந்து
.. கணத்தினிலே மலரின்பேர் சொல்லல் ஒல்லும்
தூணெந்த மரத்தாலே ஆனதென்று
.. தூர இருந்தேகூறத் துணிவோர் உண்டோ?
வீணாக வார்த்தைகளைக் கொட்டுவோர்க்கு
.. வேகமாகக் கைத்தட்டல் அடக்கத் தானா?
கோணலுள்ள சிலவற்றை நிமிர்த்தத் தோற்போம்
.. குக்கலுடற் கூறுசிலர்க் குணத்துக் குண்டே!

Saturday, October 20, 2012

குறுமதியாளன் குறிக்கோள்

குறுமதியாளன் குறிக்கோள்
 
அடியாளாய் வாழ்ந்தாலும் பரம்பரைக்கே
.. ஆனமட்டும் சேர்த்துக் கொள்ளாது போனால்
தடிமாடாய்த் திரிந்தவனாய் அடிமாடாகத்
.. தான்போக நேர்ந்துவிடும் எந்தக் கொள்கைப்
பிடிமான அரசியலாம் தேரில் ஏறும்?
.. பேசாது தலையாட்டிக் கொண்டு பின்னே
கொடிதூக்கி நடந்தாலே கோடி நன்மை
.. குறிஎன்ன குறையின்றி வாழ்தல் தானே?
 
படிதாண்டாப் பத்தினியாய் நடிப்பதற்குப்
.. பரத்தையிடம் யார்பாடம் பயிற்ற வேண்டும்?
இடிதாங்கி அழிவதற்கா பிறந்தேன் நானும்?
.. இழிவஞ்சிக் கிடப்பவர்கள் என்ன கண்டார்?
முடிசூட்டி உலாவருவோர் கண்முன்னாலே
.. முண்டியடித்தோடி முன்னால் மண்டியிட்டுப்
படிகின்ற மண்ணுடலைப் பார்த்துதானே
.. பசையுள்ளோன் பரிதாபம் என்மேல் தங்கும்!
 
பத்தினியாய் வாழ்பவர் பட்டினியால் வாட
.. பார்த்துத்தான் இப்பாடம் கற்றுக் கொண்டேன்
சொத்தென்ன போயிற்று சுகமாய் வாழ
.. சுயநலத்தில் ஆழ்ந்திட்டால் குடியா மூழ்கும்?
உத்தமமாய் வாழ்வதற்குப் பாதை ஒன்றே
.. ஊரேய்த்து வாழ்வதற்கு வழிகள் நூறு
செத்துக்கொண்டிருப்போரின் சித்தாந்தத்தைச்
.. செவிமடுப்போர் வாழ்க்கையிலே சொத்தா சேரும்?

Friday, October 19, 2012

நாணம்

நாணம்
 
நாகரிகப் பண்பாகும் நாணம்; என்றும்
.. நல்லதல்லாச் செயல்நிறுத்த எச்சரிக்கும்!
தாகத்தைத் தீர்க்கமது அருந்தப் போமா?
.. தகாமுறையில் கனியவைத்துப் புசிக்கலாமா?
வேகத்தில் சிந்தனைதன் வீழ்ச்சி காணும்!
.. விருந்திடுவோர் வஞ்சமறிந் துள்ளம் நாணும்!
மோகத்தைநாண் ஏற்றி வீழ்த்தா விட்டால்
.. மூளிருளில் குடும்பநலன் மூழ்கிடாதா?
 
பரிவதனால் பரிசுபெற நாண வேண்டும்
.. பணம்கொடுத்துப் புகழடைதல் பண்ட மாற்றா?
புரிசெயலால் புகழடைதல் போற்ற லாகும்
.. பொய்யுரைத்தே மெய்வளர்த்தல் வெட்கக் கேடு!
கரிசனமில்லா நேர்மை காண வேண்டும்!
.. கண்ணோட்டல்பண்பணியைப் பூண வேண்டும்!
விரிவுரையில் விளக்கமொளி வீச வேண்டும்
.. வீம்புக்கு நிற்போரே நைந்த தாம்பு!
 
அறிவுடையார் அஞ்சுகின்ற செயலைச் செய்யா(து)
.. அகல்வோர்க்கு நாணமணி கலனாய் ஆகும்
செறிவறிந்தும் குறைகூறல் முறையா என்னும்
.. சிந்தனையில் திருத்துகின்ற நாணம் வேண்டும்
நிறைவுதனை எப்படியோ பெருக்கிக் கொள்ள
.. நெஞ்சத்தில் நாணுடைமை காவல் வீரன்!
மறையும்நாள் வரை பிறழா முறையில் வாழும்
.. மனச்சான்றாம் நாணுடைமை மாண்பே யன்றோ?

Thursday, October 18, 2012

சிரிக்கலாமே!

சிரிக்கலாமே!
 
நாவென்றால் நல்லதையே சுவைக்க வேண்டும்!
.. நாநயத்தில் உண்மையொளி சுடர வேண்டும்!
வாவென்று சிரங்குக்கை வழங்க நீண்டால்
.. வஞ்சகத்தை யுணர்ந்தும் கையேந்தலாமா?
தாவென்று கெஞ்சுதலே தலைமைப் பண்பாய்த்
.. தாங்குவதோ ஏங்குவதோ தகுதியாமோ?
சீஎன்றே சிறந்தவர்கள் இழித்துப் பேசும்
.. சிறுமதியார் அறங்கூறின் சிரிக்கலாமே!
 
தமிழெழுத்தின் வகையறியான் இலக்கணத்தைத்
.. தான்கற்றுத் தருவேனென் றுரைத்தல் நெல்லின்
உமிதனக்குப் பறந்திடவே தெரியும் என்றே
.. உரைப்பதைப்போல் நகைப்புக்கே இடமுண்டாக்கும்!
குமிழ்கன்னக் குழந்தைக்கு முத்தம் வைக்கக்
.. கொலைநாற்ற வாயுடையோர் முந்தலாமா?
திமிரேறும் தெளிவில்லாச் சிந்தை கொண்டோர்
.. தேர்ந்தவராய்த் தமைஎண்ணச் சிரிக்கலாமே!
 
மக்களது தீர்ப்புகளால் மனம் வெதும்பி
.. மாசென்றும் தூசென்றும் ஏசுவோர்க்குத்
தக்கவைத்துக் கொள்ளஒரு தகுதி இல்லை!
.. தலைக்கனத்தை வளர்ப்பதிலே காலம் ஓட்டிப்
பக்கதுணையாய்ப் பகையை நம்பி ஒட்டும்
.. பச்சோந்திகளின் நடுவே நானே என்று
கொக்கரித்தால் நகைக்காமல் என்ன செய்வோம்?
.. கூகைநன்றாய் இசைக்குமென்றால் சிரிக்கலாமே!

Wednesday, October 17, 2012

உண்மைகள்

உண்மைகள்
 
விருந்தோம்பல் தேவையுள்ள எளியோர் தம்மை
.. விருப்பமுடன் வரவேற்றுப் பசியை ஆற்றல்
பொருள்கொடுத்துப் புகழ்த்தேடி அழையாப் போக்கைப்
.. புறந்தள்ளிக் கடமையெனச் செய்தல் ஈகை!
அருளென்றால் இயல்பாக நெஞ்சின் ஊற்றாய்
.. ஆவனசெய்தணைப்பதற்குச் சுரக்கும் அன்பாம்!
இருள்நீக்கி நெஞ்சத்தில் ஒளிவிளங்க
.. எண்ணம்சொல் வினைத்தூய்மைக் குந்தல் கல்வி!
 
உண்மைதனை நிலைநாட்ட அச்சம் கொள்ளா
.. உள்ளத்தின் சீரொழுங்கே வீரம் என்றார்
எண்ணத்தில் இடராமல் தேர்ந்து செய்தும்
.. இறுதியிலே தோல்வியெனில் ஏற்றல் ஆற்றல்!
மண்ணகத்தின் மாண்பங்கே வாழும் மாந்தர்
.. மானமுடை வாழ்க்கைமுறை காட்டும் உண்மை
கண்போல மொழிநாடு இனத்தைப் பேணும்
.. கடமைகளில் தவறாமை பேராண்மையாம்!
 
பழம்பெருமை பேசிடத்தான் மேடை என்னும்
.. பழக்கத்தில் ஆழ்ந்தேநாம் மறந்தோம் பண்டைச்
செழுமையினைப் பலதுறையும் காணவேண்டும்
.. செயல்முறையில் இழிவென்றால் நாணவேண்டும்
ஒழுக்கந்தான் இயக்கத்தின் உயர்வாம் என்னும்
.. உரம்நெஞ்ச நிலம் கொள்ளும் வித்தாய் வேண்டும்
தொழுதற்கே தலைகைகள் என்றே வாழ்வோர்
.. துணிவில்லார் துணையாகித் துயர்மாய்ப்போமா?

Friday, October 12, 2012

அவன் போக்கு!


அவன் போக்கு!
 
குறையா நிறையா தெரியவில்லை - அவன்
கொள்கை தவறா புரியவில்லை!
 
நியாயந் தன்னைக் கொல்வோரை
நேரில் கண்டால் கூசுகிறான்
நேர்மை வழியே செல்வோரை
நெருங்கிச் சென்று பேசுகிறான்
- குறையா...
 
தியாகம் என்பதை விரிவாகத்
தெரிய உரைப்பார் மேடையிலே
வியாபாரந்தான் அரசியலோ?
விளங்கிக் கொண்டு விலகிடுவான்
- குறையா...
 
கைகள் தட்டும் கூட்டத்தில்
கலந்திட மறுப்பவன் ஓட்டத்தில்!
பொய்யாய்ப் புகழ்புகை மூட்டத்தில்
புகுந்தால் புழுங்குவான் வாட்டத்தில்
- குறையா...
 
உயர்த்தித் தூக்கிப் பேசிடுவோர்
உதறித் தூர வீசிடுவார்
பயத்தில் ஒதுங்கும் விழிப்புணர்வைப்
பலமாய்க் கொள்வான் வழித்துணையாய்
 
சரியா தவறா தெரியவில்லை - எதைச்
சாதிக்கப் போகிறான் புரியவில்லை!

Monday, October 8, 2012

முன்னும் பின்னும்

முன்னும் பின்னும்
 
சதுரத்துள் சிறுவட்டம் வரைதல் கூடும்
.. சதுரமதும் வட்டத்துள் சிறிதாய்க் காணும்
எதுவொன்றும் தனிமையிலே பெரிதாய் தோன்றும்
.. இயல்புக்கு மீறுவதா இயற்கை ஆகும்?
புதுமையென விதிமுறையை மீறல் புன்மை
.. புடலங்காய் சுரைக்காய் போல் பெருக்க லாமா?
பதமான தாள்களிலே வண்ணப் பூக்கள்
.. படைத்துமணம் தெளித்திறைக்குச் சூட்டுவாரா?
 
முருங்கையிலைக் கீரையிலே சத்துண்டென்றால்
.. முறியுமதன் கிளையெடுத்தா கூரை வேய்வார்?
இருப்பதுவே புனிதமென்று துளசிதன்னை
.. இருட்டறையில் வைத்தெவரும் வளர்க்க மாட்டார்
விருந்தென்று பல்சுவையில் உணவுப் பண்டம்
.. வேகாத நிலையென்றால் வயிறென்னாகும்?
மருந்தான மூலிகைகள் கசக்குமென்றே
.. மாற்றாகத் தேன்கலக்க அளவும் உண்டு!
 
நடைமுறைகள் பலகாலம் பயின்று பின்னே
.. நன்முடிவைத் தேர்ந்தேதான் பயன்பாட்டுக்குத்
தடையில்லை எனமுன்னோர் எதையும் செய்தார்
.. தற்கால அறிவியல் முன்னேற்றம் என்று
விடைகொடுத்தாம் எளிமையது பழைமை என்று
.. வீம்புக்கு நாகரிகப் போக்காய்க் காட்டும்
உடை உணவுப் பழக்கங்கள் நோய்க்கிடங்காய்
.. உடல் உள்ளம் உருமாற உவப்பா வாழ்வு?

Sunday, October 7, 2012

வெற்றி

வெற்றி
 
வல்லமையால் பொல்லாங்கில் வாகை சூடல்
.. வாழ்த்துகிற வகைமாண்பு கொள்வதில்லை
சொல்செயலால் சிந்தனையால் தன்னலத்தைச்
.. சொந்தமாக்கிச் சேமிக்கும் சொத்தும் குப்பை
கல்லாதார் வஞ்சமின்றிக் கடமையாற்றிக்
.. காட்டுகிற சிறுசெழிப்பும் மாசில் வெற்றி!
நல்லவர்போல் நடித்திடுவோர் நாநயத்தால்
.. நம்பவைத்துக் கெடுத்தடையும் வெற்றி போலி!
 
வெற்றியென்றால் நல்லுளத்தோர் விரும்பிப் போற்றும்
.. விவேகத்தின் பதிவாக விளங்க வேண்டும்
குற்றத்தை மறைத்ததனை வினைநலத்தில்
.. கொண்டவெற்றி யெனப்போற்றக் கூட்டம் சேர்த்தால்
பெற்றவளே தன்வயிற்றை நொந்து கொள்வாள்!
.. பெருமைதரும் வெற்றியது நற்றாய்ப் பிள்ளை!
மற்றவர்கள் விதைப்பைத்தன் வெற்றி என்று
.. மலர்முடியைத் தலையேற்றல் மடமை உச்சம்!
 
கடும்முயற் சியும்தோல்வி யடைதல் கண்டு
.. கலங்காது படிக்கட்டாய்க் கருத்திற் கொண்டு
தடுமாற்றம் இல்லாமல் தொடர்வோர்க் குத்தான்
.. தாளாண்மை வெற்றிக்கனியினிக்கும்!
படுத்துகொண்டே வெற்றி படைப்பேன் என்னும்
.. பகற்கனவு தோல்வியிலே தோய்த்துக் காண்போர்
எடுத்துக்கொள்வதற்கேற்ற எச்சரிக்கை!
.. ஏற்கின்ற ஊக்கம்தான் உயர்த்தும் ஏணி!

Saturday, October 6, 2012

நல்லவரும் வல்லவரும்

நல்லவரும் வல்லவரும்
 
உருவத்தில் ஏறத்தாழ் விருந்த போதும்
.. உள்ளத்தில் உணர்வுகளில் பொதுநலத்தைக்
கருதுதற்கே பகுத்தறிவு மாந்தருக்கு!
.. கண்முன்னே பல உயிர்கள் பசியால் வாட
சிறிதும் சஞ்சலமின்றித் திரிவர் தீயர்
.. சிறுமதியோர் பெருகுவதே பூமி பாரம்
வறியநிலை மண்டையிலே கொண்டோர் இங்கே
.. வாழ்கின்ற காலமெலாம் உலகக் கேடே!
 
எல்லோர்க்கும் எல்லாமும் வேண்டும் என்னும்
.. எண்ணமிலார் தம்பெண்டு மக்கள் மட்டும்
செல்வத்தில் நீந்தும் பேராசை கொள்வார்
.. சீரழிப்பார் ஊரழிப்பார் சாகும் மட்டும்
நல்லவரே வல்லவராய் மாற வேண்டும்
.. நலிந்தவரின் துயர்நீக்க உதவ வேண்டும்
புல்கூட மருந்தாகிப் புண்ணை ஆற்றப்
.. பொதுநலத்தை ஏன்மனிதன் பொசுக்குகின்றான்?
 
வல்லமையால் சேர்ந்திருக்கும் வசதி யாவும்
.. வாழ்நாளின் இறுதிவரை உறுதி யாமோ?
பொல்லாதார் சமத்துவத்தைப் போற்ற மாட்டார்
.. போங்காலம் வரையில் தன்னலமாம் சேற்றில்
எல்லையிலா ஆசைகளை வளர்த்துக் கொண்டே
.. இடர்ப்பாட்டில் சிக்கி இழிநிலையில் வீழ்வார்
நல்லவராய் வாழ்ந்தவரின் வரலாறெல்லாம்
.. ஞாலமுள்ள நாள்வரைக்கும் புகழாய் வாழும்!
 
உள்ளத்தை மறைத்துரையில் பரிவைக் காட்டல்
.. ஊர்கெடுப்போர் ஏமாற்று வித்தை என்றே
பள்ளத்தில் இருப்பவர்கள் உணர்ந்து மீளப்
.. படும்பாடும் பாதகரால் பாழாய்ப் போகும்
கள்ளத்தை வளர்ப்பவர்க்கோ பகட்டாய் ஆடை
.. கடுமுழைப்பில் நடுங்குமுடல் சுற்றக் கந்தல்
கொள்ளையரின் உடற்பெருக்கம் இல்லா தோரின்
.. குடற்சுருக்கம் எனும் அவலம் ஒழிவதென்றோ?

Friday, October 5, 2012

புதியதோர் உலகம் செய்வோம்

புதியதோர் உலகம் செய்வோம்
 
புதியதோர் உலகம் செய்வோம் - இந்தப்
பூமியின் வளமெலாம் பொதுவெனச் சொல்வோம்
எதிரிகள் எவருமிங் கிலரே - என்னும்
இனிய நிலையினில் இருக்குமா இடரே?
 
விதியினைச் சொல்லியே ஏய்ப்பார் - ஏதோ
வேறுலகம் என மயக்கியே மாய்ப்போர்
சதியினால் எளியரைச் சாய்ப்போர் - இங்கே
சகலமும் தமக்கென வளைப்பதை மாய்ப்போம்
- புதியதோர் உலகம் செய்வோம்
 
மதியுளோர் தன்னலம் ஆசை - மற்றவர்
மார்க்கமே தவறென வளர்க்கிறார் மீசை
சதமெனச் சேர்க்கிறார் காசை - கள்ளச்
சந்தையில் உழல்பவர் முகத்திலேன் மீசை
- புதியதோர் உலகம் செய்வோம்
 
சிந்தியாமல் பின் தொடர்தல் - மக்கள்
சேவை என்போர் மனம் புகழிலே படர்தல்
வந்தனைக்காய் உடல் வளைதைல் - என்று
வயிறு வளர்ப்பவர் வளர்ச்சியைக் களைந்தே
- புதியதோர் உலகம் செய்வோம்
 
மந்தை ஆடாய்ப்பின் தொடர்தல் - ஏதோ
மாண்புளோன் என்பவன் தாள்சரண் அடைதல்
வந்தனை செய்யவே வளர்தல் - என்று
வாழ்ந்திடும் வறியவர் தாழ்நிலைக் களைவோம்
- புதியதோர் உலகம் செய்வோம்
 
அறிவியல் சிந்தனை தழைக்கும் - கல்வி
அளித்துப் பயிற்றலால் தாயகம் செழிக்கும்
நெறிமுறை நேர்மைகள் நிகழ்வாய் - இயங்கும்
நினைப்பிலே நீசரா பதவியில்? இகழ்வாய்!
- புதியதோர் உலகம் செய்வோம்
 
உழைப்பவர் உயர்வதே பெருமை - ஏய்ப்போர்
உடலிலே குருதியா? கழிநீர்! சிறுமை!
தழைகளும் மூலிகையாகி - உடலைத்
தாக்கிடும் பிணியற பணிசெயல் யோசி
- புதியதோர் உலகம் செய்வோம்
 
பேச்சிலும் மூச்சிலும் நாடு - மேன்மை
பெற்றிடப் பெரும்பணி ஆற்றிட நாடு
தீச்சுடர் போல் அழி கேடு - உண்மைத்
திறமையின் வலிமையைப் புகழுமே ஏடு
- புதியதோர் உலகம் செய்வோம்

Thursday, October 4, 2012

எழுக தோழா!

எழுக தோழா!
 
படைப்பவன் தினமும் படிப்பவனானால்
.. பதிந்திடும் பண்புகள் பலவும்
உடைபடும் கிளையும் உடனடி துளிர்த்தே
.. உதவிடும் குணத்தை நிலவும்
கொடுத்திடும் இயல்பினைக் கெடுத்தவன் அடையும்
.. குதூகுலம் வஞ்சகப் பலமா?
விடுத்தவன் ஒதுங்க அடுத்தவன் பிடிக்குள்
.. விரைவினில் சிக்குதல் நலமா?
 
விளம்பரம் தேடிக் களம்பல நாடும்
.. வேகத்தில் அலைந்திடல் மடமை
உளந்தனில் தூய்மை விளங்கிட வாய்மை
.. ஒன்றிடச் சிறந்திடல் கடமை!
செடிகளின் மலர்கள் கொடுத்திடும் மணத்தில்
.. சேர்ந்திடும் புத்துணர்வகத்தில்
நடைமுறை வாழ்வில் கடைபிடி ஒழுங்கை
.. நல்கிடும் பொலிவினை முகத்தில்
 
அடுத்தவர்க் குதவும் நடத்தையே சிறப்பு
.. அளித்திடும் நிறைமன இருப்பு
கொடுக்கிற நலத்தைத் தடுக்கிற விரைவு
.. கீழவர்க்கே உடன்பிறப்பு!
தொடுத்திடும் பூவே மாலையில் தொங்கும்
.. தொடர்ந்திடும் பெருமையே எங்கும்
விடுத்திடும் அம்பே விரைந்துமுன் பாயும்
.. வினைசெய எழுதுயர் மாயும்!

Wednesday, October 3, 2012

அநியாயத் தீ!

அநியாயத் தீ!
 
பதிப்பாளர் சிலரிடத்தில் படைப்பைத் தந்து
.. பணம்பெறவே நான்பட்ட பாடு நெஞ்சம்
கொதிப்படையும் கொடுமையினை நினைக்கும் தோறும்
.. குமறுவதைத் தடுத்திடவே முடியவில்லை
மதிகொண்டு மதிப்போடு வாழ்வதற்கு
.. மனமிருந்தால் போதாதே! நடப்பே வேறு!
நிதிசேர்த்துப் படைப்பாளி வெளியிட்டாலும்
.. நிம்மதியோ நூலகத்தார் ஆணை நோக்கி!
 
இலக்கியமும் உளவியலும் கற்று நெஞ்சில்
.. எழும்கருத்தை எழுத்துருவில் எழுப்பி நூல்கள்
பலதுறைகள் சார்ந்தவையாய் படைத்துக் காணும்
.. பலனான மனநிறைவைச் சொல்லப் போமோ?
சிலர்கதைகள் எப்படியோ? பலர்க்கு நேர்மைச்
.. செயல்முறையாய் இருப்பதனால் சிக்கல் நேரும்!
நலம்பொதுவா? தனிச்சொத்தா? உண்மை சொல்ல
.. நாம்நடக்கும் பாதையிலே யாரைக் கேட்போம்?
 
ஏமாற்றம் இதயத்தில் உரத்தை ஏற்றும்
.. இன்னலிலே இதையேற்போர் எத்துணைப்பேர்?
நாமார்க்கும் அஞ்சோம் என்றிருப்போர் கூட
.. நார்நாராய் கிழிபடுங்கால் என்செய் வாரோ?
தாம்தூம்தை எனக்குதிக்கும் தகுதி இல்லார்
.. தலைநிமிர்ந்தே நடக்குங்கால் தகவேன் தாழும்?
ஆம் இங்கே சூதுகளின் ஆதிக்கத்தில்
.. அநியாயத் தீவானில் சூழும் தானே?

Tuesday, October 2, 2012

படிப்பாய்! பிடிப்பாய்!

படிப்பாய்! பிடிப்பாய்!
 
படித்துக் கொள்ளடா தம்பி! - நல்ல
பண்பாடு பெறுதலை நம்பி - கருத்தைப்
பிடித்துக் கொள்ளடா தம்பி!
 
படித்துப் பெறுதலே பட்டம் - அதனைப்
பரிந்துரை தருவது மட்டம்
பிடித்தவர் அளித்திடும் பரிசு - அவர்கள்
பெருமைக்கே எனிலது தரிசு!
- படித்துக் கொள்ளடா தம்பி...
 
படிப்பும் பரம்பரைச் சொத்தா? - நல்ல
பண்புக்கவை தான் வித்தா?
பண்பே உயர்வின் வித்து - உண்மைப்
பகுத்தறிவே புகழ்ச் சொத்து
- படித்துக் கொள்ளடா தம்பி...
 
உறவுகள் உயர்ந்திடத் திட்டம் - அதையும்
உருவாக்கிட ஒரு வட்டம்
சிறப்பினை ஒதுக்குதல் காழ்ப்பு - தெரிந்தும்
சிறுமையைப் போற்றுதல் ஏய்ப்பு!
- படித்துக் கொள்ளடா தம்பி...
 
சிலையினைச் சிதைத்தல் சிறுமை - கொடிய
சீற்றமே நடத்தையின் கருமை
நிலையினை உயர்த்தலே பெருமை - ஒழுக்க
நெஞ்சினைக் கொள்வதுன் உரிமை!
- படித்துக் கொள்ளடா தம்பி...

Sunday, September 30, 2012

மழலைப்பேறு

மழலைப்பேறு
 
குலம்வளர் வித்து
குடும்பத்தின் சொத்து
நலம்நிறை மகிழ்ச்சி
நடமிடும் எழில்தேர்
வலம்வரும் வான்மதி
வாழ்க்கைப் பயன்நிதி
உலவிடும் ஓவியம்
உறவுணர் காவியம்!
 
உயிர்வளர் அமுதம்
உளக்குளக் குமுதம்
உயர்தரு நிதியம்
உறவுகள் பதியம்
பயன்பல பதியும்
பயனுறும் இதயம்
இயலிசைக் கூத்தின்
இனிமையின் சாறு!
 
(வேறு)
 
பேசிடும் செல்வமாகப்
பெருமைகள் சேர்ப்பதாக
மாசிலா இன்பம் வாழ்வில்
மண்டியே சுரப்பதாக
வீசிடும் தென்றல் தம்மை
விளங்கிடும் அன்பைக் கொண்டே
ஆசையில் அணைப்பதாக
அமைவதே பிள்ளைச் செல்வம்!
 
கோடியாய்ப் பணத்தைச் சேர்த்து
குவித்துள மாடி வீட்டில்
ஓடியே ஆடிப் பாடும்
ஒரு மகவில்லை என்றால்
வாடிடும் நிலைமை அன்றோ
வளர்ந்திடும் வாழ்நாள் எல்லாம்!
கூடிவாழ் குடும்பம் தன்னில்
குழந்தையால் குலவும் பாசம்!
 
தழைத்திடும் மரக்கிளைகள்
தரைதொடும் விழுது பெற்றால்
பிழைத்திடும் ஆயுள் நீளும்
பெருகிடும் இனவளர்ச்சி!
மழலைவாய்மொழி மணக்கும்
மனமெலாம் பூக்காடாகும்
குழந்தையின் விழிவெளிச்சம்
குடும்பத்தில் ஒளி யளிக்கும்!

Saturday, September 29, 2012

நாள் என் செய்யும்?

நாள் என் செய்யும்?
 
மானத்தைப் பெரிதாக மதித்த காலம்
.. மலர்ந்திடுமா மீண்டுமெனும் எதிர்பார்ப் பேக்கம்
போனதையே பெருமையாகப் பேசிக் கோன்டு
.. பொழுதோட்டும் போக்கினிலா புதுமை பூக்கும்?
ஏன்நாமும் முன்னைவிட சிறப்புற் றோங்கி
.. இருக்கின்றோம் அறிவியலில் பெருமை தானே?
ஊன்பொதிக்கா உயிர்பெற்றோம்? ஊருக்கென்றும்
.. ஒருநன்மை செய்யாக்கால் நாளென் செய்யும்?
 
மனம் பெருத்தோர் வாழ்ந்திருந்த காலம் அன்று!
.. மாசாசை மலைபோன்று வளரவில்லை
பணம்பெருத்தோர் பேராசைப் பெருக்கினாலே
.. பஞ்சையரின் உயிர்வாழ்வு பாழாய்ப் போகக்
குணம்கொண்டோம் தாம்மட்டும் பதுங்கிக் கொள்ள
.. குற்றங்கள் திறமைகளாய் மதிக்கும் போக்கில்
கணத்துக்குக் கணமழிவில் உலகம் சாயக்
.. கடனாற்றும் கருத்தின்றேல் நாளென் செய்யும்?
 
இந்தநாளில் நம்வாழ்க்கை முறைதான் நன்றா?
.. இதைஎண்ணிப் பின்வருவோர் போற்றுவோரா?
சொந்தபந்தம் சுகதுக்கம் பொதுவே யார்க்கும்!
.. சுயநலத்தைப் பெரிதாக எண்ணாச் சாறோர்
எந்தநாளில் வாழ்ந்தாலும் வரலாறாவார்!
.. எல்லாமும் தமக்கென்பார் இழிந்தே சாவார்!
வந்தவழி எனும்நினைப்பே வீண்நாள் ஆக்கும்
.. வாழ்வித்து வாழ்கின்ற நாளே நன்னாள்!

Friday, September 28, 2012

யாரை? எங்கே?

யாரை? எங்கே?
 
தூக்கிவிடக் காசள்ளிக் கொடுத்தால் தங்கள்
.. தோள்களிலே சுமந்துயர வைக்கும் மக்கள்
வாக்கருமை நன்குணர்ந்தாலன்றிப் பொல்லா
.. வஞ்சகர்கள் பதவித்தேர் ஏற அஞ்சார்!
போக்கற்றோர் தவறுகளைப் புரிந்தே செய்யும்
.. புன்மைநிலை அறிவாற்றல் அழிக்க வானால்
ஆக்குதற்காம் அறிவாற்றல் அழிக்க வானால்
.. அவலங்கள் பெருக்கத்திற் களவும் உண்டோ?
 
உண்பதற்கும் உடுப்பதற்கும் உறைவதற்கும்
.. ஓயாமல் உழைப்போன் இல்லத்தில் கண்ணீர்!
கண்மூடித் தூங்கி விடாக் கவலை வாட்ட
.. காட்டுகிற பணம் ஆசைத் தீயை மூட்டும்
எண்ணத்தில் அன்றையநாள் தேவை நிற்கும்
.. ஏமாற்றப் பின்விளைவின் திரையாய் வஞ்சம்!
மண்செழிக்கப் பாட்டாளி உழைப்புத் தேவை
.. மாண்புகளின் தேரிழுத்தல் பின்நாள் சேவை!
 
ஏற்றிவிட்டோர் தலைகுனித்து நிற்கும் நேரம்
.. இருமாந்து விம்மிஎழும் நெஞ்சில் போதை
காற்றிலேறிக் கலசத்தில் தங்கும் கந்தல்
.. கட்டிவைத்த கொடிபோல அசைந்து காட்டிப்
போற்றுதலை எதிர்பார்த்தல் அகந்தை தானே?
.. பூசைப்பூ வாடியபின் போவதெங்கே?
நேற்றின்று நாளைவாக்குறுதி எல்லாம்
.. நினைவிருந்தும் கேட்பதெனில் யாரை, எங்கே?

Wednesday, September 26, 2012

சிந்திப்போமா?

சிந்திப்போமா?
 
பொழுதெல்லாம் புழுதியிலே கிடப்போனுக்குப்
.. பூமணமும் ஒவ்வாமை நோயுண்டாக்கும்
அழுதிருப்போன் போல் முகத்தை வைத்திருப்போன்
.. அகமகிழ்ச்சி நிறைந்தவனாய் இருக்கக்கூடும்!
விழுதுகளே சிலமரத்தை வேர்போல் தாங்கும்
.. விடியாத இருளினிலும் விளக்கம் தோன்றும்!
முழுதுணர்ந்தோர் சிறுபிழையில் சிக்கக் கூடும்
.. மூளியில்லா முழுமையெனல் முயற்கொம்பே தான்!
 
கழுதையது மிக அதிகம் பொதிசுமுக்கும்
.. கனவேகக் குதிரையும்தான் குழியில் தள்ளும்!
பழுதுகளும் பாராட்டப் பலரைச் சேர்க்கும்
.. படித்தவர்க்கும் பணம்பெருகக்குணங்கள் சாகும்!
உழுபவர்கள் அழுதாலும் கண்ணீர் இல்லை
.. ஊரேய்ப்போர் தன்னலத்துக்(கு) அழுதும் ஏய்ப்பார்!
பழுப்பதற்குள் பறித்துவிடப் பதைப்போர் உண்டு
.. பண்பாட்டில் மண்ணிடுவோர் பாரை ஆள்வார்!
 
இயற்கையிலே உள்ளஒவ்வொன்றும் தத்தம்
.. இயல்பினிலே பலவாறாய்ச் சார்ந்து வாழச்
செயற்பாட்டில் மனிதன் ஏன் சேர்ந்து வாழும்
.. சிந்தனைசெய் மனமிருந்தும் சிதைவே எங்கும்!
வயலுழுவோன் வாடுகின்றான் உழைத்துழைத்து
.. வயிற்றுக்குச் சோறிடுவோன் வாய்க்குத் தாகம்!
முயற்சியின்றி ஒருசிலரே முடிமன்னர்போல்
.. முன்னேற்றம் காண்பதுவா? சிந்திபோமா?

Tuesday, September 25, 2012

எண்பதாண்டு நிறைவு விழா

சென்னை பாரதி கலைக் கழகம் 23/9/12 அன்று நடத்திய கவிமாமணி பூவை அமுதன் அவர்களின் எண்பதாண்டு நிறைவு விழாவில் வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதைகள்:
 
1) வாசல் எழிலன் வழங்கிய பாராட்டுக் கவிதை
 
பொன்னைப் போலே ஒளிரும் உள்ளம்
.. புவியைப் போலே தாங்கும் எண்ணம்
மண்ணைப் போலே தாங்கும் நெஞ்சம்
.. மழையைப் போலே வழங்கும் நோக்கம்
விண்ணைப் போலே பரந்த கொள்கை
.. வித்தைப் போலே எழுந்திடும் ஆர்வம்
கொண்ட கவிஞர் பூவை அய்யா
.. கோலம் புகழ்ந்திட வாழ்த்துவோமே!
 
சாதனை பலவாய்ச் செய்வதற்கே
.. சங்கத் தமிழைப் பருகு கின்றார்
வேதனை போக்கும் விருப்பத் தாலே
.. வெல்லும் கவிதை அருந்து கின்றார்
தீதினை ஒழிக்க வேண்டு மென்றே
.. தேனாய் நூல்கள் ஆக்குகின்றார்
நாதனாம் பூவை அமுதனாரை
.. நாடே போற்றச் செய்வோம் நாமே!
 
இலக்கினைக் கொண்டே வாழுகின்ற
.. இளமை நெஞ்ச மாக்குவதற்கே
இலக்கிய நூல்கள் இயம்புகின்ற
.. இனிய நீதிக் கருத்தை எல்லாம்
கலக்கமே இல்லாக் கவிதை ஆக்கிக்
.. கனியாய் நமக்குத் தருவதாலே
இலக்கிய தூதர் இவர்தான் என்றே
.. எவரும் கூறி வாழ்த்த லாமே!
 
2) குமரிச் செழியன் வழங்கிய பாராட்டுக் கவிதை
 
இமயம் போலே எழுவதற்கே
.. இவரும் போற்றும் எழுச்சிக் கவிதை
சமயம் சாதி சாத்திரக் குப்பைச்
.. சடங்குகளெல்லாம் ஒழிவதற்கே
இமையாய்ப் போற்றும் கதைகள் நாளும்
.. இனிதாய் வாழ நாடகம் என்றே
அமுதன் அய்யா தருவதாலே
.. அன்னைத் தமிழாய் வாழ்த்து வோமே!
 
எழுத்தை மூச்சாய்க் கொண்டிருந்தே
.. என்றும் கருத்துரை செய்தே வாழும்
பழுத்த இலக்கிய வாதி நல்ல
.. பண்ணைப் போற்றும் பரிதியின் சோதி
செழித்தே என்றும் நிற்க போற்றும்
.. சிந்தை வளத்தைப் பெருக்க எங்கும்
வழியைக் காட்டக் அமுதன் அய்யா
.. வாழ்க இன்னும் எண்பதாண்டே!

Monday, September 24, 2012

செய்வாயா?

செய்வாயா?
 
ஆங்கிலேயர்க் கடிமையாக இருந்த நாளில்
.. ஆர்வமுடன் இளைஞரணி தலைவர் பின்னே
ஓங்கியபே ருணர்வோடு கிளர்ந்தெழுந்தார்
.. ஒன்றுபட்டு நாட்டுரிமைக்காக நின்றார்!
நீங்கியதே அடிமைவாழ்வே எனுங்கொண்டாட்டம்
.. நீடிக்கும் நிலையுளதா? ஏழைவாழ்வுக்(கு)
ஏங்குகிறார் கொள்ளையராய்ச் சொந்த நாட்டார்
.. ஏய்ப்பூழல் கொடுஞ்சுரண்டல் தொடர்கின்றாரே!
 
திரைப்படங்கள் மிகைப்படுத்தும் ஆட்டம் பாட்டம்
.. திசைமாற்றி வைக்க இங்கே ஒழுக்கம் ஓட்டம்
நரைமறைத்து நடிகனவன் இளையபெண்ணை
.. நளினமின்றித் தீண்டிவிளையாடக்கண்டு
முறைதவறி நடப்பதற்கு துறுதுறுக்கும்
.. மூளையில்லார் கூட்டத்தில் இளைஞர் முந்தி!
குறைகண்டால் சீற்றமுடன் களைவதற்குக்
.. கூரறிவின் செயல்திறனைக் காட்டுவாயா?
 
பெற்றவர்கள் கற்றவனாய்ப் பொலிவுண்டாக்கப்
.. பெரும்பாட்டின் அருமையினை அறிவா யாநீ?
மற்றவர்போல் நீயின்றி உன்னைச் சான்றாய்
.. மதித்துப்பின் தொடர்ந்திடவே பல்லாற்றானும்
பற்றுமொழி நாட்டின்முன்னேற்றம் என்றே
.. பணியாற்றும் அணியொன்றைக் காண்பாயா நீ?
முற்றுமிந்த நாடுனைப்போல் இளைஞர் தம்மை
.. முன்னிறுத்தி முன்னேற வழிகாண்பாயா?

Sunday, September 23, 2012

மறப்பார் யாரோ?

மறப்பார் யாரோ?
 
நாடுகாக்க வந்தவராய் வரலாற் றேட்டில்
.. நாம்காணும் தலைவர்தாம் உண்மைக் கொள்கைப்
பீடுடனே மக்களுக்குப் பணியை ஆற்றிப்
.. பெருமையடைந்தவராகச் சொல்லப் போமோ?
காடுமேடு வளைத்தவற்றைக் காத்துக் கொள்ள
.. கட்சிஒன்றை பற்றி நிற்கக் காண்கின்றோமே!
கூடிநிற்கும் தொண்டருக்குக் கையசைப்பே
.. குதூகலத்தைக் கொடுக்குமென்ப தவரின் கொள்கை!
 
சிந்திக்கும் பழக்கமின்றிச் சினமடக்கிச்
.. சீரழியும் பாட்டாளிக் கூட்டம் என்றும்
வந்தனை செய்தேவாடும் அவலம் தீர்க்க
.. வழிகாட்டி முன்நடந்து மாற்றம் கண்ட
அந்தவர லாறெல்லாம் காந்தி காலம்
.. அதன்பின்னெ வந்ததேசபச்சோந்திக் கோலம்
மந்தைகளாய் இருப்பவர்க்கு வந்து சேரும்
.. மரியாதை ஐந்தாண்டுக் கொருநாள் தானே!
 
எப்படியோ சிலநாள்கள் பசியைப் போக்கி
.. இருந்திடவும் வழிவாய்த்த தென்று தானே
தப்பேன்றோ சரியென்றோ வாக்கை விற்கும்
.. தராளம் வறியவரின் நெஞ்சில் ஊறும்
அப்படியே அவர்வாழ்க்கை இருந்தால் தானே
.. அடுத்தமுறை பதவித்தேர் ஏறிப்போவார்
இப்படியே எந்நாட்டில் குடிகள் ஆட்சி
.. இருக்கின்ற தெனும் வியப்பில் அதிர்ச்சி யுண்டோ?

Saturday, September 22, 2012

பிழையா, பேறா?

பிழையா, பேறா?
 
ஊர்வம்பை வளர்ப்பதற்கு விருப்பம் உள்ளே!
.. உத்தமராய் நடிப்பதற்கு வெளியே வேடம்!
சேரிடத்துக் கேற்றாற்போல் சிந்தை மாற்றிச்
.. சேறுகண்டு சாறு என்று சொல்வர் உண்டு!
யாரிடத்தும் யாசிக்கத் தன்மானத்தை
.. எப்போதும் தொலைத்திழிவில் மகிழ்வோர் கூடப்
பேரெடுத்தோர் வரிசையிலே நிற்கக் கண்டும்
.. பிழைசேர்த்த பெருமையினைப் பேறென்போமா?
 
வாய்ப்பந்தல் பொய்நிழலில் குளிர வைப்போர்
.. வாழிடமே பாழிடந்தான் எனத்தெரிந்தும்
தாய்போலப் பரிவுடையார் என்று பின்னே
.. தாளமிடும் கூட்டத்தைத் தன்னலத்தின்
பேய்ப்பிடித்தே ஆட்டுவதாய் எண்ணிக் கொண்டே
.. பேசாமல் குற்றத்தைப் பெருக்கலாமா?
காய்சினத்தீயது புரட்டர் தோலுரித்துக்
.. காட்டாமல் இருப்பதுவும் புரட்சி யாமோ?
 
புதுமைஎனப் போலிகளைப் புகழும் போக்கைப்
.. புறம்சொல்லிப் பிழைப்போர்மேல் இரக்க நோக்கை
துதிப்பதற்கு மட்டுமேகை தூக்கும் பேர்க்கும்
.. துளியளவும் உழைப்பின்நீர் சிந்தா தோர்க்கும்
மதிப்பளிப்போர் பெரியமனம் படைத்தோர் என்னும்
.. மாசுடையார் செல்லாத காசாய்ப் போகக்
கதிமாற்றும் விதியாக்கச் செய்கை விட்டுக்
.. காலத்தை வீணாக்கல் மடமை தானே?

Friday, September 21, 2012

நாம் செய்வோமா?

நாம் செய்வோமா?
 
சிறப்புற்றோர் சிந்தனையைச் செயல்படுத்தச்
.. சிலரேனும் வாய்ப்பந்தல் தவிர்த்துழைத்தால்
அறப்பணியாய் அறிவார்ந்த தொண்டாய் ஓங்கும்
.. அவர்வழியே சிலரேனும் உண்மையான
திறத்தோடும் மறத்தோடும் உணர்வினோடும்
.. திருப்பங்கள் காண்பதற்கு விருப்பம் கொள்வோம்
மறக்க முடியாதபடி மாந்தர் நேயம்
.. மலர்வதற்கு மனம் கொண்டு நாம்வாழ்வோமே!
 
புயல்வேகத்துடன் பெருமை பேசிக்கொண்டே
.. புறநானூற்றுக்காலம் புதுக்குவோமோ?
அயலவனை விஞ்சிய நம் அறிவைப் பற்றி
.. ஆர்ப்பரித்துப் பேசியிங்கே ஆனதென்ன?
செயல்மறந்து வாழ்த்திகொண்டிருக்கத்தானா
.. சிறந்தபணியாற்றியேநம் முன்னோர் சென்றார்?
வயல்கண்ட செழுமையெலாம் எங்கே காணோம்?
.. வளர்கின்ற வரலாற்றை வடிப்போமா நாம்?
 
பாரதிக்கு விழாவெடுத்துப் புகழைச் சேர்ப்போம்
.. பாரதியின் கவியை மனப்பாடம் செய்வோம்
பேருரத்துக் கூவியே நம் மூச்சே என்போம்
.. பெருமைகளை முத்தமிழில் மொய்க்கச் செய்வோம்
பாரதியின் சீர்திருத்தக் கொள்கை தம்மைப்
.. பயன்பாட்டு நடைமுறைக்குக் காட்டி வாழ்வோர்
ஊருக்குள் பெருகியுள்ளார் எனும்கணக்கின்
.. உண்மைநிலை உயர்ந்திடவே செய்வோமா நாம்?

Thursday, September 20, 2012

காலம் வருமா?

காலம் வருமா?
 
இயல்பாகப் பழுக்காத ஒன்றை நாமும்
.. இறுக்கியதை முன்னதாகப் பழுக்க வைக்கச்
செயற்கையிலே பலவந்தப் படுத்தும் போது
.. சேராது சத்தோடு சாறும் நன்றாய்!
சுயமாக அறிகின்ற சொந்த புத்தி
.. சொலக்கேட்டுத் தெரிந்தொள்வதற்கும் மேல்தான்!
முயலாமல் வெற்றிமுடி எட்டல் இல்லை!
.. முன்னேற்றம் இயல்பென்றால் மகிழ்ச்சி எல்லை!
 
முதிர்காலப் பக்குவத்தில் கதிர் அறுப்பார்
.. முற்றிவிட்டால் உதிர்ந்துவிடும் உழைப்பின் வெற்றி!
எதிர்நோக்கும் காலத்தில் தெளிவு தேவை
.. என்றாலும் புதிராகச் சரிவும் நேரும்!
நதிநீர்போல் திரும்பாமல் ஓடும் காலம்
.. நழுவவிட்டுத் திகைப்போரை நலிவில் ஆழ்த்தும்
விதிமுறைகள் மீறாமல் விரையும் காலம்
.. வீணாகப் போக்காத விவேகம் நன்று!
 
மனிதநிலை மாறவைக்கும் எண்ணம் யாவும்
.. மண்ணாகப் போகவேண்டும் இருக்கும் ஒன்றின்
புனிதத்தை இழிவாக்கும் புத்தி சக்தி
.. பொசுங்கியவை சாம்பலாகி மறைய வேண்டும்!
இனிப்பாகவே பேசி இழிவைச் சேர்ப்போர்
.. இல்லையென்னும் நிலை எல்லாத் துறையும் வேண்டும்!
தனியொருவன் தலைநிமிர்ந்து வாழும் தன்மை
.. தரத்தோடு நிலவவரும் காலம் என்றோ?

Wednesday, September 19, 2012

நடக்குமா?

நடக்குமா?
 
மண்வளரும் செடிகளிலே
மலர்ந்திருக்கும் பூக்களவை
மணம் வீச வண்டுகளால்
மகரந்தம் இனம் பெருக்கும்
கண் அவனுக்கென்பவளின்
கனிவு மனம் ஆசை யெனும்
கனலணைக்கும் குலம் பெருக்கும்
கலையெனவே இனித்திருக்கும்
 
பண்ணறிந்தா பறவையினம்
பலவிதமாய் இசை எழுப்பி
தன் துணையின் அன்புறவால்
பலநிறமாய் வளர்க்குமினம்?
எண்ண எண்ண விந்தைமிக
ஏராளமாய் உயிர்வகைகள்
பண்ணுகிற விழைவுகளின்
பொழிவுகளோ எழில்வையம்?
 
பிள்ளைபெற வில்லையென்று
பெண்டாட்டிதனை ஒதுக்கும்
பேதையர்தம் ஆண்மையுண்மை
மறைத்திடுதல் சாதனையோ?
உள்ளமதைக் கொள்ளையிடும்
உறவுகளின் உண்மைநிலை
உணர்வடங்கிப் போன்பின்னும்
ஒட்டிக் கொண்டே இருந்திடுமோ?
 
கள்ளமணக் கற்பனையால்
கவர்ச்சிதரும் காரணங்கள்
கட்டுகின்ற போலியர்க்கா
கருத்தழியும் காலம் வரும்
வெள்ளையுடை வெளிச்சமிடும்
வேடதாரி வஞ்சகரின்
விருப்பங்கள் பரப்பளவு
விரிவடைந்தா விடம் சொரியும்?
 
மதியிருந்தும் இழிசெயலை
மனமறிந்தே புரிந்திடுவோர்
மண்புமிகு தலைவரென
மதிப்பிடுவோர் மானிடரோ?
விதிப்பயனே எனப்பிறரின்
வேதனையை இழித்திடுவோர்
வீரநடை போட்ட்டிடவோ
விளக்குமிந்த நாட்டுவளம்?
 
சதியதனைச் சரியெனவே
சாதிப்போர் முகத்திரையைச்
சந்தியிலே கிழித்தெரியும்
சந்ததியர் தோன்றுவரோ?
கதியற்றுக் கிடப்போரைக்
காத்திடவே கருணையுள்ள
காவலர்கள் ஆவலுறும்
காலந்தான் வாய்த்திடுமோ?

Tuesday, September 18, 2012

ஒழிக்கப்பட வேண்டியது எது?

ஒழிக்கப்பட வேண்டியது எது?
 
விருத்தத்தில் புகழ்பெற்ற கம்பனுக்கு
.. விழாக்களை நாம் எடுக்கிறோம் கவியரங்கில்
வருத்தத்தை வளர்க்கின்ற நிலைதான் இன்று
.. வரப்பில்லா வயலாகப் புதுமை யென்று
புகுத்துவதாய் மரபுதனை மறுத்தும் மாய்த்தும்
.. புறபோக்குத்தனமாக உரையொடிப்பார்!
மிகுத்துவரும் மீறல்கள் மாற்றம் என்று
.. மேல்மட்டம் பறைகொட்டிச் செக்கிழுக்கும்!
 
அளவில்லா எண்ணங்கள் அகத்தே தோன்ற
.. அளவுக்கு மீறாத அமைப்பில் சொற்கள்
வளமாக வெளிப்பட்டால் வனப்பாய்ப் பூக்கும்
.. வண்ணத்தால் கவிதையென மதிப்பை ஏற்கும்!
களமெதுவாய் இருந்தாலும் கட்டுக்கோப்பில்
.. கறைதோன்றாக் காட்சியதே கலையாய் ஆகும்!
குளத்துக்கும் ஆற்றுக்கும் கரைகள் உண்டு
.. கூறுகவிக் கில்லையென்றால் கறையாகாதோ?
 
இப்படித்தான் கவியிருக்க வேண்டும் என்றார்
.. எப்படியும் இருந்திடலாம் என்பார் இன்று!
எப்படியோ இருக்கட்டும் எடுத்துச் சொல்லும்
.. இயல்பினிலே ஒலி ஒழுங்கும் ஒழிதல் நன்றா?
தப்பிதமாய்க் கவித்துவத்தில் தலையைக் கண்டால்
.. தமிழ்ச்சொற்கள் பிறமொழிக்குள் தவிக்கும் கோரம்!
ஒப்புகின்ற பொருள்விளங்கச் செய்யும் பாங்கில்
.. ஒத்துழையாமை இயக்கம் தலைஏன் காட்டும்?
 
தனக்காக வாகவிதை எழுதுகின்றான்?
.. தள்ளுபடியாகும் சொல் தமிழா பாட்டில்?
மனம்போன செயலுக்கு மதியெதற்கு?
.. மரபென்றால் தொன்றுதொட்டுத் தொடரும் நல்ல
சுனைநீராய்த் தூய்மையுடன் சுவைக்கக் கண்டும்
.. துப்பிடுமாறுள்ளதையா ஒப்ப வேண்டும்?
தினமாற்றும் வினைவிளைவில் புதுமையோடு
.. திகழ்கின்ற பொதுமரபைப் போற்றுவோமே!

Monday, September 17, 2012

ஒரு தாயின் வாழ்த்து

ஒரு தாயின் வாழ்த்து
 
அழுதுகொண்டே பிறந்தாய் பெற்றோர் நெஞ்சில்
.. அமுதமழைப் பொழிந்தெம்மைச் சிரிக்க வைத்தாய்!
உழுதவரின் வயல்பசுமை உறுதல் கண்டே
.. உவப்புறுமந் நிலையிலவர் உள்ளம் பொங்க
பொழுதெல்லாம் மணக்கின்ற பூவாய் வந்தாய்!
.. பூமிபெற்ற பொன்பொருள் எல்லாமுங் கூட
குழந்தையுனக் கீடாகக் கூறப் போமா?
.. குலக்கொடிநீ முழுநிலவுக் கொடி தந்தாயோ?
 
தவழ்ந்தெழுந்து தடுமாறித் தத்தித் தத்தித்
.. தாய்மடியில் விழுந்து அவளின் தாடை தட்ட
புவனமிதையே பெற்ற பூரிப்புற்றேன்
.. பூங்கையின் விரல்விரித்துப் பொத்து வாய்வாய்
கவனமுடன் கேட்பதுபோல் கண்கள் பூத்துக்
.. காதுமடல் விரித்தென்றன் கொஞ்சல் கேட்பாய்
அவனியிலே நான் தாயாய் உயர்வை யுற்றேன்
.. அருங்குழவி மழலைத்தேன் அமுதைப் பெற்றேன்!
 
தாய்மண்ணின் தனிப்பெருமை யாவும் காக்கும்
.. தகுதிகளில் தக்கபடிப் பயிற்சி ஏற்கும்
வாய்ப்புனக்குத் தருகின்ற சூழல் இங்கே
.. வளர்ந்திருக்க வேண்டுமதை நல்லோர் செய்வார்
போயெங்கும் பொருள்தேடி அலையாமல் நீ
.. பொன்னாடாய் உள்நாட்டை முன்னேற்றத்தான்
நோய்நொடிகள் அண்டாமல் காப்பேன் உன்றன்
.. நுண்ணறிவால் வழிகாட்டியாக வாழ்க!
 
விண்ணுலவும் கதிர்நிலவு காற்று மேகம்
.. விளைவிக்கும் செடிகொடிகள் மரங்கள் குன்றம்
மண்ணகத்தை வளமாக்கும் ஏரி ஆறு
.. மண்டியுள செழிப்பெல்லாம் பொதுமை யாகும்
கண்டிப்பாய் வருங்காலம் பிறந்தோர் யாரும்
.. கடுமுழைப்பின் பலன்கண்டு வாழ்வர் என்னும்
உண்மைநிலை யுருவாகக் குழந்தை நீயும்
.. உத்தமனாய்ப் பிறர்க்குதவ உயர்ந்தே வாழ்க!

Sunday, September 16, 2012

எனக்கொரு காதலி

எனக்கொரு காதலி
 
எனக்கொரு காதலி இருக்கின்றாள்! - அவள்
என்மனம் அவளென உரைக்கின்றாள்!
உன்னை நடத்திட நான் என்பாள்! - என்றன்
உண்மை நிழல் அவள்தான் என்பாள்!
 
களித்திடும் செயல்முறைக் கூட்டுகிறாள் - இருட்
கவலையில் ஓளியினைக் காட்டுகிறாள்!
புளிப்பையும் இனிப்பையும் பகுக்கின்றாள்! - மனம்
புண்கொளா வழிகளை வகுக்கின்றாள்!
- எனக்கொரு காதலி இருக்கின்றாள்!
 
நெஞ்சில் நினைவு தூய்மையுற - செயல்
நிகழ்வினால் பிறரும் நேயமுற
அஞ்சிடும் வினைவெகு சேய்மைசெல - நா
அசைத்திட ஒலிதரும் வாய்மை பல
- எனக்கொரு காதலி இருக்கின்றாள்!
 
அவள்பெயர் நீங்களும் அறிந்ததுவே - என்
அகவொளி அவளால் பிறந்ததுவே!
எவர்க்கும் அவள்துணை சிறந்ததுவே - உயிர்
எனக்கவள் அவள் பெயர்தான் அறிவே!
- எனக்கொரு காதலி இருக்கின்றாள்!
 
அறிவெனும் காதலி என்வழியை - நலம்
ஆக்கிட அண்டிடேன் ஒரு பிழையை
செறிவெனும் நிறைவினில் நடைமுறையே - பிறர்
சிறப்பெனச் செப்பிடப் பகழ் வரவே!
- எனக்கொரு காதலி இருக்கின்றாள்!

Thursday, September 6, 2012

ஏனடி ஏன்?

ஏனடி ஏன்?
 
மெழுகே அழியவோ நீ பிறந்தாய்? - அன்பே
அற்றவர் யாருக்கோ மனம் திறந்தாய்
விதியே அழகென ஏற்றிருந்தாய்? - நேரம்
வேடமாய் மாறுமே ஏன் மறந்தாய்?
- மெழுகே அழியவோ நீ பிறந்தாய்?
 
நெருப்பை உறவாடிக் கொண்டிருந்தாய் - உன்னை
நெருங்கிட ஆவியை நீ துறந்தாய்
விருப்பம் ஒளிவிட நீ உயர்ந்தாய் - அந்த
வேதனை கரைத்திட நீ சிறந்தாய்
- மெழுகே அழியவோ நீ பிறந்தாய்?
 
முற்றுமாய் உயிர்த்திரி ஒளிர்ந்திடவே - உன்னை
முற்றுகை யிட்டிட நீ பறந்தாய்
சத்தியம் அவனுக்காய்க் காத்திருந்தாய் - இந்தச்
சரித்திரம் வளரவோ நீ கரைந்தாய்!
- மெழுகே அழியவோ நீ பிறந்தாய்?

Wednesday, September 5, 2012

நெகிழ்வு

நெகிழ்வு
 
எல்லாமும் எதனாலே நடக்கின்றதோ - மனம்
ஏனென்று புரியாமல் துடிக்கின்றதோ?
மதிவிதிக்கின்றதோ?
எது சிதைக்கின்றதோ? - இங்கே
வேடமிட்டே எல்லாமும் நடிக்கின்றதோ?
- எல்லாமும் எதனாலே நடக்கின்றதோ?
 
மலை கொண்ட கல்லெல்லாம்
சிலை செய்யவோ? - உன்றன்
மனம் எண்ணும் எல்லாமும் முடிகின்றதோ?
இலைகூட பூஜைக்கு ஏற்கின்றதே - பூத்து
இருந்தாலும் சில வீணாய் மடிகின்றதே!
 
மரம் விட்ட காயெல்லாம் கனியாகுமோ? - அவை
மண்ணுக்குள் விதையாகிச் செடியாகுமோ?
விரல் ஐந்தும் ஒருகையில் பல தோற்றமே - அந்த
வேஏறுமை பொருள்பற்றும் பிடிமாற்றுமா?
 
மதி விதிக்கின்றதொ?
எது சிதைக்கின்றதோ? - இங்கே
வேடமிட்டே எல்லாமும் நடக்கின்றதோ?
- எல்லாமும் எதனாலே நடக்கின்றதோ?

Tuesday, September 4, 2012

நஞ்சும் எனக்கமுதம்!


நஞ்சும் எனக்கமுதம்!
 
தென்றலுக்கு நெருப்பை ஏன் தந்து விட்டாய்?
தீயில் என்னை வாட்டிடவோ என்னைத் தொட்டாய்?
நெஞ்சத்தில் நீயிட்ட நஞ்சும் எனக்கமுதம் - என்
நினைவினில் நீ நிற்பதை ஏன் மறந்துவிட்டாய்?
- தென்றலுக்கு நெருப்பை ஏன் தந்து விட்டாய்?
 
என்னை இருள் சூழ்ந்திடவோ
.. எங்கோ சென்றாய்? - நீ
இருட்டினிலே குருடனைத்தான்
.. ஏங்க விட்டாய்
என் மனத்தில் வாழ்ந்திடவோ
.. உறவைக் கொண்டாய்? - அடி
இறந்தவன் மேல் இடி போட்டு
.. நீதான் கெட்டாய்
- தென்றலுக்கு நெருப்பை ஏன் தந்து விட்டாய்?
 
நீயும் நானும் சேர்ந்திருந்த
.. நேரம் கொஞ்சம் - உன்னைத்
தேன் நிலவென்றேன் - நீயோ
.. பாழிருளில் தள்ளிவிட்டாய்!
 
பாயுமின்பப் பௌர்ணமிக் கேன்
.. என்மேல் வஞ்சம்? - அடி
பகலினிலும் கனவுலகில் தவிக்க விட்டாய்
.. நெஞ்சத்தில் நீயிட்ட நஞ்சும் எனக்கமுதம் - என்
நினைவினில் நீ நிற்பதை ஏன் மறந்து விட்டாய்?
- தென்றலுக்கு நெருப்பை ஏன் தந்து விட்டாய்?

Monday, September 3, 2012

ஒற்றைக் குயிலே...

ஒற்றைக் குயிலே...
 
ஒற்றைக் குயிலே பாடாயோ? - உன்றன்
உயிர்த்துணை எங்கே தேடாயோ?
 
உள்ளம் கவரும் உன் பாடல் எல்லாம் ஒழிந்ததோ?
இன்பம் நாடாயோ?
- ஒற்றைக் குயிலே பாடாயோ?
 
தென்றலே மென்மையை ஏன் பகைத்தாய்? - வண்ணத்
தேன்மலர் நீயுமே கூடாயோ?
தீயுடன் பஞ்சுக்கு ஏன் உறவு? - உன்
துயருக்கு விடிவெது தேடாயோ?
- ஒற்றைக் குயிலே பாடாயோ?
 
வெண்ணிலா விஷத்தைச் சிந்துவதேன்? - என்றன்
வேதனை கூறிட ஓடாயோ?
கண்ணிலார் வண்ணங்கள் அறியாரே - நெஞ்சு
கனவிலும் அமைதியைக் கூடாதோ?
- ஒற்றைக் குயிலே பாடாயோ?

Sunday, September 2, 2012

எங்கும்... எப்போதும்...

எங்கும்... எப்போதும்...
 
கண்கள் விழித்திருந்தேன் - புவி
காட்சி மறந்திருந்தேன்
எங்கும் தனித்திருந்தேன் - உன்னை
எண்ணி இனித்திருந்தேன்
 
உண்ண வெறுத்திருந்தேன் - வேறு
உடையும் மறுத்திருந்தேன்
உன்னை மதித்திருந்தேன் - கொடிய
உறுத்தலிலும் துதித்திருந்தேன்
- கண்கள் விழித்திருந்தேன்...
 
சுமைகள் மறந்திருந்தேன் - எந்தச்
சுவையும் துறந்திருந்தேன்
இமைகள் துறந்திருந்தேன்
இமைகள் திறந்திருந்தேன் - வானில்
இணைந்தே பறந்திருந்தேன்!
- கண்கள் விழித்திருந்தேன்...

Friday, August 31, 2012

நீயாக...

நீயாக...
 
நீயாக எனைத்தேடி வரவேண்டும் - என்றன்
நெஞ்சத்தில் முழுநிலவாய்ப் பால் ஒளியைத் தரவேண்டும்
ஓயாமல் உன் உறவைப் பெறத் தூண்டும் - என்றன்
உள்மனத்தில் உன்மனமும் ஐக்கியமுறவே வேண்டும்
- நீயாக எனைத்தேடி வரவேண்டும்!
 
கடலாம் எனக்கூட கருணை நதியாகி - தடைல்
கடந்திங்கே தனியாய் நீ வரவேண்டும்
உடலென்ன உயிரென்ன எவைபோனால் என்ன
ஒன்றுக்குள் ஒன்றாக இணைவோம் மீண்டும்
- நீயாக எனைத்தேடி வரவேண்டும்!
 
பிரித்தறிய முடியாத அணுவாய் வாழ்வோம் - பெரும்
பேதமுள்ள உலகமிது நாம் ஏன் தாழ்வோம்
சரித்திரமாய் மாறிடுவோம் சேர்ந்தே சாய்வோம் - காதல்
சங்கமத்தை உண்மை அன்பு ஒன்றே தூண்டும்
- நீயாக எனைத்தேடி வரவேண்டும்!

Thursday, August 30, 2012

ஊமை நாடகம்

ஊமை நாடகம்
 
கதிரவன் முகம் நோக்கிக் காத்திருந்தாய் - சூரிய
காந்தி மலரே நீ பூத்திருந்தாய்!
 
உன் ஊமை நாடகத்தை
என் என்று அவன் கண்டான்
சொல்லாமல் ஏன் பேதை பார்த்திருந்தாய்?
 
தெப்பக் குளத்தில் அவன்
வெப்பம் தணிந்திடவே
தாமரை மேல் கரம் நீட்டக்
களித்திருந்தான் - நீ
எப்படி எல்லாம் பாவம்
இதயம் திறந்து வைத்தாய்
ஏனவனோ நீர்மகளோடு
இனித்திருந்தான் - அவன் இனி திருந்தான்!
 
உன் மடமை நாடகத்தை
என் என்று அவன் கண்டான்?
சொல்லாமல் என் பேதை காத்திருந்தாய்?
 
தனக்குத்தான் அவன் என்று
தரைமீது தவம் செய்யும்
தாங்காத ஏமாற்றம் துக்கமடைந்தாய் - ஆசை
மனத்துக்குள்ளே நீயிட்ட
மாலையே சுருக்காச்சு
மகிழ்வாக நீரிலவன் பக்கமிருந்தான்!
 
உன் மடமை நாடகத்தை
என் என்று அவன் கண்டான்?
சொல்லாமல் என் பேதை காத்திருந்தாய்?

Wednesday, August 29, 2012

நேசித்த நெஞ்சம்

நேசித்த நெஞ்சம்
 
நேசித்த நெஞ்சம் மறக்காது - மனம்
நேர்மையை யிழந்திடில் சிறக்காது
பூசைக்கு மென்மலர் ரோஜாவும் - முள்
பொருந்திடும் காவலைத் துறக்காது
- நேசித்த நெஞ்சம்...
 
வாசித்த பாடந்தான் மறக்காது - மனம்
வருந்திடும் போதிலும் மறுக்காது
யாசித்துப் பெறுவதோ உயிர்க்காதல் - அது
என்றைக்கும் என்றைக்கும் இறக்காது
- நேசித்த நெஞ்சம்...
 
அழுகையிலும் எனக்கு ஒரு சுகமே - அதை
அளித்தவன் நினைவினில் கனக்கும் அகமே
தொழுதிடுவேன் இன்பச் சுமையினையும் - ஒரு
துணையென வைத்ததை வெறுக்காது
- நேசித்த நெஞ்சம்...

Tuesday, August 28, 2012

இறவாப் புகழ்

இறவாப் புகழ்
 
உரம்நிறை உள்ளமே உயர்ந்ததை எண்ணும்
அரிதென மலைக்கும் அச்சம் விலக்கும்
பெரிதோ சிறிதோ பிறர்நலம் பேண
உரிதாய் இருத்தல் உயர்செயல் ஆகும்
சரி எனும் முடிவில் சலனமே இலையெனில்
முறையுடன் முயன்றால் முடிதரும் முடிவு!
 
நற்பணி ஆற்றிட முற்படும் உறுதியில்
பற்பல தடைகளும் பயந்தடி பணியும்
செயற்படு முன்னே சிந்தனை தெளிவுறின்
வயப்படும் வெற்றி! வாய்த்திடும் வாழ்த்து!
நம்செயல் நல்கிடும் நன்மையால் மற்றவர்
தம்மனம் மகிழ்வது நம்மன நிறைவாம்!
 
செல்வமும் பதவியும் சேர்த்திடும் சிறப்பினும்
நல்லவர் நெஞ்சில் இடம்பெறல் உயர்வாம்
பிறந்தவர் இறவாப் புகழ்பெறத் தேவைகள்
சிறந்த எண்ணமும் செயலில் நேர்மையும்!
விதியின் பயனாய்ச் சதியைச் சகிப்பது
மதியின் மயக்க கதியினால் தானே!
எதையும் ஆய்ந்தபின் ஏற்பதோ தவிர்ப்பதோ
விதிஎனக் கொள்ளலே இதய வீறாம்!

Monday, August 27, 2012

கவிக்கனல்

கவிக்கனல்
 
உலகத்தை பாதிக்கும் அவலம் எல்லாம்
.. உண்மையுள்ள நற்கவிஞன் மனம்கிழிக்கும்
நலம்நாடும் அறிவாற்றல் கொண்டோர் ஆக்கும்
.. நான்குவரிக்கவியெனினும் கனல்பறக்கும்
மலரதுவும் கனல்மணக்கும் என்றே சொன்னான்
.. மாக்கவிஞன் பாரதிதான் மரபின் மன்னன்
சிலர்பலவாய் மொழிக்கலப்பைச் செருகி வைத்துச்
.. செப்புகவி காகிதப்பூ செயற்கை வாசம்!
 
வல்லெழுத்துச் சொற்களினால் வார்த்தெடுத்து
.. வரும்சினத்தில் கொட்டுகவி கனலை வீசும்!
சொல்லுக்குச் சூடேற்றும் பொருள்பொதிந்த
.. சூழலிலே சுழல்மனத்தால் இயக்கப் பெற்ற
கல்லாரின் பேச்சுமொழிக் கவிதை கூட
.. கனல்பறக்கும் கருத்துகளைக் கொட்டும் வெட்டும்
பொல்லாத கண்ணேறு கொடிதென்கின்றார்
.. பொன்மனத்தார் சினக்கவியும் பொசுக்கும் தீயாம்!
 
நெஞ்சினிலே கவிக்கனலாய்ப் பொங்கும் போது
.. நேரடியாய்ப் பேரிடியாய்த் தாக்கம் உண்டாம்
வஞ்சிக்கப் பட்டதனால் வாழ்விழந்தோர்
.. வழிகாணாச் சுழித்தோடும் காட்டாறாக
விஞ்சிவரும் வேகமுடன் விடிவுக் காக
.. வினையாற்றத் தூண்டுகவி சமைக்கும் தீயாம்!
கொஞ்சிநிற்கும் எளியவரைக் கேலி செய்யும்
.. கெடுமதியைச் சுடும்கவிகள் தேவை யாம்தீ!
 
வழக்குரைத்த காதையிலே இளங்கோ கொட்டும்
.. வார்த்தைகளே கண்ணகிவாய்க் கனலைக் கக்கும்
முழக்கமென நெருப்பாறு பாயக் கண்டோம்
.. முடிசரிந்து மன்னவனும் வீழக் கண்டோம்!
வழக்கியவன் செங்கோலை இழித்துப் பேசும்
.. வகையில்தீ வழிந்ததனால் மதுரை சாம்பல்!
கொழுப்பேறிக் கொழுந்தனவன் துகிலுரித்தான்
.. கொதித்தமனப் பாஞ்சாலி சபதம் தீப்பா!
 
சீவகனின் எழுச்சியைச்சுந்தரனார் பாடல்
.. செருமுகத்தில் வீரமெனும் கனலைக் கொள்ள
மேவிடவே படைவீரர் புடைத்து நின்றார்!
.. மேலவர்கள் சினம்படைக்கும் கவிதைச் செந்தீ!
கூவியழைத்துப் பகையை எதிர்க்கும் தீரர்
.. குரல்வலிமை வஞ்சினமாய்க் கவிகொதிக்கும்!
நாவுக்கு விருந்தாகும் சொல்லால் சுட்டு
.. நல்லவற்றை ஒழிக்கும்தீக் கவிவேண்டாமே!
 
திருட்டுவகை பலவாகித் தீய்க்கும் நாட்டை
.. தீட்டும்பாவூட்டுமுணர்வோட்டும் கேட்டை!
மிரட்டுகிற மதம்சாதி பேதம் நீங்க
.. மேலான மருந்தாக கவிதை ஓங்க
புரட்டுப்பொய் சூதுவஞ்சம் ஏய்ப்பு நோய்கள்
.. புன்மையெலாம் பொசுக்கிவிட புதுமை பூக்க
வரட்டுவேதாந்தமெனும் மயக்கம் தீர
.. வருங்கால நலம்சமைப்போம் கவித்தீயாலே!