Thursday, October 25, 2012

தன்னிரக்கம்

தன்னிரக்கம்
 
பார்வையா ளனாயமர்ந்து படிக்கட்டாகும்
.. பழக்கத்தால் பாழாகிப் போனேனாநான்?
ஆர்வத்தொடெனக்கேநான் விளம்பரத்தை
.. ஆக்கிக்கொள்ளாமையும் என் அறியாமையோ?
சோர்வின்றி எழுதுவது பதிப்போர் சொத்தாய்ச்
.. சுகம்பெருக்கும் வித்தாகக் கொள்ளத் தானா?
யார்வந்தென் இயல்புதனை மாற்றல் ஒல்லும்?
.. இப்படியா எழுபத்தெட் டாண்டை யுற்றேன்?
 
உள்ளத்தில் ஊறுகின்ற உணர்வைப் பேச்சில்
.. உரைப்பதிலே மழுப்புதலை என்று கற்றுக்
கொள்ளத்தான் போகின்றேன்? எனக்கிருக்கும்
.. கொள்கைகண்டு பிறர்முகங்கள் சுருங்கும் போது
வெள்ளைமனம் விரும்புதல்யார் நல்லதென்பார்?
.. வெளுத்தமுடித் தலைவழுக்கை யின்மை சொத்தா?
குள்ளனுக்கும் பெருமையுண்டு நெட்டையர்கள்
.. குனிந்தன்றோ அவனிடத்தில் பேசுகின்றார்?

No comments:

Post a Comment