Sunday, October 28, 2012

குருவும் சீடரும்

குருவும் சீடரும்
 
சிந்தனையாளர் தம்முள் மூத்தாராகச்
.. செப்புகின்றோம் கிரேக்க ஞானி சாக்ரடீசை
எந்தஒன்றும் ஏனென்று வினா எழுப்பி
.. ஏற்றவிடை காணவேண்டும் என்று சொன்னார்!
சொந்தமதியால் ஆய்ந்து முடிவு கண்டால்
.. சூழ்ச்சிவலை பின்னிடுவோர் மின்னுவாரா?
அந்தவழி தொடர்ந்தவர்கள் அறிஞர் பல்லோர்
.. அகிலம்போற்றும் பிளேட்டோ அவரின் சீடர்!
 
குருவினது கொள்கைவழி குறிக்கோளோடு
.. கோணாது சீர்த்திருத்தப் பணியை ஏற்று
பெருந்தொண்டை ஆற்றிய சிந்தனையாளர்கள்
.. பிறந்ததந்த நாட்டுமக்கள் பேறேயாகும்!
வரும்போகும் செல்வத்தில் மூழ்கிப் போவோர்
.. வரலாற்றில் புகழுச்சி ஏறி நில்லார்
தெருவோரம் வதிகின்ற ஏதிலாரின்
.. திறமுணர்ந்து வழிகாட்டிச் சிறந்தோர் சான்றோர்!
 
ஆசிரியராய்ச் சிறந்தோர் திறமை போற்றி
.. ஆர்வமுடன் ஆற்றல்கள் வளர்த்துக் கொள்ளும்
மாசில்லா மாணாக்கர் சான்றாய் நிற்பர்
.. மதிஒளியில் நிதிஒலியின் மகிமை மங்கும்
வீசுகின்ற தென்றலிலே புகழை ஏற்றி
.. விடுவதற்குக் குருமாரே உருவானார்கள்
பேசுதலைக் குறைத்திங்கே கடமை பேணும்
.. பெருங்குணத்தைப் பெறக்குருவின் துணை கொள்வோமே!

No comments:

Post a Comment