Sunday, October 21, 2012

குணக்கோணல்

குணக்கோணல்
 
உன்முடிவை நானேற்க வேண்டுமென்றால்
.. உந்துதலைப் பலமாக்க முயலும் நண்பா
என்னிடமும் சிந்திக்கும் மனமிருக்க
.. ஏனிதனை அடியோடு மறந்து போனாய்?
நன்மையெனில் பொதுவாக அனைவர்க்கும் தான்
.. நாசமெனில் இழந்தவர்க்குத் துன்பம் தானே?
தன்வலிவால் இன்னலினை இழப்போன் வாழ்க்கைத்
.. தரத்தினிலே உயர்வதுதான் மானக்கேடு
 
கிளைஒடிந்தும் துளிர்க்கின்ற மரங்கள் உண்டு
.. கீழ்ப்படுத்தி வைத்திருந்தும் எழுச்சி காணும்
உளமுள்ள சிலருயர்வைக் கண்டபின்னும்
.. உரம்பெற்றும் முயலாதோர் தலையெழுத்தின்
விளைவின்றி வீறின்றிக் கிடந்துதானே
.. வெகுகாலமாய் அடிமைநிலையில் உள்ளார்
களைசிலவும் விளைபயிரில் ஓங்கி நிற்கும்
.. காண்பதற்கு அதன்சாயல் மயங்க வைக்கும்
 
காணாத நிலையினிலும் மணம் நுகர்ந்து
.. கணத்தினிலே மலரின்பேர் சொல்லல் ஒல்லும்
தூணெந்த மரத்தாலே ஆனதென்று
.. தூர இருந்தேகூறத் துணிவோர் உண்டோ?
வீணாக வார்த்தைகளைக் கொட்டுவோர்க்கு
.. வேகமாகக் கைத்தட்டல் அடக்கத் தானா?
கோணலுள்ள சிலவற்றை நிமிர்த்தத் தோற்போம்
.. குக்கலுடற் கூறுசிலர்க் குணத்துக் குண்டே!

No comments:

Post a Comment