Thursday, October 4, 2012

எழுக தோழா!

எழுக தோழா!
 
படைப்பவன் தினமும் படிப்பவனானால்
.. பதிந்திடும் பண்புகள் பலவும்
உடைபடும் கிளையும் உடனடி துளிர்த்தே
.. உதவிடும் குணத்தை நிலவும்
கொடுத்திடும் இயல்பினைக் கெடுத்தவன் அடையும்
.. குதூகுலம் வஞ்சகப் பலமா?
விடுத்தவன் ஒதுங்க அடுத்தவன் பிடிக்குள்
.. விரைவினில் சிக்குதல் நலமா?
 
விளம்பரம் தேடிக் களம்பல நாடும்
.. வேகத்தில் அலைந்திடல் மடமை
உளந்தனில் தூய்மை விளங்கிட வாய்மை
.. ஒன்றிடச் சிறந்திடல் கடமை!
செடிகளின் மலர்கள் கொடுத்திடும் மணத்தில்
.. சேர்ந்திடும் புத்துணர்வகத்தில்
நடைமுறை வாழ்வில் கடைபிடி ஒழுங்கை
.. நல்கிடும் பொலிவினை முகத்தில்
 
அடுத்தவர்க் குதவும் நடத்தையே சிறப்பு
.. அளித்திடும் நிறைமன இருப்பு
கொடுக்கிற நலத்தைத் தடுக்கிற விரைவு
.. கீழவர்க்கே உடன்பிறப்பு!
தொடுத்திடும் பூவே மாலையில் தொங்கும்
.. தொடர்ந்திடும் பெருமையே எங்கும்
விடுத்திடும் அம்பே விரைந்துமுன் பாயும்
.. வினைசெய எழுதுயர் மாயும்!

No comments:

Post a Comment