Monday, October 22, 2012

இருள் மனம்

இருள் மனம்
 
உலகத்தில் ஆண்பெண் என்றிருபாற் கூறாய்
.. உள்ள உயிர் வகையிரண்டை ஆய்ந்து நோக்கின்
பலவிதத்தும் வன்மையுடன் மென்மை சேர்ந்து
.. பருவத்தேர் ஓட்டத்தில் இயைந்து கூடிக்
குலவுதலில் இனம்பெருகி வாழ்க்கை என்னும்
.. கூட்டுறவுத் தொடர்ச்சியது நீண்டு வையம்
நிலவுநிலையாதல் உண்மை! ஆண்பெண் வாழ்க்கை
.. நீள்பயணம் செய்ய இருசக்கரங்கள்!
 
பெண்ணீனத்தின் மேன்மையினைப் பேணிக் காக்கப்
.. பிறந்தவர்கள் பெயர்விளங்கக் கண்டும் ஏனோ
பெண்சிசுவைக் கள்ளிப்பால் இட்டுக் கொல்வார்
.. பேதையர்வாய் நெல்லிட்டும் ஊரழித்து
மண்ணுக்குள் மறைக்கின்றார் குப்பைத்தொட்டி
.. மறைவினிலே வீசுகின்றார் அந்தோ அந்தக்
கண்மணிகள் வாழ்ந்திருந்தால் தியாக வீரக்
.. காவியத்து நாயகியராகக் கூடும்!
 
தீரர்களாய்த் தியாகிகளாய்த் தேசம் எங்கும்
.. திகழ்பெருமை நாட்டுதற்குத் தேர்ச்சி செய்யும்
ஈரமனம் வீரமனம் தாய்க்குத் தானே!
.. ஏனிந்த தாய்க்குலத்தை நசுக்குகின்றார்?
தாரமாகத் தாயாகப் பாட்டியாகத்
.. தக்கமதி யுணர்த்திவழி காட்டுவோரைப்
பாரமெனல் பகுத்தறிவோ? குலவிளக்கைப்
.. பாதகத்தால் அழிக்குமுளம் கும்மிருட்டே!

No comments:

Post a Comment