Wednesday, October 31, 2012

காலத் தேர்

காலத் தேர்
 
ஓராண்டு வாழ்ந்திடவே மலர்கின்ற காலப்பூ
.. உலகெங்கும் போற்றிடவே உதிக்கின்ற ஞாலப்பூ!
போராட்ட வாழ்வினர்க்கோ புதுவிடியல் எதிர்பார்ப்பு!
.. பொதுவாக எல்லோர்க்கும் ஒருவயதே அதிகரிப்பு!
தேரோட்டும் பதவியினைத் தேய்க்கின்ற வருடப்பூ!
.. தீயவர்கள் வெறியாட்டத் திளைப்புக்குத் தேடும்பூ!
ஏராளம் சேமித்தும் ஏய்த்திருப்போர்க் காசைப்பூ!
.. எப்போது பணிகிட்டும் என்றலைவோர்க்கோ வெறுப்பு!
 
காலத்தேர் ஓட்டத்தின் கணக்காகும் புத்தாண்டே!
கடனாற்ற நீயாரின் கட்டளைக்குக் காத்திருப்பாய்?
மடமையினால் உனைமாய்த்து விதிஎன்பார் மதிஎன்னே!
 
காலம்கண் பொன்னென்றே கழறிடுவார் என்றாலும்
.. களிப்புக்கே நேரத்தை வீணாக்கிக் கழிக்கின்றார்!
வேலையில்லை வறுமையெனும் வேதனையில் பலரிருக்க
.. வெறும்பேச்சே கலையாக வளர்ப்பவர்தான் சிறக்கின்றார்!
மேலைநாட்டு மேன்மைகளை மேல்மூச்சு வாங்கிடவே
.. மேடையிலே முழங்கிடுவார் மேனிக்குப் பொன்னாடை!
மாலையிருள் கவிந்தபின்பும் மண்வேலை செய்வோர்க்கு
.. மலராது மனமகிழ்ச்சி புலராது புதுவிடியல்!
 
காலத்தேர் ஓட்டத்தின் கணக்காகும் புத்தாண்டே!
கடனாற்ற உனக்குலகில் கட்டளையை யிடுவார்யார்?
உடனிருந்தே உனைஏவும் வினைசெய்ய நினைப்பவர்யார்?
 
இடுக்கண்கள் வெல்வதற்கு வேண்டுமென்றார் இதழ்ச்சிரிப்பு
.. இன்மையினால் காலூன்றி எழவேண்டும் பேருழைப்பு
கொடுப்பதற்குக் குணம்கொள்ள மனம்தூண்டும் பெரும்பிடிப்பு
.. குறைகளையே எப்போது கூறுவார்க்குள் கடும்வெறுப்பு
படுத்துறங்கப் பஞ்சணைகள் பலதேடும் பணக்கொழுப்பு
.. பசித்திருப்போர் கண்ணயரப் போதுமோலைப் பாய்விரிப்பு
மிடுக்குநடை யிலாதவனை வீரரெனல் அவமதிப்பு
.. மேன்மைஎங்கும் நிலவுமெனில் மேவிடுமே குதூகலிப்பு!
 
புத்தாண்டே நீநடந்து புதுமைகளை வளர்க்கின்றாய்!
புழுவுந்தன் வாழ்க்கைக்குப் புழுங்காமல் நகர்கிறதே!
பிழையின்றி உனக்கிணங்கி ஒழுகவரும் செழுமைகள்!

No comments:

Post a Comment