Saturday, October 20, 2012

குறுமதியாளன் குறிக்கோள்

குறுமதியாளன் குறிக்கோள்
 
அடியாளாய் வாழ்ந்தாலும் பரம்பரைக்கே
.. ஆனமட்டும் சேர்த்துக் கொள்ளாது போனால்
தடிமாடாய்த் திரிந்தவனாய் அடிமாடாகத்
.. தான்போக நேர்ந்துவிடும் எந்தக் கொள்கைப்
பிடிமான அரசியலாம் தேரில் ஏறும்?
.. பேசாது தலையாட்டிக் கொண்டு பின்னே
கொடிதூக்கி நடந்தாலே கோடி நன்மை
.. குறிஎன்ன குறையின்றி வாழ்தல் தானே?
 
படிதாண்டாப் பத்தினியாய் நடிப்பதற்குப்
.. பரத்தையிடம் யார்பாடம் பயிற்ற வேண்டும்?
இடிதாங்கி அழிவதற்கா பிறந்தேன் நானும்?
.. இழிவஞ்சிக் கிடப்பவர்கள் என்ன கண்டார்?
முடிசூட்டி உலாவருவோர் கண்முன்னாலே
.. முண்டியடித்தோடி முன்னால் மண்டியிட்டுப்
படிகின்ற மண்ணுடலைப் பார்த்துதானே
.. பசையுள்ளோன் பரிதாபம் என்மேல் தங்கும்!
 
பத்தினியாய் வாழ்பவர் பட்டினியால் வாட
.. பார்த்துத்தான் இப்பாடம் கற்றுக் கொண்டேன்
சொத்தென்ன போயிற்று சுகமாய் வாழ
.. சுயநலத்தில் ஆழ்ந்திட்டால் குடியா மூழ்கும்?
உத்தமமாய் வாழ்வதற்குப் பாதை ஒன்றே
.. ஊரேய்த்து வாழ்வதற்கு வழிகள் நூறு
செத்துக்கொண்டிருப்போரின் சித்தாந்தத்தைச்
.. செவிமடுப்போர் வாழ்க்கையிலே சொத்தா சேரும்?

No comments:

Post a Comment