Wednesday, October 24, 2012

கொடுப்பதும் கொள்வதும்

கொடுப்பதும் கொள்வதும்
 
சிலர்வாழ்க்கை பலருக்குச் சான்றாய் ஓங்கும்
.. சிறப்பான தொண்டுகளால் புகழைத் தாங்கும்
மலர்மணத்தால் மணம் மகிழும் மூக்கின் தொண்டால்!
.. மதிநலத்தால் உளம்குளிரும் உறவாம் நட்பால்
நலம்புரிதல் என்பதொன்றே நாட்டமானால்
.. நாள்களெலாம் பயனுள்ள வகையே செல்லும்
குலம்சாதி மதம்பேதம் கொள்ளா நெஞ்சால்
.. குற்றத்தைக் களைபவரால் மனிதம் வாழும்!
 
உண்மைக்குப் பலநேரம் சோதனைகள்
.. ஒன்றன்பின் ஒன்றாக நிலைகுலைக்கும்
திண்மையுள்ள கொள்கைக்கோட்பாட்டில் நிற்போர்
.. திகைத்தாலும் தடம்மாறிச் செல்லமாட்டார்
கண்ணெதிரே வஞ்சங்கள் கவர்ச்சிக் காட்டக்
.. காணாதோற் போலவே நேர்வழியில் செல்வார்!
எண்ணத்தால் தெளிவோடு நேர்மை உந்த
.. ஏறுநடை உடையோர்முன் வீழும் சூழ்ச்சி!
 
வெள்ளைஉடையால் நெஞ்சக் கறுப்பை மூடும்
.. வேடமிட்டே அலைந்திடுவோர் ஒருநாள் வீழ்வர்
துள்ளுநடை முதுமையிலும் தளராத் தன்மை
.. தோல்விவெற்றி எதனிலுமே நிலைமை மாறா
உள்ளத்தில் ஊற்றாக ஒழுக்கம் பொங்கும்
.. ஊர்நலத்தைக் கெடுப்போர்க்கே உவகை மங்கும்!
கொள்வதினும் கொடுப்பதுவே குணமாய்க் கொண்டோர்
.. குறள்கூறும் பெருமைகளுக் குரியோர் தாமே!

No comments:

Post a Comment