Friday, November 30, 2012

இல்லை

இல்லை
 
தொல்லையென நினைப்போர்க்குச் சொந்தம் இல்லை
.. தொலைவென்று தயங்குவோன்முன்னேறிச்செல்லான்!
இல்லையெனக் கிடப்போர்க் கெந்நாளும் தொல்லை
.. எதிர்பார்த்தே வாழ்வோர்க்கே மாற்றம் என்றும்
சொல்லளந்து பேசுவோர்க்குக் குழப்பம் இல்லை
.. சோர்ந்திருளில் அழுவோர்க்கு விடிவே இல்லை
வில்லுக்கு வளையாமல் வேகம் இல்லை
.. வீம்புக்கும் வெறுப்புக்கும் விவேகம் இல்லை!
 
தரைதொடுமுன் மழைத்துளிக்கு நிறமே இல்லை
.. தாங்குங்கோல் உளுத்துவிடின் பாழாம் பந்தல்
உரைப்பதிலே பொருளின்றேல் உளறல் ஆகும்
.. ஊமையென இருந்துவிடில் உண்மை பொய்யாம்
கரையிடுதல் காத்தலுக்கே அழகு மட்டும்
.. காட்டுவதானாலதுவும் ஓட்டைச் சட்டி
அரைகுறைகள் அடங்காமல் ஆர்பரித்தால்
.. அழகில்லை! அறிவீனம் ஆண்மை யாமோ?
 
முள்வேலி தனைத் தாண்டி ஓடும் ஆடு
.. முட்டியுடைபட்டதனை நினைத்தல் இல்லை
எள்ளில் நெய் நசுக்காமல் கிடைப்பதில்லை
.. எலும்பின்மேல் தசையின்றேல் உருவம் இல்லை
கள்ளுக்குப் போதையின்றேல் மதிப்பே இல்லை
.. கடமைக்குக் கையூட்டால் பெருமை இல்லை
தள்ளுபடி விலைப்பொருள்கள் தரத்தில் இல்லை
.. தகர்த்திடுதல் தீமையெனில் குற்றம் இல்லை!

Thursday, November 29, 2012

எண்ணத் துளிகள்

எண்ணத் துளிகள்
 
உறவைப் பெருக்கும் உணர்வில் சிறக்கும்
திறமே ஒழுங்கின் திடம்
 
திடத்தை உடல்கொண் டிருத்தலின் மேலாம்
நடத்தையில் சீர்மை நவில்
 
நவிலும் நலம்பல நாளும்மேற் சேர்ந்தும்
அவிக்கும் அழுக்கா(று) அறை
 
அறையில் ஒழுங்கின்மை அம்பலம் வந்தால்
இறைதடுத்தும் ஓங்கும் இழிவு
 
இழிவில் விழுந்தோரை இவ்வையம் தூற்றும்
ஒழியும் உளதும் உணர்
 
உணராதான் நூலறிவும் உண்மையில் வீணாம்
பிணத்துக்கும் உண்டோசொல் பீடு?
 
பீடில்லாப் பெற்றோர்க்கும் பிள்ளையால் பேறெனில்
நாடவரை வாழ்த்துதல் நன்று
 
நன்றெனினும் அன்றெனினும் நற்பண்பில் ஓங்கிடும்
அன்புடையார்க் கில்லை அவம்
 
அவமதிப்பை எண்ணி அகங்குன்றாப் பேதை
சவமென்றே சாற்றல் சரி
 
சரியாத் தடந்தான் சமநிலை காக்கும்
பரிவில் தவறிடின் பாழ்

Wednesday, November 28, 2012

ஒவ்வா நிலை

ஒவ்வா நிலை
 
வேர்களுக்கு நீரில்லாது
.. வெள்ளமெங்கே போச்சு?
வீணர்களும் கொள்ளையரும்
.. பகிர்ந்திடப் பாழாச்சு!
பார்பதவித் தேரினிலே
.. கொள்ளையிடும் வீச்சு!
படித்தவர்க்கும் பாமரர்க்கும்
.. பயம் நடுங்கும் மூச்சு!
 
வேண்டிநின்ற சுதந்திரத்தின்
.. விளைவு சிலர்க்கே உச்சம்!
விளம்பரத்தில் தான் வளர்ச்சி
.. ஏழைகண்ட மிச்சம்!
மீண்டுமொரு சுதந்திரப்போர்
.. வேண்டுமிந்த நாட்டை
மீட்டெடுத்துச் சமத்துவத்தேர்
.. ஓட்ட, வெற்றி நாட்ட!
 
சாதிமத பேதங்களும்
.. சதிச்செயலும் நாளும்
சகுனம் வாஸ்து சோதிடங்கள்
.. ஆருடங்கள் நீளும்!
ஓதுகின்ற அறிவியலுக்
.. கொவ்வா நிலை போலும்!
ஊழல்களே வேரழித்தால்
.. ஒழுக்கமென்று மீளும்?

Tuesday, November 27, 2012

மண்ணில் வாழ் தெய்வம்

மண்ணில் வாழ் தெய்வம்
 
கற்பனைகள் கவர்ச்சிநிறை கதைகள் ஆக்கும்
.. கற்பவர்கள் உள்ளங்கள் பதிவை ஏற்கும்
அற்புதங்கள் அறிவுக்குப் பொருந்தா தென்றால்
.. ஆய்ந்துணர்வோர் அதீதமென ஒதுங்கிப் போவார்
சொற்சுவையும் பொருட்சுவையும் செறிந்த பாட்டைச்
.. சுவைத்தடையும் இன்பசுகம் மதிமயக்கும்
உற்பத்தி நேர்மையதன் உள்ளடக்கம்
.. உண்மைக்குப் புறமென்றால் ஒதுக்க லாமே!
 
உழைக்காமல் உண்பதுமோர் ஈனத்தன்மை
.. உடலிலுரம் இருக்க அதை முடக்கல் கேடு!
தழைசருகாய் வீழ்ந்தாலும் மருந்துமாகும்
.. தக்கமதி யிருந்தாலும் தன்னலத்தால்
விழைவுகளைப் பெருக்கிநிதம் பிறர்தாள் வீழ்ந்து
.. வேண்டியதை வஞ்சகமாய்த் திரட்டிக் கொள்வோன்
பிழையாக மனிதனெனப் பிறந்து விட்டான்
.. பெருங்கேடு, அவனாலே அழியும் பூமி!
 
அன்பினையும் அறிவினையும் ஆண்டு நிற்கும்
.. அகந்தன்னை ஆண்டவன்வாழ் கோயில் என்பார்
என்பாலும் தசையாலும் நரம்பி ரத்தம்
.. இன்னபிற வற்றாலும் இணைத்தியங்கி
முன்னோட்டும் சாரதியாம் நெஞ்சுக் காணை
.. மூளையிட முறைதவறா வாழ்வாம் ஆட்சி
இன்னலையும் இன்பமுடன் ஏற்றுக் கொள்ளும்
.. எனில்மனிதர் மண்ணகத்தே தெய்வம் ஆவார்!

Monday, November 26, 2012

திடம் என்று...

திடம் என்று...
 
பகுத்தறிவால் மிருகக் குணப்
.. பற்றறுக்க வில்லை யென்றால்
செகத்தில் உலர்சருகெனவே
.. செத்தொழிதல் மேலல்லவா?
பின்பற்றிச் செல்வதற்கே
.. பிறந்துள்ளேன் என்பதுவே
என்பேறு என்றிருப்பேன்
.. இழிந்தவனே எனல் தவறா?
 
தடம்பற்றி நடவாமல்
.. தன்னலத்தின் அடியொற்றும்
மடம் கொண்டோர் மலிவாக
.. இடம் அடைத்துக் கொளல் நலமா?
கடனாற்றும் நல்லவர்கள்
.. கடனாளி யாய்க் கிடக்க
கொடியவர்கள் எல்லோரும்
.. கொடிப்பிடித்து நடந்திடவோ?
 
படிந்தவராய்ப் படித்தவரும்
.. அடியாட்கள் படையினிலா?
கடிவாளம் இலாக் குதிரை
.. கடும்வேகம் கொடுங்கேடே
விடிவெள்ளி எவரென்னும்
.. விழிப்புணர்வுத் தேடலிலே
முடிவான விடைகாணும்
.. திடம் என்று அடைவதுவோ?

Sunday, November 25, 2012

உணர்வு

உணர்வு
 
இருட்டைக் கிழிக்க எழுவாய் இளைஞா
திருட்டை ஒழிக்கும் அணியாய்ப் - புரட்டில்
கொழுப்பவர் ஆணவம் கொல்லத் துணிவாய்
ஒழுங்கே உனக்காம் உரம்
 
பேச்சினில் வீரம் பெரிதாய்க் காட்டுதல்
ஆச்சரியம் ஆகா(து) அறிவாயே - மூச்சாகத்
தாய்மொழி போற்றத் தவறுபவன் உள்ளந்தான்
நோய்க்கொண்ட(து) என்றே நுவல்
 
ஆடை தமிழனாய்க் காட்டினும் வீரமாய்
மேடை முழக்கும் இன உணர் - வோடுநீ
வாழ்வதாய்த் தோற்றிடினும் வஞ்சத்தால் வாடாத
ஆழ்மனச் சொத்தே அறிவு
 
உணர்வால் தமிழனாய் உள்ளவன் நோக்கும்
மணக்கும் தமிழாய்த்தான் மாண்பைப் - பணந்தான்
தந்திடும் என்றுதினம் தாய்மொழி விற்போர்க்குச்
சொந்தமதி சொத்தைஎனச் சொல்

Thursday, November 22, 2012

பண்பாட்டுப் பொங்கல்

பண்பாட்டுப் பொங்கல்
 
திருவிளையும் நாளெல்லாம் திருநாள் ஏரின்
.. திறத்தாலே நிலம்செழித்து வளம் பெருக்க
அருமுழைப்பைத் தருகின்ற மக்கள் மாக்கள்
.. அளித்தகொடை உயிர்வாழ்வு தன்னை வையம்
அறுவடையின் திருநாளாய்ப் போற்றல் மாண்பு
.. அகமகிழ்ச்சி முகப்பொலிவாய்த் தங்கிப் பொங்கி
விரிகதிரோன் தருவெப்பம் ஒளியும் தந்த
.. விளைவுகளைப் படைத்தின்பம் பொங்கும் பொங்கல்!
 
திருமணத்தைக் கொண்டோரும் எதிர்பார்ப்போரும்
.. தித்திக்கும் கனவுகள் சித்திக்கும் என்று
பெருமகிழ்ச்சி பொங்குகிற உள்ளத்தோடு
.. பேச்சினிலும் பார்வையிலும் புதிய மாற்றம்
உருவாதல் புதிராகப் புதுமையாக
.. உணர்வலையில் நனைந்தவராய் மகிழும் பொங்கல்
செருமுகத்து வீரனைப் போல் தோன்றும் காளை
.. சீற்றத்தை அடக்கிவெற்றி போற்றும் பொங்கல்
 
கொல் ஏற்றுக் கோட்டுக்கும் அஞ்சான் வெற்றிக்
.. கொடியோடு கொடியவளை நோக்கால் தாக்கச்
சில்லென்று குளிர்ந்தவளாய்ச் சிரித்து நாணும்
.. சித்திரத்தை வரையுங்கைத் திறந்தான் உண்டோ?
எல்லோரும் களித்துக் கொண்டாடும் பொங்கல்
.. இல்லார்க்கும் இயலுதவி செய்யும் பொங்கல்
நல்லதமிழ்ப் பண்பாட்டை நாட்டும் பொங்கல்
.. நலமோங்க வளமோங்கப் பொங்குவோமே!
 

Wednesday, November 21, 2012

மாந்தர் தாமா?

மாந்தர் தாமா?
 
நிலைவசதி கூடியதாய் நெடும்புகழைக் கொண்டாலும்
.. நீபேசும் தாய்மொழிதான் இனத்தின் பேராம்!
தலைநிமிர்ந்து நடந்தாலும் தாய்மொழியைப் பேசாதான்
.. தன்மானம் இலாதவனாய்த் தரத்தில் தாழ்வான்!
கலைவல்லான் பிறமொழியில் கானமழை பெய்தாலும்
.. கருத்துணர்ந்தோர் பாராட்டால் தானே இன்பம்?
விலைகொடுத்தா இனவுணர்வை வாங்கிவைத்துக் கொள்வார்?
.. விதைவீறு கொண்டதெனில் விளைவேன் வீழ்ச்சி?
 
அறிவுவளம் திறமைநலம் அனைத்திலுமே தேர்ந்தவராய்
.. அகிலமெலாம் பேர்நிறுத்தும் தமிழினத்தான்
சிறப்புமிகு தாய்மொழியைச் செம்மொழியாய்க் கண்டபினும்
.. செல்லபிள்ளை பிறமொழியில் படிக்க வைப்பான்!
உறவுபுதிதாக வந்தால் உயிர்கொடுத்த அன்னைதனை
.. ஒதுக்கிவிடும் இழிந்தகுணம் மகனுக்காமா?
இறந்தமொழி தனைத்தலையில் ஏற்றி வைத்துக் கூத்தாடும்
.. இழிநிலையில் எத்தனை நாள் இன்பம் காண்பாய்?
 
தகுதிகண்டு பாராட்டும் தன்மையினைத் தாரைவார்த்துத்
.. தாளத்தைப் போட்டபின் பாட்டுப் பாடி
மிகுதியுமாய்க் குழைவதுவே மேனிலையில் சேர்த்துவிடும்
.. மிடுக்குநடை தனக்குவரும் எனும்நினைப்பில்
நகும்நிலையில் தாம்வீழ்ந்து நாசமுறவா வாழ்க்கை?
.. நமையன்றி நம்மரபைக் காப்பார் யாரோ?
பகுத்தறிவைப் பெற்றிருந்தும் பாதந்தாங்கியே வாழ்ந்து
.. பழம்பெருமை அழிப்பவரும் மாந்தர் தாமோ?

Tuesday, November 20, 2012

விழி! எழு!

விழி! எழு!
 
சாதிமத பேதத்தைச் தகர்க்கும் யுக்தி
.. சமுதாயச் சமத்துவத்தைச் சமைக்கும் சக்தி
நீதிநெறி நேர்மையிவை எவர்க்கும் ஒன்றே
.. நியதிகளும் மரபுகளும் அரண்களாக
சோதனைகள் தொடர்ந்திடினும் மோதி வெல்ல
.. சுயமரியாதைச் சுடராய்ப் பகையைத் தீய்க்க
ஏதுமில்லை எனப்பிறர்முன் கைகள் ஏந்தா
.. இந்நாட்டின் பொற்காலம் இளைஞர் முன்னே!
 
பாரதத்தின் பழம்பெருமை பேசிக் கொண்டே
.. பணியாற்றச் சுணக்கமுறும் பிணிஏற் காமல்
நேரத்தைப் பொன்னாக்க நிமிர்த்து நெஞ்சே!
.. நீபிறந்த மண்ணுக்குன் பங்கை ஆற்று!
பேருக்கும் புகழுக்கும் பேராசைக்கும்
.. பெரும்பொழுதைக் கழிக்காது வீறு கொண்டே
யாருக்கும் இளைத்தவனாய் இருக்க மாட்டேன்
.. எனஎழுவாய்! பயனிலையே செயற்படாது!
 
வழிகாட்டி முன்நடக்கும் வலிவை நெஞ்சில்
.. வளர்காலைப் பொழுதிருந்தே வளர்த்துக் கொள்ள
செழுப்புக்குச் சிந்தனையை செம்மை ஆக்கு
.. செயல்சிறந்தோர் சென்ற வழி ஆய்ந்து செல்க!
அழிப்பதற்குத் துடிக்கின்ற கையடக்கு!
.. அறிவால் ஆம் பயனென்னும் அறுவடைசெய்!
இழிவுக்கும் எளியவரே அடங்கிப் போவார்
.. எனும்நிலையில் ஏய்ப்பவரை வீழ்த்து! வெல்க!

Monday, November 19, 2012

புதையல்

புதையல்
 
உருவின்றி உலவுகின்ற காற்றும் அச்சம்
.. உருவாக்கக் கிளம்புகின்ற இடியும் மின்னல்
தருஒளியின் நொடிநேர வீச்சும் நீரைத்
.. தரையோடச் செய்கின்ற முகிலும் நாளும்
நிறமாற்றம் அடைகின்ற பொழுதும் யாவும்
.. நீள்வானப் புதையலென எனக்குத் தோன்றும்!
சுரமாகச் செவிசேரும் ஒலியும் பாயும்
.. சூறைதென்றல் சூடுகுளிர் வானின் சொத்தே!
 
பூமிக்குள் கனிவளங்கள் புதையல் என்றால்
.. புலமையுள்ளோர் நெஞ்சறிவுப் புதையல் ஆகும்
நாமிங்கு கற்கின்ற பாடமெல்லாம்
.. நல்லாய்வாம் ஆழிவிளை பவளம் முத்து!
ஆம் இங்கே முன்னோர்தம் வரலாறெல்லாம்
.. அனுபவமாம் நவமணியின் புதையல் ஆகும்
கோமுட்டி கோபுரமே சாய்ந்த தென்னும்
.. குள்ளமனம் கொள்ளவஞ்சப் புதையல் அன்றோ?
 
இளவிதவைக் கண்ணீரில் இயைந்திருக்கும்
.. ஏக்கத்தைத் துயரத்தின் புதையல் என்றால்
வளவாழ்வுப் பேராசை வலையாய் நீசி
.. வளைக்கின்ற கண்காமப் புதையல் தானே
உளங்கொண்ட கருத்துகளை விளக்குங் காட்சி
.. ஒளிபரப்பும் விழிஉண்மைப் புதையல் என்போம்
களம் எதுவாய் இருந்தாலும் நடத்தை பேச்சால்
.. களைகட்டும் செயல்செம்மைப் புதையல் ஆமே!

Sunday, November 18, 2012

இன்னும் கொஞ்சம்

இன்னும் கொஞ்சம்
 
ஆசை காட்டி மாசைச் சேர்ப்பதும்
காசை விரும்பிக் கலகம் செய்வதும்
ஏசி மகிழ்வதும் வேசியின் தொடர்பும்
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
என்றே வளர்க்கும் நெஞ்சம் சிலர்க்கு!
 
வஞ்ச நெஞ்சமே கெஞ்சலில் கொஞ்சலில்
பஞ்சம் இன்றிப் பக்குவம் மிஞ்சும்
விஞ்சிப் போதலில் எஞ்சுதல் துன்பமே
தஞ்சம் அடைபவர் தாள்களில் வீழ்ந்தால்
தலைநிமிர் ஆணவம் தாவும் விண்ணில்!
 
குனியக் குனியக் குட்டும் பேர்க்கும்
இனியும் தொடரும் எனுமெதிர் பார்ப்பே
இன்னும் கொஞ்சம் முயன்றால் வெற்றி
இன்னும் உயரே போனால் அவலம்
ஏற்படும் எனும் எச்சரிக்கையும் தேவை!
 
இணக்கம் என்றால் இன்னும் கொஞ்சம்
பிணைப்புடன் இருப்பது பெரும்பிழை அன்று
பிணக்கும் நேரம் பெர்ம் தொடராயின்
இணங்கும் வாய்ப்பே இல்லையென் றாகும்
அணங்கலங்காரம் அளவுடன் இருப்பதும்
மணப்பொருள் பூச்சு மட்டுடன் ஏற்பதும்
புகழும் பேச்சின் போக்கும் நோக்கும்
தகும்நிலைக் களவு தரத்தினில் வேண்டுமே!

Friday, November 16, 2012

பூமிக்குள் இல்லை புதையல்!

பூமிக்குள் இல்லை புதையல்!
 
பூமிக்குள் மட்டுமில்லை புதையல் நெஞ்சம்
.. பொலிவாம்நல் எண்ணங்கள் செயற்புதையல்
சேமித்தால் செலவாகிப் போகாச்செல்வம்
.. செழுமையினும் சிறந்தமதிப் புதையல் சிந்தை
சாமிக்குப் பலிகொடுத்துப் பெறுதல் எல்லாம்
.. சத்தியமாய் வஞ்ச நெஞ்சச் சதிப்புதையல்!
நாமின்று பெற்றுள்ள இலக்கியங்கள்
.. நல்குநய நற்கருத்துப் புதையல்கள்தாம்!
 
பகல்வானின் நீலத்தில் வெள்ளை மேகம்
.. படகினைப்போல் செலுங்காட்சி எழிற்புதையல்
மிகக்கறுத்த மேகத்தூடோடும் மின்னல்
.. மேவுமிடி ஓசையுடன் நீரைக் கொட்டி
அகம்புதைய அச்சமகிழ் போலுணர்வை
.. அளிக்குமழை வனப்பது வான்நீரின் மாட்சி!
தகத்தகாயச் சுடரொளியால் பொன்வண்ணம்சேர்
.. தண்ணீரின் ஆழத்தில் புதையல் என்னே!
 
மண்ணுக்குள் முன்னாளில் புதைந்து போன
.. மாநகர்கள் பொன்வெள்ளி நகைகள் காசு
விண்ணவரின் உருவங்கள் சிலைகள் சிற்பம்
.. வெளிப்பட்டு வரலாற்றுப் புதையல் ஆகும்
கண்டவர்கள் பழங்கால நாகரீகக்
.. காலத்தைக் கணிக்கின்றார் பூமியின் மேல்
எண்ணற்ற வகையினிலே நமக்குத் தோன்றா(து)
.. இருப்பவையே ஏராளம் புதையல் அன்றோ?

Thursday, November 15, 2012

சமத்துவம்

சமத்துவம்
 
நாட்டுவளம் யாவர்க்கும் சமமே மக்கள்
.. நாடிநரம் புழைப்பெல்லாம் பொதுமுன்னேற்றங்
காட்டுவதாய் வஞ்சமின்றிக் கட்டுப்பாடாய்க்
.. கடமையுணர்வுடன்செயலில் சிறக்க வேண்டும்
மூட்டை தூக்குவோனுக்கும் உரிமை உண்டு
.. முன்னேற்றம் உழைப்புக்குச் சமமாய் வேண்டும்!
ஏட்டறிவைக் கற்போர்க்குள் பாகுபாடேன்?
.. எல்லார்க்கும் சமச்சீராய்க் கல்வி வேண்டும்!
 
பணிவாய்ப்பில் பிணித்தீர்வில் சமத்துவத்தைப்
.. பாழாக்கும் பணத்துக்கே இடமில்லாத
துணிவான மாற்றங்கள் நடைமுறையில்
.. தூய்மையுடன் நேர்மையுறத் தொடங்க வேண்டும்!
மணிமணியாய் வளரிளைஞர் நாளை நாட்டின்
.. மகத்தான குடிமக்கள் ஆகி ஆக்கப்
பணியினிலே அணிஅணியாய் முன்னேற்றத்தைப்
.. படைத்திடவும் பகிர்ந்திடவும் பழக்கி வைப்போம்!
 
உழவருடன் நெசவாளர் பாண்டம் செய்வோர்
.. உற்பத்தி செய்தொழிலில் உழைப்போர் நாளும்
நிழல்வெயிலென் றில்லாமல் கடமை ஆற்றல்
.. நிறுத்திவிடின் உலகத்தின் நிலை என்னாகும்?
ஒழுங்காக உழைப்போர் எத்தொழில் செய்தாலும்
.. உரிய மரியாதையுடன் உயரவேண்டும்
வழுவுதலும் நழுவுதலும் வழக்கமாகா
.. வழிமுறையே சம்த்துவத்தை வழங்கும் நன்றே!

Wednesday, November 14, 2012

வெளிச்சம் வெளியில் இல்லை

வெளிச்சம் வெளியில் இல்லை
 
இருள்மனத்தான் கண்களுக்கு வெளிச்சம் இல்லை
.. இரவுபகல் எப்போதும் இருட்டே எண்ணம்
அருள்நெஞ்சர் விழியற்றும் வெளிச்சம் காண்பர்
.. அன்பகத்துள் அகிலமே பேரொளிவெள்ளந்தானே?
மருட்டுவதும் மிரட்டுவதும் இருட்டு நெஞ்சே
.. மாண்புறுத்தும் ஒளி உண்மை உள்ளத் தூற்று!
திருடுதலில் தேர்ந்தவர்க்கு வெளியிருட்டே
.. தேவைப்படும் அவர் திறமை வெளிச்சம் காட்டும்
 
வெளிச்சத்தில் இருந்தாலும் உயிர்ச்சத்தென்றும்
.. விடமென்றும் வேறுபாடு சிலர்க்குத் தோன்றா!
ஒளியென்பதறிவுக்குள் உறையுமானால்
.. உண்மையினை அறிந்துணர விழிகள் வேண்டா
களிப்பூட்டும் வெளிச்சத்தை கறைப்படுத்தும்
.. கயவர்தம் காரியங்கள் இருட்டில் என் ஆம்?
ஒளிர்கின்ற கதிருக்குள் ஒளிந்து கொள்ளும்
.. உள்ளங்கள் காரிருளில் ஊரேய்க்காவா!
 
பழக்கமின்றேல் பாசங்கைப் பகலில் கூடப்
.. பார்த்தறிதல் கூர்த்தமதி யோர்க்கும் கட்டம்
அழுதே சாதிக்கும் மன அழுக்கின் சூழ்ச்சி
.. அயர்ந்துறங்கும் நேரத்துக் கனவும் ஏய்க்கும்
தொழத்தக்கோர் கண்மூடித் தூங்கும் போதும்
.. துலங்குமக ஒளிச்சுடரை முகமே காட்டும்
தழலாகத் தகிக்கின்ற நிலைமை சேர்த்தால்
.. தக்கவரின் மனக்கனலே சீற்றம் தானே!

Tuesday, November 13, 2012

பெருக்கம்

பெருக்கம்
 
பெருக்கத்தில் நல்லதற்கும் எல்லை வேண்டும்
.. பெய்தமழைப் பெருக்கத்தால் நாடே நாசம்
உருக்கத்தின் அளவுக்கும் வரம்பு தேவை
.. ஊன்கரையும் தன்மையுடன் உளம்சிரிக்கும்!
விருப்பத்தின் வெளிப்பாட்டைப் பேச்சில் மட்டும்
.. வெளிப்படுத்தி வெகுளியெனும் விருதை ஏற்பார்!
சுருக்கத்தின் அடக்கத்தில் சுரந்து வையச்
.. சொத்தாகும் புகழ்ப்பெருக்கம் குறளுக்குண்டு!
 
தசைப்பெருக்கம் விழிகளுக்கு வெறுப்பை நல்கும்
.. தனப்பெருக்கம் இயல்புக்கு மாறாய்ப் போகும்
விசைப்பெருக்கம் விபத்தினிலே வீழ்த்தி வைக்கும்
.. விளைவெதுவும் பெருகிவிட்டால் மலிவாய்ப் போகும்
இசைக்கருவி பெருக்குமொலி பாட்டின் மென்னி
.. இறுக்கிவிடும் ஒப்பனையும் மிகுதி யென்றால்
வசைபாட வாய்ப்பாகும் உச்சம் தாண்ட
.. வளர்விருப்பம் வரலாற்றில் வழுக்கிச் சாய்க்கும்!
 
பெருமிதத்தின் மறுபக்கம் அகந்தையாகப்
.. பின்னணியில் உந்துபடை முந்தும் அன்னார்
கருத்தினிலே கறையாயக் கறைதனக்காய்க்
.. கண்டறியா முறைதனிலே மறைந்திருக்கும்
குறுக்குதலும் எழிலென்று செடிவளர்ப்போர்
.. குள்ளமனம் கண்டுமனம் குமுறுவானேன்?
பொறுத்தலிலோ பொங்கலிலோ மானம் கெட்டுப்
.. போவதுண்டு! கொள்ளளவு மீறின் கொட்டும்!

Monday, November 12, 2012

தாய்ப்பால்

தாய்ப்பால்
 
தாய்மொழியில் ஆண்டவனை வணங்கச் சென்றால்
.. தடுப்பவனைத் தமிழாநீ மேலோன் என்பாய்
வாய்மொழியில் நல்லதமிழ் பேசக் கூட
.. வக்கற்ற நிலையில்நீ இருக்கின் றாயே!
தேய்வடைய விடுவாயா தன்மானத்தை
.. திருடுவஞ்சம் சூதுசெய்வோர் உன்னைச்சூழ
ஆய்ந்துணர்ந்து பாராமல் அடிமைப் புத்தி
.. அகலாமல் ஒருவாழ்வா அறிவெதற்கு?
 
பிறநாட்டு நல்லறிஞர் தமிழின் தொன்மைப்
.. பெருமையினைப் பலவாறாய் ஆய்ந்து சொல்ல
அறநெறிகள் மறமாட்சி முறையில் வல்ல
.. ஆன்றோர்கள் யாத்தவள இலக்கியங்கள்
மறப்பாயா மறுப்பாயா மடத்தில் ஆழ்ந்து
.. மதிமாற்றம் செய்பவரை மதிக்கின்றாயா?
துறவறத்தில் மெய்ப்பொருளை உணர்தல் விட்டுத்
.. தூய்மையிலார் தமைத்தோளில் சுமக்கின்றாயே!
 
தாய்மொழிச்சொல் பொருளுணர்ந்து சரியாய்ப் பேசத்
.. தவறுகின்ற நீதானா வந்தோர் சொல்லும்
வாய்மொழியைப் புரியாது மேல்மேல் என்பாய்
.. வளர்குழவி தாய்ப்பாலில் ஊட்ட மின்றேல்
நோயெதிர்க்கும் உரனின்றி நோஞ்சான் ஆகும்!
.. நுண்ணறிவைத் தாய்மொழியே வளர்க்கும் உண்மை
சேய்படிக்கப் பிறமொழியைத் திணிக்கும் நீதான்
.. செத்தமொழி சிறப்பென்றாய்! பித்தா போடா!
 
யாதும் ஊர் யாவருமே கேளிர் என்றே
.. யாவர்க்கும் சொல்லி நீயே மாறு கின்றாய்
மேதினியே வள்ளுவரைப் போற்றும் போது
.. மூடங்கள் அவர்சிலையை மூடிவைக்கும்
வேதனையே இயற்கைதரும் ஆற்று நீரை
.. விடமறுக்கும் கடையனுக்கேன் ஒருமைப்பாடு?
போதனைகள் ஏறவில்லை தனிநாட்டானா?
.. போகிறதே மின்சாரம் இங்கிருந்து?
 
வந்தாரை வாழ்வைப்பாய் சொந்த மண்ணில்
.. வாழ்விழந்த உன்னவனை அனாதை என்பாய்
நொந்தழியும் சேதிகளைக் கேட்கின்றாயே
.. நோகாதா உன்னிதயம் தசை ஆடாதா?
பந்தாடு கின்றாரே தமிழ்மானத்தை
.. பண்பாட்டுச் சீரழிவைப் பார்க்கின்றாயே
மந்தை ஆடா! ஏடா நீ உயிராய் மானம்
.. மதித்த இனம் துதி பாடும் கதியா இன்று?
 
அண்டையுள்ளோர் தன்னலத்தால் ஒன்றுகூடி
.. ஆனவழியாவிலுமே முன்செல்கின்றார்
சண்டையிட்டு மொழிவளர்ச்சிக்கான யாவும்
.. சாதிக்கின்றாரிங்கே நமக்குள் நாமே
முண்டிமோதி மண்டையுடைத்துக் கொள்கின்றோம்
.. முனைமழுங்கிப் போனவாளைக் கூர்செய் நன்றே
தொண்டருக்கு வழிகாட்டிச் செல்வோன் முன்னே
.. துடிப்போடு செல்லட்டும், தொடர்வோம் வெல்வோம்!

Sunday, November 11, 2012

பொதுமறையோன்!

பொதுமறையோன்!
 
ஒப்பில்லா உயர்மறையாய் விளங்கும்செந் தமிழில்
.. உலகத்து மாந்தரினம் உவந்தெற்கும் மறையாய்
செப்பிவைத்தான் திருக்குறளைச் சிறப்பாகத் தமிழன்
.. செந்தமிழே செம்மொழியாய் சிறக்கஒரு நூலே
இப்புவிக்குப் போதுமென ஏற்றவர்கள் உரைப்பார்
.. இம்மகிழ்ச்சி உலகத்தில் வேறுமொழிக் குண்டோ?
அப்பழுக்கே இலாவாழ்க்கை அமைந்திடவே அறங்கள்
.. அளிக்கின்ற திருக்குறள்நம் அருந்தமிழர் சொத்து!
 
அறமுரைக்கும் திருக்குறளைத் தம்மொழியில் பெயர்த்த
.. அகிலமொழி யினர்சமய வழிமுறைகள் கடந்து
சிறப்புறவே குறள் கூறும் கருத்துரைகள் உணர்ந்து
.. செய்கின்ற இல்வாழ்க்கை முறையொழுக்க நெறியாம்
திறன்வியந்து போற்றுகிறார் உலகப்பேர் அறிஞர்
.. திக்கெல்லாம் நம்பெருமை திகழவைக்கும் குறளே
மறத்தமிழர் மாநிதியாய்க் குறளினரும் பொருளை
.. மறவாமல் ஏற்றிடுவோம் மாண்புகளே பெருகும்!
 
ஒன்றேமுக் காலடியில் உணர்ந்துபொருள் மாந்தர்
.. உயிராகப் போற்றிஉயர் உணர்வோடு வாழ்ந்தால்
பொன்றுகிற பெருமையெலாம் புகழ்மணமே வீசும்
.. பூதலத்தில் உயர்நீதி புகலுமிந்த நூல்போல்
குன்றெனவே காலத்தை வென்றுலகில் நிலைக்கும்
.. கூரறிவுச் சீராக்கும் வேறுநூலெங் குண்டு?
என்றைக்கும் வாழுண்மை இவ்வுலகோர் அறிய
.. இயம்பிவைத்த வள்ளுவன்பேர் இசைப்பதுநம் கடனே!

Friday, November 9, 2012

நாடு

நாடு
 
நாடுமொழி மக்களின்மேல் பற்றுள்ளோரே
.. நாடாள்வார் எனும்நிலையில் வாழ்க்கைத் தேவை
ஈடேறும் என்பதிலோர் ஐயம் இல்லை
.. எள்ளளவும் வஞ்சமின்றி பொதுத்தொண்டாற்ற
கேடுகளில் கொழுப்பவராய் இழிந்து வாழக்
.. கிஞ்சிற்றும் நினையாத நெஞ்சம் கொண்டோர்
ஓடுகின்ற புதுப்புனலாய்ச் சுறுசுறுப்பாய்
.. உழைத்தாலே மானிலத்தில் செழுமை ஓங்கும்!
 
மனச்சான்றை மதிப்பவரே மாந்தர் ஆவார்
.. மாண்புறுதல் உரிமைபொது வென்பர் மேலோர்
தனதான்யம் பாக்கியங்கள் வாழ்வோர்க் கெல்லாம்
.. தகுதியினால் நேர்மைவழி வாய்க்க வேண்டும்
இனம்சாதி மொழிஎன்னும் பேதம் நோக்கி
.. எதனுயர்வும் கணிக்கின்ற இழிவில்லாத
குணமுள்ளோர் கூடிவரும் ஓடும் இன்னல்!
 
தனிமனித ஒழுக்கந்தான் சமூக நன்மை
.. தழைத்தோங்கச் சான்றாகும் வீடு வீதி
இனிமையிலே தோயுமெனில் எங்கும் என்பம்
.. இவ்வண்ணம் சிற்றூர்கள் தொடர்ந்து பேரூர்
வினைவல்லார் பொதுநோக்கால் விளையும் நன்மை
.. விரிவானால் அந்நாட்டில் நலங்கள் பொங்கும்
முனைப்பெல்லாம் முன்னேற்றம் தனையே நாட
.. முழுமையுமாய்த் தன்னிறைவு பெறுமே நாடு!

Thursday, November 8, 2012

இயல்பு

இயல்பு
 
என்னியல்பைப் பிறர்போற்றத் தேவை யில்லை
.. எதிர்பார்த்தால் அதுவே பாசாங்காய் மாறும்!
என்நெஞ்சின் முழுநிறைவைத் திருடிக் கொள்ள
.. எவராலும் ஆகாது தனிச் சொத்தாகும்!
என்செயலை நேர்மையெனும் உள்ளுணர்வே
.. என்றென்றும் நெறிப்படுத்தும் என்னை என்றால்
என்விழியில் அஞ்சாமைத் தெளிவைக் கூட்டும்!
.. எனைபோற்றல் தூற்றல் ஏதும் மாற்றல் இல்லை!
 
தெளிவடைந்து தேர்ந்தோரைத் திருப்பம் ஏதும்
.. திசைமாற்றி வசைசேர்க்க இசைதல் இல்லை
ஒளிவுமறை வெனல் உண்மை வழியில் நில்லா
.. உரையாடுங் குரலிலுரத் தேயொ லிக்கும்!
வெளிப்புனைவு வேண்டாம் வான் கதிரொளிக்கு!
.. விசையேறும் மணத்துக்கா, காற்றுத் தேர்க்கே!
விளிக்கின்ற குரல் மேவும் விழைவுணர்ந்து
.. விலங்கினமும் நிலையறியும் கலையில் நிற்கும்!
 
சிலபோது நினைவியக்கச் செயல்கள் வெற்றிச்
.. சிலிர்ப்பேற்றும் சிந்தைக்கு நேரும் வாய்ப்பு!
புலர்காலப் போதிசைப்பார் பூபாளத்தை
.. பூபாள இசைகேட்டா புலரும் போது?
நலம்தீது நடப்பெல்லாம் இயல்பாகத்தான்!
.. நடைமாற்றும் பழிப்புக்கா நாக்கு வன்மை!
கலமறிந்து வைக்கின்ற பொருள் மாறாது!
.. கலக்கத்தில் ஆய்வென்றால் கரை ஏறாதே!

Wednesday, November 7, 2012

வெல்லும் புகழ்

வெல்லும் புகழ்
 
விண்ணகத்தில் கண்சிமிட்டும் எண்ணிறந்த மீன்கள் - அவை
வெண்ணிலவின் தண்படையாம் விளக்காயிருள் விலக்கும்
மண்ணகத்தில் புகழுடையோர் விண்மீன்கள் போலே - அவர்
மணம்பரப்பி பெயர்நிலைக்க வாழ்கின்ற தாலே!
மண்ணுலக வாசிகட்கு நட்சத்திர ராசி - இதில்
மாந்தராக வாழ்பவர்கள் எத்தனை பேர் யோசி!
கண்ணெதிரே பிறர் துயரம் கண்டதும் கலங்கும் - மனம்
கொண்டவரே மாந்தரெனில் குவலயம் துலங்கும்!
 
இயலுதவி செய்யுமந்த ஈகைஎனும் தன்மை - கொண்டு
இருப்பவரே இருளிஒளி யேற்றிவைப்பார் நன்மை
செயல்முறையில் பொதுநலத்துச் சிந்தையர் சிறந்தோர் - எவர்
சேருமிடம் சிறந்திடுமோ அவரே தான் பிறந்தோர்
எளிமையெனும் நிலையினிலும் வாழ்க்கையில் நிறைவு - மனம்
இருந்துவிடில் அறிவுநிதி நிறைவிலிலை குறைவு
தெளிவுடைய பாடமென விளங்க ஒரு சான்றாய் - நடை
தேர்ந்தவனாய் நீயிருந்தால் தாழ்ந்தவனாய்த் தோன்றாய்!
 
புலமையினால் புரிசெயலில் புகழ்தழுவ நின்றால் - உனைப்
புவனமெலாம் போற்றுநிலை வந்தணைக்கும் நன்றாய்!
கலைஞனெனக் கவிஞனெனப் பரிசுகளை வென்றால் - புவி
கண்டபலன் உண்டதிலே மண்டுபுகழ் கொண்டாய்
தலைவரெனத் தொண்டரெனத் தன்னலமில் சேவை - செயும்
தகுதியிலே இசைத்திடுவார் புகழொளிரும் பாவை!
நிலைதவறும் நேரத்திலும் நேர்மைவழி செல்லும் - நன்
நெஞ்சுடையார் மின்னுபுகழ் மண்ணுலகை வெல்லும்!

Tuesday, November 6, 2012

பொய்யும் மெய்யும்

பொய்யும் மெய்யும்
 
மெய்யதன் உறுப்பில் வாயே
.. மெய்யுடன் பொய்யைச் சொல்லும்
ஐயமும் கேட்கும் கெஞ்சி!
.. ஐயமும் தெளிந்து கொள்ளும்!
செய்கையால் விளிக்கும் போது
.. சேதியும் மாறக் கூடும்
பொய்யினை மௌனம் கூடப்
.. புகன்றிடும் புன்மை என்னே!
 
செப்பிடும் உரைகள் யாவும்
.. செம்மையாய் விளங்க வேண்டின்
ஒப்பிடும் உண்மையாக
.. உயர்ந்ததாய் இருக்க வேண்டும்!
தப்பெனத் தெரிந்தால் நாவே
.. தயங்கிடும் உச்சரிக்க
அப்படிச் சொல்லி விட்டால்
.. அப்புறம் பொய்யே வாழ்க்கை!
 
மெய்சொலின் இழப்பு நேரும்
.. மென்னியில் கயிறும் சேரும்
செய்ததைக் கண்ணால் கண்டும்
.. செப்பிட உயிர்க்கா பத்து!
பொய்யிலே பிழைக்கும் கூட்டம்
.. பொறுத்துக் கொள்ளாது மெய்யை
அய்யகோ! மனத்தைக் குத்தி
.. அவலத் திலாழ்த்தும் பொய்யே!
 
பொய்ம்மையைப் புகலும் வாய்தான்
.. புழுத்துத்தான் போகும் என்றோ
மெய்ம்மையைக் கொன்றால் தீமை
.. மேன்மையை அழிக்கும் என்றோ
செய்கையில் போலி ஓங்கி
.. செயம்கொளல் அடுக்கா தென்றே
பொய்ம்மையை இகழென் றாரோ?
.. பொருள்புரிந்தேற்போமாநாம்?
 
கணத்தொறும் நெஞ்சைக் குத்தும்
.. கருவிபொய் உருவிலாமுள்!
குணத்திலே இழந்தோர் என்று
.. கூறுவர் பொய்யர் தம்மை!
பணத்திலே பற்று வைப்போர்
.. பதவியின் பெருமை சாய்த்துப்
பிணமென வீழ்த்தும் கேட்டின்
.. பிறப்பிடம் புல்லர் நாவே!
 
பொய்வழிச் சுருட்டும் காசால்
.. பொன்பொருள் திரட்டும் மாசைச்
செய்பவன் ஒருநாள் அந்தச்
.. சேற்றிலே அழுந்திச் சாவான்!
மெய்க்குரலுக்குச் சொந்தம்
.. மென்மைதான் மெதுவாய்த் தோன்றும்
பொய்யதே உரக்கக் கூவும்
.. போலிக்கே கவர்ச்சி தூக்கல்!
 
பொய்ம்மையைப் புகழச் சூழும்
.. போக்கினர் புரட்டுக் காரர்
மெய்க்குவீண் மெருகு வேண்டாம்
.. மிரட்டிடும் தொனியும் வேண்டாம்
செய்வினைச் சீர்மை சேர்க்கச்
.. சிந்தனைச் செப்பம் செய்வோம்!
நெய்திடத் தகுந்த நூலால்
.. நெசவெனில் சிறக்கும் சேலை!

Monday, November 5, 2012

கனவு

கனவு
 
காணுங்கள் கனவென்றால் படுத்துக் கொண்டு
.. கண்மூடி நித்திரையில் காண்பதன்று!
பூணுங்கள் உறுதிநெஞ்சில் பிறந்த மண்ணைப்
.. போற்றுகிற நிலைக்குயர்த்தும் செயல்கள் ஆற்ற!
நாணுகின்ற வினைபுரியும் நினைவை மாற்றி
.. நாட்டுநலம் கூட்டவினை யாற்றும் வன்மை
பேணுங்கள் எண்ணம்சொல் செயல்களாலே!
.. பெருமையெலாம் கூடிவரும் வீட்டில் நாட்டில்!
 
படுத்திருக்கும் குதிரையதைப் பந்தயத்தில்
.. பறக்கவிட எழுப்பமுயல் வதிலும் மேலாம்
அடுத்துநிற்கும் குதிரையினை உசுப்பல் என்போம்!
.. அறிவாற்றல் ஆயத்தம் வேகம் காட்டும்
தடுக்கவரும் எதிர்ப்புகளைத் தாண்டிப் பாயும்
.. தன்மையுறப் பயிற்சிகளில் தரமும் வேண்டும்!
விடும் அம்பின் கூர்வெற்றி கொடித்திடாது
.. வைத்தகுறி சரியாக இருக்க வேண்டும்!
 
படுத்தநிலை யிலோடும் பாதம் உண்டா?
.. பந்தயம் இல்லாதிருந்தும் மனம்தான் ஓடும்!
எடுத்துக்கொள் ளும்செயலில் ஏற்றம் காண
.. எழுச்சிக்கொள் லாதவனால் இயலா தென்றும்!
கொடுத்திருக்கும் வாய்ப்பறிந்தே இயங்கி வெற்றிக்
.. கொடிநாட்டும் வன்மைமனம் உடலுக் கேற்றும்!
மிடுக்கோடு தலைநிமிர்வில் வெற்றி சேர்ந்து
.. மேன்மையுற நம்பிக்கை உயர்த்து வோமே!

Sunday, November 4, 2012

ஊக்கம்

ஊக்கம்
 
ஊக்கம் என்பது உள்ளச் சொத்து - அது
உயர்வையும் புகழையும் விளைத்திடும் வித்து
ஏக்கம் கொள்ளா நிலையுண்டாக்கும் - பெரும்
இழப்பே நேரினும் மீட்டுச் சேர்க்கும்!
 
செல்வோம் என விலகும் தளர்வெல்லாம் - பெரும்
சிறப்பினை ஈந்திடும் உழைப்போர்க்கெல்லாம்
இல்லை எனும்நிலை இடரினுள் தள்ளும் - மன
எழுச்சியே வெற்றியின் ஏணியாக் கொள்ளும்
 
ஏனைய செல்வம் பெருகினும் குறையும் - உரம்
ஏற்குமூக்கத்தால் வளர்ச்சி எத்துறையும்
கூனிலாக்குணம்தரும் மிகநலம் பலவும் - சீர்க்
கொள்கையால் வலம்வரும் புகழ்மணம் நிலவும்
 
விழைவுகள் வளரிடம் நெஞ்செனும் நிலமே - பயிர்
விளைவதன் வெற்றியே ஊக்கமாம் பலமே
உழைப்பினால் பெரும்பயன் உவப்பினைச் சேர்க்கும் - பிறர்க்(கு)
உதவிடும் விரிமனப் பெருமையும் வாய்க்கும்!
 
தளர்ச்சியின் முற்றுகை தருமுடல் முதுமை - உளம்
தளரா நிலையதன் செயல்முறை புதுமை
உளத்திடம் துயர்மலை பிளந்திடும் உளியாம் - நம்
உடல்பெற வழங்கிடும் வலிவுடன் பொலிவாம்
 
ஊக்கம் என்பதோர் ஊன்றுகோல் திண்மை - அதை
உடையவர் வெற்றியை அடைவதும் உண்மை
ஆக்கம் அவர்வழி தேடியே சேருமே - சீர்
அளிக்கும் அவர்புகழ் ஏடுகள் கூறுமே!

Saturday, November 3, 2012

விடிவெள்ளி

விடிவெள்ளி
 
குவியிருளைக் கொன்றொழிக்கும் விடியலுக்கு முந்தோன்றி
புவியொளிக்குக் கட்டியத்தைப் புகல்கின்ற விண்மீனே
விடிவெள்ளி எனநாமும் விளம்புகின்றோம் விண்நோக்கி!
 
தவிக்கின்ற மக்கள்மனத் தாகத்தை நன்குணர்ந்து
அவலத்தை நீக்க அருந் துணையாவோர் விடிவெள்ளி!
மிகுதுயரை அளிக்கின்ற மேலான வாழ்வினரின்
அகந்தைஅழிந்தேழையரை அணைத்திடுவோன் விடிவெள்ளி!
 
அறியாமை இருளினிலே அழுந்திக் கிடப்பார்க்குச்
சரியான வழிகாட்டும் நெறியாளன் விடிவெள்ளி!
உலகத்தின் நன்மைக்கே உதவிடவே அறிவாற்றல்
பலவகையில் பயனாக்கும் பண்பாளன் விடிவெள்ளி!
 
மக்கள் நலம்நாடி மனம்வாக்கு காயத்தால்
பக்கம்துணையாய்நிற்கும் பற்றாளன் விடிவெள்ளி!
ஏனென்று வினாத்தொடுத்த எழுச்சிச்சிந்தனையாளன்
ஏதன்சு நகரத்துச் சாக்கரடீஸ் விடிவெள்ளி!
 
கோனாட்சிக் கெதிராகக் குரல்கொடுத்துத் தன்னுரிமைக்
கொள்கைவெற்றி கண்டகாந்தி பாரதத்தின் விடிவெள்ளி!
பொதுவுடைமைத் தத்துவத்தைப் புவியெங்கும் பரப்பியநல்
மதிவல்லார் காரல்மார்க்ஸ் மானிலத்தின் விடிவெள்ளி!
 
மூடப் பழக்கங்களின் கேடுகளை எடுத்துரைத்துப்
பீடுபெறப் பகுத்தறிவைப் பரப்பிவந்த ஈவேரா
மாடுகளாய் மந்தைகளாய் மதம்பிடித்தோர் வதைத்திடவே
கேடுகளில் கிடந்தோர்க்குக் கிழக்குத்திசை அம்பேத்கர்
 
புலமையெனில் வாழ்க்கையிலே வளம்சேர்க்க எனப்பாடும்
நிலைமையது நீங்ககவி திலகமெனும் பாரதியார்
என்றிங்கே வானுயர்ந்து எழுச்சிதரும் விடிவெள்ளி
பன்னூறாய் முன்னிருக்க பாதைமாறிப் பறப்பதுவா?

Friday, November 2, 2012

தேடல்

தேடல்
 
பகுத்தறிவால் மிருககுணம் பற்றறுக்க வில்லையென்றால்
செகத்தில் உலர்சருகெனவே செத்தொழிதல் மேலலவா?
பின்நின்று சொறிவதற்குப் பெரியவர்கள் தம் முதுகே
என்பேறு என்றிருப்போன் இழிந்தவனே எனல்தவறா?
 
தடம்பற்றி நடவாமல் தம்நலத்தின் அடியொற்றும்
மடம்கொண்டோர் மலிவாக இடம்பிடித்துக் கொள்வதுவோ?
அடம்பிடிக்கும் அறிவாற்றல் அழிவினிலே தொடர்ந்திங்கே
நடமாடும் அரவங்கள் நன்மையுறல் கொடிதன்றோ?
 
கடனாற்றும் நல்லவர்கள் கடனாளி யாய்க்கிடக்க
விடநெஞ்ச வல்லவர்கள் வீதிகளில் ஊர்வலமா?
திடம் உடலில் இருந்தாலும் செயலின்றி மடிவளர்த்தால்
தடையின்றி உள்ளவையும் நடைபோட்டுப் போகாவோ?
 
கொடியவர்கள் எல்லோரும் கொடிபிடித்து நடந்திடக்கீழ்ப்
படிந்தவராய்ப் படித்தவரும் அடியாட்கள் படையினிலா?
விடிவெள்ளி எவரென்னும் விழிப்புணர்வுத் தேடலிலே
முடிவாக விடைகண்டு முன்னேறல் எந்நாளோ?

Thursday, November 1, 2012

உயர் நெறி

உயர் நெறி
 
எழில்காட்டும் காகிதப்பூ ஏராளம்தான்
.. எண்ணற்ற வண்ணத்தில் வேலி யோரம்
பொழிலிடையே சிறுசெடியில் ரோசா ஒன்றும்
.. போவோரின் நாசிக்குள் மணத்தை ஏற்றும்
விழியிரண்டும் வெளிவனப்பை விருந்தாய்க் கொள்ளும்
.. விரும்புநறு மணத்துக்கோர் உருவம் இல்லை
வழிப்போக்கன் சிந்தனைக்கு வெளியும் உள்ளும்
.. வளர்பவையால் கிளர்ந்தெழும் கற்பனையாம் ஊற்றே!
 
ஊற்றுகள் சுரந்தோடி ஆற்று வெள்ளம்
.. உருவாக விரைந்தேகி வயற்புறத்தில்
நாற்றாக வளர்பயிர்கள் நல்விளைவை
.. நல்கிடவே வாய்க்காலின் வழியே சென்று
சேற்றுக்குப் பெருமையினைச் சேர்க்கும் நீர்தான்
.. செழுமையுறு பயிராகி உயிர்வளர்க்கும்!
மாற்றங்கள் அறிவியலால் விரிந்த போதும்
.. மண்வளர்க்கும் பயிர்நீக்கு மாற்றே யில்லை!
 
பொறிநுகர்ச்சிப் புலனுணர்வாய் விரியும் சிந்தை
.. பொதுப்படையாய் உயிர்வகைக்குப் பொருந்த வில்லை
தறிகெட்டுப் பாய்கின்ற வேகம் கொண்டால்
.. தரம்தப்பும் நிலையிலுயிர் திறமும் சாயும்!
குறிதப்பா(து) அம்பெய்து வீழ்த்த வல்லார்
.. கொடுங்காட்டில் குள்ளநரி வேட்டை ஏலார்;
நெறிமுறைகள் உயர்ந்தவையால் உயர்வாய் நின்றால்
.. நெடும்புவியில் கெடுதியிலா நிகழ்வே எங்கும்!