Saturday, October 27, 2012

மான மனம்

மான மனம்
 
முக அழகைப் பார்த்ததுமே விழிகள் தாழ்ந்து
மூடியுள்ள மேடுபள்ளம் பாய்ந்து மொய்க்கும்
அகத்தினிலே கிளுகிளுப்போ கிளர்ச்சி தானோ
அதிகரிக்கும் இதில்வயது பேதம் இல்லை!
அகவைமுதிர்ந்தோர் நினைவில் பழங்கதைகள்
ஆசையிலாழ் நெஞ்சுக்குப் பலவீனந்தான்!
தகவுடையார் தனியாளாய்ச் சென்ற போதும்
தாங்கியுள்ள மான மனம் தவறா செய்யும்?
 
பேதையரைப் பிடித்துவிட்டால் மேதை என்பார்
பெரும்பான்மை ஆசைமனம் பேதலிக்கும்
தீதையெலாம் நலமென்று திரித்துரைப்போர்
திறமையினைச் சூதெனலே நீதி நேர்மை
போதைவர கிடைப்பதனைக் குடித்து வைப்போர்
போய்ச்சேரும் தூரம் காத தூரம் இல்லை
பாதையிலே அதிவேகம் உபாதை சேர்க்கும்
பண்புடைமை எனில் பகையும் போற்ற வேண்டும்!
 
அடக்கமென்றால் சொரணையற்றுக் கிடப்பதன்று
ஆர்வமொன்றால் அடைவதிலே வேகம் தானா?
நடத்தையில்காண் சுறுசுறுப்பா நன்னடத்தை?
நாகரிகம் பாசங்கின் பற்றுக்கோடா?
திடநெஞ்சு தடந்தோளின் வலிமை ஏற்றும்!
திசை அறியான் காற்றுக்குப் பேர் வைப்பானா?
மடம் உடலின் வனப்பாகும்; நெஞ்சில் கேடே!
மானம்கால் கொள்ளாத மனமே பாழாம்!

No comments:

Post a Comment