Saturday, October 6, 2012

நல்லவரும் வல்லவரும்

நல்லவரும் வல்லவரும்
 
உருவத்தில் ஏறத்தாழ் விருந்த போதும்
.. உள்ளத்தில் உணர்வுகளில் பொதுநலத்தைக்
கருதுதற்கே பகுத்தறிவு மாந்தருக்கு!
.. கண்முன்னே பல உயிர்கள் பசியால் வாட
சிறிதும் சஞ்சலமின்றித் திரிவர் தீயர்
.. சிறுமதியோர் பெருகுவதே பூமி பாரம்
வறியநிலை மண்டையிலே கொண்டோர் இங்கே
.. வாழ்கின்ற காலமெலாம் உலகக் கேடே!
 
எல்லோர்க்கும் எல்லாமும் வேண்டும் என்னும்
.. எண்ணமிலார் தம்பெண்டு மக்கள் மட்டும்
செல்வத்தில் நீந்தும் பேராசை கொள்வார்
.. சீரழிப்பார் ஊரழிப்பார் சாகும் மட்டும்
நல்லவரே வல்லவராய் மாற வேண்டும்
.. நலிந்தவரின் துயர்நீக்க உதவ வேண்டும்
புல்கூட மருந்தாகிப் புண்ணை ஆற்றப்
.. பொதுநலத்தை ஏன்மனிதன் பொசுக்குகின்றான்?
 
வல்லமையால் சேர்ந்திருக்கும் வசதி யாவும்
.. வாழ்நாளின் இறுதிவரை உறுதி யாமோ?
பொல்லாதார் சமத்துவத்தைப் போற்ற மாட்டார்
.. போங்காலம் வரையில் தன்னலமாம் சேற்றில்
எல்லையிலா ஆசைகளை வளர்த்துக் கொண்டே
.. இடர்ப்பாட்டில் சிக்கி இழிநிலையில் வீழ்வார்
நல்லவராய் வாழ்ந்தவரின் வரலாறெல்லாம்
.. ஞாலமுள்ள நாள்வரைக்கும் புகழாய் வாழும்!
 
உள்ளத்தை மறைத்துரையில் பரிவைக் காட்டல்
.. ஊர்கெடுப்போர் ஏமாற்று வித்தை என்றே
பள்ளத்தில் இருப்பவர்கள் உணர்ந்து மீளப்
.. படும்பாடும் பாதகரால் பாழாய்ப் போகும்
கள்ளத்தை வளர்ப்பவர்க்கோ பகட்டாய் ஆடை
.. கடுமுழைப்பில் நடுங்குமுடல் சுற்றக் கந்தல்
கொள்ளையரின் உடற்பெருக்கம் இல்லா தோரின்
.. குடற்சுருக்கம் எனும் அவலம் ஒழிவதென்றோ?

No comments:

Post a Comment