Tuesday, October 30, 2012

இயற்கை அன்னை


இயற்கை அன்னை
 
மண்வளத்தின் மாண்புகளை அறிந்து கொள்ள
.. மரம்செடிகள் கொடிவகையாய் இயற்கை அன்னை
எண்ணிறந்த வகைகளிலே எங்கும் காண
.. எழில்பொங்கக் குலுங்குகிறாள்! மாந்தர் தங்கள்
கண்களுக்கு விருந்தாகப் பசுமைக் கோலம்
.. காட்டுகிறாள் காய்கனிகள் தழைகிழங்கு
வண்ணத்தில் பலவகையாய் மலர்கள் என்று
.. வாழ்வோர்க்கு வழங்குகிறாள் வஞ்சமின்றி!
 
உண்பதற்கும் உணவாகி உற்ற நோய்க்கும்
.. உரிய அருமருந்தாகி உயிர்வளர்க்கும்
அன்னையவள் இன்னருளை ஏற்றுக்கொண்டே
.. அவள்படைப்பை அழித்திடவும் முனையும் மாந்தர்
கண்ணிருந்தும் தானிருட்டில் குருடராகக்
.. கயமையிலே பழுத்தவராய் அலைகின்றாரே!
பண்பாட்டில் தேர்ந்தபழம் தமிழர் என்போம்
.. பாதகராய் இயற்கைஎழில் சிதைக்கின்றோமே!
 
'தா, வரத்தை!' எனநோற்றுப் பக்தர் கேட்டால்
.. தயங்காமல் தந்திடுமா தெய்வம் ஐயம்!
தாவரமோ தம்மியல்பாய் வானினின்று
.. தரும்மழையைத் தயங்காது வேண்டும் முன்பே!
நாவினிக்கச் சுவையளிக்கும் விளைபொருள்கள்
.. நம்மியற்கைத் தாயளிக்கும் நல்வரங்கள்!
காவிலுள்ள மூலிகைகள் நோயைத் தீர்க்கும்
.. கண்டறிந்து கொண்டவர்க்கே மண்டும் இன்பம்!

No comments:

Post a Comment