Saturday, September 22, 2012

பிழையா, பேறா?

பிழையா, பேறா?
 
ஊர்வம்பை வளர்ப்பதற்கு விருப்பம் உள்ளே!
.. உத்தமராய் நடிப்பதற்கு வெளியே வேடம்!
சேரிடத்துக் கேற்றாற்போல் சிந்தை மாற்றிச்
.. சேறுகண்டு சாறு என்று சொல்வர் உண்டு!
யாரிடத்தும் யாசிக்கத் தன்மானத்தை
.. எப்போதும் தொலைத்திழிவில் மகிழ்வோர் கூடப்
பேரெடுத்தோர் வரிசையிலே நிற்கக் கண்டும்
.. பிழைசேர்த்த பெருமையினைப் பேறென்போமா?
 
வாய்ப்பந்தல் பொய்நிழலில் குளிர வைப்போர்
.. வாழிடமே பாழிடந்தான் எனத்தெரிந்தும்
தாய்போலப் பரிவுடையார் என்று பின்னே
.. தாளமிடும் கூட்டத்தைத் தன்னலத்தின்
பேய்ப்பிடித்தே ஆட்டுவதாய் எண்ணிக் கொண்டே
.. பேசாமல் குற்றத்தைப் பெருக்கலாமா?
காய்சினத்தீயது புரட்டர் தோலுரித்துக்
.. காட்டாமல் இருப்பதுவும் புரட்சி யாமோ?
 
புதுமைஎனப் போலிகளைப் புகழும் போக்கைப்
.. புறம்சொல்லிப் பிழைப்போர்மேல் இரக்க நோக்கை
துதிப்பதற்கு மட்டுமேகை தூக்கும் பேர்க்கும்
.. துளியளவும் உழைப்பின்நீர் சிந்தா தோர்க்கும்
மதிப்பளிப்போர் பெரியமனம் படைத்தோர் என்னும்
.. மாசுடையார் செல்லாத காசாய்ப் போகக்
கதிமாற்றும் விதியாக்கச் செய்கை விட்டுக்
.. காலத்தை வீணாக்கல் மடமை தானே?

No comments:

Post a Comment