Sunday, September 30, 2012

மழலைப்பேறு

மழலைப்பேறு
 
குலம்வளர் வித்து
குடும்பத்தின் சொத்து
நலம்நிறை மகிழ்ச்சி
நடமிடும் எழில்தேர்
வலம்வரும் வான்மதி
வாழ்க்கைப் பயன்நிதி
உலவிடும் ஓவியம்
உறவுணர் காவியம்!
 
உயிர்வளர் அமுதம்
உளக்குளக் குமுதம்
உயர்தரு நிதியம்
உறவுகள் பதியம்
பயன்பல பதியும்
பயனுறும் இதயம்
இயலிசைக் கூத்தின்
இனிமையின் சாறு!
 
(வேறு)
 
பேசிடும் செல்வமாகப்
பெருமைகள் சேர்ப்பதாக
மாசிலா இன்பம் வாழ்வில்
மண்டியே சுரப்பதாக
வீசிடும் தென்றல் தம்மை
விளங்கிடும் அன்பைக் கொண்டே
ஆசையில் அணைப்பதாக
அமைவதே பிள்ளைச் செல்வம்!
 
கோடியாய்ப் பணத்தைச் சேர்த்து
குவித்துள மாடி வீட்டில்
ஓடியே ஆடிப் பாடும்
ஒரு மகவில்லை என்றால்
வாடிடும் நிலைமை அன்றோ
வளர்ந்திடும் வாழ்நாள் எல்லாம்!
கூடிவாழ் குடும்பம் தன்னில்
குழந்தையால் குலவும் பாசம்!
 
தழைத்திடும் மரக்கிளைகள்
தரைதொடும் விழுது பெற்றால்
பிழைத்திடும் ஆயுள் நீளும்
பெருகிடும் இனவளர்ச்சி!
மழலைவாய்மொழி மணக்கும்
மனமெலாம் பூக்காடாகும்
குழந்தையின் விழிவெளிச்சம்
குடும்பத்தில் ஒளி யளிக்கும்!

No comments:

Post a Comment