Wednesday, September 26, 2012

சிந்திப்போமா?

சிந்திப்போமா?
 
பொழுதெல்லாம் புழுதியிலே கிடப்போனுக்குப்
.. பூமணமும் ஒவ்வாமை நோயுண்டாக்கும்
அழுதிருப்போன் போல் முகத்தை வைத்திருப்போன்
.. அகமகிழ்ச்சி நிறைந்தவனாய் இருக்கக்கூடும்!
விழுதுகளே சிலமரத்தை வேர்போல் தாங்கும்
.. விடியாத இருளினிலும் விளக்கம் தோன்றும்!
முழுதுணர்ந்தோர் சிறுபிழையில் சிக்கக் கூடும்
.. மூளியில்லா முழுமையெனல் முயற்கொம்பே தான்!
 
கழுதையது மிக அதிகம் பொதிசுமுக்கும்
.. கனவேகக் குதிரையும்தான் குழியில் தள்ளும்!
பழுதுகளும் பாராட்டப் பலரைச் சேர்க்கும்
.. படித்தவர்க்கும் பணம்பெருகக்குணங்கள் சாகும்!
உழுபவர்கள் அழுதாலும் கண்ணீர் இல்லை
.. ஊரேய்ப்போர் தன்னலத்துக்(கு) அழுதும் ஏய்ப்பார்!
பழுப்பதற்குள் பறித்துவிடப் பதைப்போர் உண்டு
.. பண்பாட்டில் மண்ணிடுவோர் பாரை ஆள்வார்!
 
இயற்கையிலே உள்ளஒவ்வொன்றும் தத்தம்
.. இயல்பினிலே பலவாறாய்ச் சார்ந்து வாழச்
செயற்பாட்டில் மனிதன் ஏன் சேர்ந்து வாழும்
.. சிந்தனைசெய் மனமிருந்தும் சிதைவே எங்கும்!
வயலுழுவோன் வாடுகின்றான் உழைத்துழைத்து
.. வயிற்றுக்குச் சோறிடுவோன் வாய்க்குத் தாகம்!
முயற்சியின்றி ஒருசிலரே முடிமன்னர்போல்
.. முன்னேற்றம் காண்பதுவா? சிந்திபோமா?

No comments:

Post a Comment