Tuesday, September 18, 2012

ஒழிக்கப்பட வேண்டியது எது?

ஒழிக்கப்பட வேண்டியது எது?
 
விருத்தத்தில் புகழ்பெற்ற கம்பனுக்கு
.. விழாக்களை நாம் எடுக்கிறோம் கவியரங்கில்
வருத்தத்தை வளர்க்கின்ற நிலைதான் இன்று
.. வரப்பில்லா வயலாகப் புதுமை யென்று
புகுத்துவதாய் மரபுதனை மறுத்தும் மாய்த்தும்
.. புறபோக்குத்தனமாக உரையொடிப்பார்!
மிகுத்துவரும் மீறல்கள் மாற்றம் என்று
.. மேல்மட்டம் பறைகொட்டிச் செக்கிழுக்கும்!
 
அளவில்லா எண்ணங்கள் அகத்தே தோன்ற
.. அளவுக்கு மீறாத அமைப்பில் சொற்கள்
வளமாக வெளிப்பட்டால் வனப்பாய்ப் பூக்கும்
.. வண்ணத்தால் கவிதையென மதிப்பை ஏற்கும்!
களமெதுவாய் இருந்தாலும் கட்டுக்கோப்பில்
.. கறைதோன்றாக் காட்சியதே கலையாய் ஆகும்!
குளத்துக்கும் ஆற்றுக்கும் கரைகள் உண்டு
.. கூறுகவிக் கில்லையென்றால் கறையாகாதோ?
 
இப்படித்தான் கவியிருக்க வேண்டும் என்றார்
.. எப்படியும் இருந்திடலாம் என்பார் இன்று!
எப்படியோ இருக்கட்டும் எடுத்துச் சொல்லும்
.. இயல்பினிலே ஒலி ஒழுங்கும் ஒழிதல் நன்றா?
தப்பிதமாய்க் கவித்துவத்தில் தலையைக் கண்டால்
.. தமிழ்ச்சொற்கள் பிறமொழிக்குள் தவிக்கும் கோரம்!
ஒப்புகின்ற பொருள்விளங்கச் செய்யும் பாங்கில்
.. ஒத்துழையாமை இயக்கம் தலைஏன் காட்டும்?
 
தனக்காக வாகவிதை எழுதுகின்றான்?
.. தள்ளுபடியாகும் சொல் தமிழா பாட்டில்?
மனம்போன செயலுக்கு மதியெதற்கு?
.. மரபென்றால் தொன்றுதொட்டுத் தொடரும் நல்ல
சுனைநீராய்த் தூய்மையுடன் சுவைக்கக் கண்டும்
.. துப்பிடுமாறுள்ளதையா ஒப்ப வேண்டும்?
தினமாற்றும் வினைவிளைவில் புதுமையோடு
.. திகழ்கின்ற பொதுமரபைப் போற்றுவோமே!

No comments:

Post a Comment