Tuesday, July 31, 2012

கதி மாறும் கவிதை

கதி மாறும் கவிதை
 
பிழையாக எழுதியதைச் சுட்டிக் காட்ட,
.. பெருங்கோபம் கொள்பவனும் கவிஞன் தானா?
அழைப்பதற்கோர் அடைமொழியைத் தானே சொல்லி
.. ஆனந்தப் படுவதன்றிப் பிழையை மாற்றான்!
தழைத்துள்ள மொழியறிவை வளர்த்துக் கொள்ளல்
.. தகும்தானே! அப்போதே கறந்த பாலை
வழியத்தான் காய்ச்சியது கெட்டுப் போனால்
.. வடிகட்டிக் குடிப்பாரா? கொட்டு வாரா?
 
கவித்துவத்தை நாம்கறந்த பாலாய்க் கொண்டால்
.. காட்டுமதில் மொழிக்கலப்போ பிழையோ நன்றோ?
செவிக்கினிய சொற்களினால் பொருள் பொருந்தச்
.. செய்யாமல் நயபாவ எழிலுமின்றி
அவியலெனக் காட்டுதலே புதுமை என்றே
.. அதிமேதைத் தனமாக அகந்தை யோடு
குவிக்கின்றேன் கட்டுகோப் பெதற்காம் என்பார்
.. குழப்புதலும் கவித்திறத்தின் புதுமை யாமோ?
 
இலக்கணம் என்பதன்பொருளே அழகு தானே?
.. இதைமறுப்போர்க் கேற்பட்ட இன்னல் யாதோ?
பலமொழியார் பாராட்டும் குறளைத் தந்தான்
.. பாட்டனவன் ஈரடியால் உலக ளந்தான்
நலம்கூடும் கருத்தெதனைப் புதிதாய்ச் சொல்ல
.. நான்வேண்டேன் இலக்கணக் கட்டுப்பாடென்பான்!
சில ஆண்டு கடந்தாலும் என்றோ வந்த
.. சேதிசொல்லும் உரைநடையும் புதுப்பா தானே?

No comments:

Post a Comment